ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 3, 2019

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் எப்படி வாழ்வது…? - அனுபவம்

உதாரணமாக எல்லோருமே செல்ஃபோன் (MOBILE PHONE) உபயோகிக்கின்றோம். பக்கத்தில் பக்கத்தில் இருந்து ஃபோனில் தொடர்பு கொண்டாலும் இன்று அது விண்ணிலிருக்கும் செயற்கைக் கோளுக்குச் (SATELLITE) சென்று மீண்டும் அங்கிருந்து தான் கீழே வருகிறது.

பூமியின் எந்தப் பாகத்தில் எவ்வளவு தொலைவில் இருந்து பேசினாலும் அதே மாதிரித்தான் தொடர்பு கொள்ள முடியும்.

இதே மாதிரி இன்று செல்ஃபோனில் புளூ டூத், வைஃபை (BLUE TOOTH, WIFY) உபயோக்கின்றோம். இவையெல்லாம் பக்கத்திலேயே தான் தொடர்பு கொள்ள முடியும். தூரத்திற்குச் சென்று விட்டால் தொடர்பு கிடைக்காது. (இதெல்லாம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்)

அது போல் விண்ணிலிருக்கும் மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு அந்த வட்டத்திற்குள் செல்ல வேண்டும் என்றால்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணினால் அது மிகச் சிறிய வட்டம்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணினால் அது அடுத்த வட்டம்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் பெறவேண்டும் ஈஸ்வரா…! அதற்கடுத்த வட்டம்.
4.மகரிஷிகளின் அருள் சக்தி ஊரில் உள்ளோர் நாட்டு மக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி உலகம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்றால் ஓரளவிற்கு இது பெரிய வட்டம்.

ஆனாலும் மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டம் என்பது சாமிகள் (ஞானகுரு) சொன்னதைப் பதிவு செய்து அதன் வழி சப்தரிஷி மண்டலத்தையும் துருவ நட்சத்திரத்தையும் எண்ணினால் சப்தரிஷி மண்டலத்திற்குள்ளும் துருவ நட்சத்திரத்திற்குள்ளும் நம் நினைவலைகள் ஊடுருவிச் செல்கிறது.

1.அங்கிருந்து சக்திகளை எடுத்து நம் ஆன்மாவில் இணைக்கும் பொழுதும்
2.அதை மற்றவர்களுக்கு இணைக்கும் பொழுதும் அது ஒரு சுழற்சி வட்டமாக நம் ஈர்ப்புக்கு வரும்.

அதே சமயம் சாமிகள் சொன்ன
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்வின் ஆற்றல்படி
2.2000 சூரியக் குடும்பம் என்ற நிலைகளை இணைத்து
3.நம் நினைவலைகளை அகண்ட அண்டத்துடன் இணைத்தால்
4.அதாவது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுடன் கலந்து நம் நினைவினை அகண்ட நிலையில் செலுத்தினால்
5.அது மகரிஷிகளின் அருள் வட்டமாகும். மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டமாகும்.

அதற்குள் இணைந்து…
அதை நுகர்ந்து…
அதைக் கவர்ந்து…
அதைச் சுவாசித்து…
அதை நமக்குள் இழுத்தால்…
நம் ஈர்ப்பு மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.

ஒவ்வொரு நொடிப் பொழுதும் இவ்வாறு அங்கிருந்து எண்ணினால் நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்கிறோம் என்று அர்த்தம். அப்பொழுது நாம் புவியின் ஈர்ப்பில் இல்லை என்று உணரலாம்.

2014ஆம் ஆண்டு டிசம்பர் கடைசியில்… சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக நான் முயற்சி எடுத்துக் கொண்டிருந்த பொழுது மேலே (விண்ணிலே) என் நினைவுகள் சென்ற பொழுது குருநாதர் எனக்குச் சொன்னது…
1.மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் நின்று கொண்டு
2.நான் அந்த அலைகளைக் கவர்ந்து பூமிக்குள் பரவச் செய்து கொண்டிருக்கின்றேன்.

சப்தரிஷி மண்டலத்தைக் கண்களால் பார்த்து நீ என்ன செய்யப் போகிறாய்…?

விண்ணிலிருந்து அலைகளை இழுத்துப் பூமிக்குள் நான் பாய்ச்சுவது போல்… நான் செய்வது போல்… “இந்த வேலையைச் செய்… போடா...! என்றார்.

என்னால் முடிந்தவரை அவர் சொன்ன வேலையைச் செய்து கொண்டுள்ளேன்…!