ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 2, 2022

அழிவில்லா மகத்துவம் எது…? - ஈஸ்வரபட்டர்

 

கோபம் என்ற கார நெடி உணர்வில் மோதியவுடன் நம் சரீர உணர்வில் இயக்கம் தாங்காமல் துரித கதியாகிறது. அப்பொழுது... “சாந்தம்...” என்ற நல் ஒலியை நாம் எடுக்கும் பொழுது அக்காரத்தின் நெடி வீரமாகின்றது

1.அந்த வீரத்தை முலாம்படுத்தும்
2.ஆத்மாவின் ஆத்ம வளர்ச்சிக்கு... வீரியத் தன்மையை வளர்த்துக் கொள்ளும் ஆயுதம் தான்
3.நமக்கு ஏற்படும் எதிர்நிலையின் “கோப நிலையின் காரம்…”
4.வீரம் என்ற வீரிய சக்திக்கு “முலாம்”.

இதைப் போன்றே சலிப்பு சோர்வு என்ற ஒவ்வொரு குண நிலைகளுக்கும் உணர்வின் எண்ணத்தை உப்பு புளிப்பு காரத்தை எதில் எத்தன்மை கொண்டு சேர்த்துச் சுவையாக்கிச் சமைத்து… சரீரத்திற்கு உட்கொள்ளும் உணவைப் போன்று இந்த ஆத்மாவிற்கு வாழ்க்கையை ஒட்டிய எதிர்நிலைகளைச் சமைக்கக்கூடிய நல் குணங்களாக்கிச் சத்தாக்க வேண்டும்.

தனி உப்பையும் தனிக் காரத்தையும் தனிப் புளிப்பையும் உடல் ஏற்பதில்லை. அறுசுவையும் உண்டு பழகிய உடலுக்கு எப்படி அவ்வெண்ணத்தில் தன் சுவைக்கொப்ப ஆகாரத்தைச் சரீர உணர்வு நாடுகின்றதோ அதைப் போன்று
1.நாம் மனிதனிலிருந்து மகானாகும் சக்தி எடுக்க
2.ஆத்மாவைப் புனிதப்படுத்தும் சுவையான நற்குணத்தைச் சமைக்கும் ஆலயமாக
3.இந்த உடலை உயிர் என்ற தெய்வம் குடி கொண்ட நிலையில்
4.நாம் எண்ணத்தை உயர்த்தி நம் ஆத்மாவை ஒளியாக்கிக் கொள்ள வேண்டும்.

பல கோடி ஆண்டுகளாகப் பிறப்பின் தொடரில் பிறப்பெடுத்த நம் உயிர் ஆண்டவனை ”ஒளி ஆண்டவனாகச் செயல்படுத்துவது - இவ்வெண்ணம் தான்...!”

எண்ணம் என்ற பகுத்தறிவின் நிலையைப் படைப்பின் உயர்வில் பெற்ற இத்தருணத்தைத் தவறவிடாமல்... சேவை என்பதன் பொருளே உயர் தன்மையை வளர்க்ககூடிய சேவை தான் என்பதை இயற்கையின் உண்மையில் உணர்ந்திடல் வேண்டும்.

ஏனென்றால்
1.சரீர கௌரவம் அழியக் கூடியது
2.ஆத்மாவின் உயர்வு தான் அழிவில்லா மகத்துவம்.

இதன் தொடரில் சூரியனைப் போன்ற ஒளி ஈர்ப்பாக உயிராத்மாவை வைரமாக்குங்கள்.. என்றுமே அழிவில்லா “ஜொலிப்பாக...!”