ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 19, 2019

நற்குணங்களின் உணர்வைச் சுவாசமாக்கி… நல்ல மணமாக… நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஆராதனை செய்வோம்…!


ஒருவர் தீமை செய்கிறார்... எல்லோரிடம் கடுமையாகவும் இருக்கிறார்... அதனால் மற்றவர்கள் வேதனைப் படுகிறார்கள் என்ற உணர்ச்சிகளை நாம் சுவாசித்தால் என்ன செய்கிறது...?

நமக்கும் அந்த எரிச்சலைத் தான் ஊட்டுகிறது. அப்பொழுது எரிச்சலான உணர்வு தான் நம்மை ஆட்சி புரிகிறது. நம்மை ஆளும் ஆண்டவன் அதைத்தான் ஆட்சி புரிகிறது. இயக்குகிறது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா...?

நீங்கள் சாந்தமாகவோ ஞானமாகவோ சொன்னால் அது அடங்குமோ...? என்றால் இல்லை…! ஏனென்றால் அது கடும் விஷம். விஷத்தில் கொண்டு போய் நல்ல பாலையும் நல்ல மணம் கொண்ட சுவை கொண்ட பொருள்களைப் போட்டால் மயக்கம் தான் வருமே தவிர சிந்திக்கும் தன்மை வராது.

நம் உடலிலுள்ள தீமைகளைக் கழிக்கக்கூடிய உணர்வு ஆறாவது அறிவு “கார்த்திகேயா…!” வாழ்க்கையில் தீமை வருகிறது என்று தெரிகிறது. அப்பொழுது அதை மாற்றியமைக்க நாம் என்ன செய்ய வேண்டும்...?

தீமை என்ற உணர்வுகள் நமக்குள் பதிந்தாலும் “ஈஸ்வரா”என்று நம் உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

விநாயகர் கையில் என்ன இருக்கிறது...? அங்குசம் இருக்கிறது. பெரிய யானையாக இருந்தாலும் ஒரு சிறு அங்குசத்தால் அதை அடக்க முடிகிறது. அதைப் போல நாம் அந்தத் தீமைகளை அடக்கிப் பழக வேண்டும்.

எப்படி...?

நம்முடைய நினைவைக் கண்ணுக்குக் கொண்டு வந்து கண்ணின் நினைவை ஈஸ்வரா...!” என்று உயிருடன் ஒன்ற வேண்டும். ஏனென்றால் கண் வழி கவர்ந்த உணர்வுகள் உயிருக்குள் பட்டபின் தான் அந்த உணர்வை உயிர் இயக்கச் சக்தியாக மாற்றுகிறது... உணர்ச்சிகளாக ஊட்டுகிறது.
1,ஆக நாம் சுவாசிக்கக்கூடியதை எல்லாம்
2.நம் உயிர் அகக்கண்ணாக இருந்து
3.உள் உணர்வாக உணர்த்துகிறது. 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா என்று வேண்டி
1.நம் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தப்படும் போது
2.காற்றிலே பரவி வரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகர முடிகிறது.

இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நம் இரத்தத்தில் கலக்கச் செய்யும் பொழுது இரத்தங்களிலே கலந்த தீமையின் வீரியத் தன்மையைக் குறைக்கச் செய்கிறது. ஒவ்வொரு நிமிடமும் அந்த அருள் உணர்வுகளை நமக்குள் எடுத்துப் பழக வேண்டும்.
.

இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் பரப்பப்படும் போது அந்த உணர்வுகள் இரத்தங்களில் கலந்து “ஆராதனையாகின்றது...!”

அப்படியென்றால் நாம் வெளிச்சத்தைக் காட்டுகிறோம் என்று அர்த்தம். அந்த உணர்வின் இயக்க ஒளியை உள்ளுக்குள் காட்டும் போது நமக்குள் வந்த இருள் சூழும் உணர்வின் தன்மைகளை அது அடக்குகிறது.

அதன் பின்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும்.
2.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
3.மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர்கள் பெற வேண்டும்.
4.அருள் உணர்வுகள் அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று இந்த உணர்வுகளை நாம் எடுத்தோமானால்
5.நம்மை ஆளும் ஆண்டவனுக்கு அது ஆராதனையாகின்றது.

கோவிலில் சாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள் இல்லையா...! மலரையும் பன்னீரையும் விட்டு அபிஷேகம் செய்கிறார்கள். கனிகளையும் மற்ற பதார்த்ததையும் இணைத்துப் பஞ்சாமிர்தமாகவும் சிலைக்கு ஊற்றுவார்கள்.

ஏனென்றால் சாமி சிலைக்கு ஊற்றுவது முக்கியமல்ல…!

அருள் உணர்வுகளை நுகர்ந்து அந்த எண்ணங்களாக நம் உயிருக்குள் படரச் செய்யும் பொழுது அந்த உணர்வின் இயக்கமாக “மகிழ்ச்சி…!” என்ற உணர்வுகள் வரும்.

அதைத் தான் தான் நற்குணங்களின் உணர்வுகளைச் சுவாசமாக்கி நல்ல மணமாக நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஆராதனை செய்வோம் என்று சொல்வது...!

ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மையை எடுத்து நமக்குள் செலுத்தும் போது “விஷ்ணு தனுசு…!”
1.நம் உடலிலே சேர்த்த உணர்ச்சிகளை இயக்க விடாது - அதாவது சிவ தனுசை இயக்காது…
2.உயிரை எண்ணி அருள் உணர்வை நமக்குள் செலுத்தினால்
3.இது விஷ்ணு தனுசாக மாறி தீமையின் உணர்வின் நிலைகளை அடக்குகிறது.
4.ஒளியின் உணர்வாக நம்மை மாற்றுகிறது.

இதை எல்லாம் சாதாரண மக்களுக்கும் தெரிய வைப்பதற்காகக் காவியங்கள் மூலம் ஞானிகள் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்