ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 8, 2019

எண்ணியது நடக்கவில்லை... கிடைக்கவில்லை...! என்றால் அதை எப்படி மாற்றுவது...?

மாடு ஆடு இவைகள் எல்லாம் அதிலே ஒன்று செத்துப் போனது என்றால் பார்த்து விட்டுப் போகும். ஒரு யானையாக இருந்தாலும் தன் இனம் செத்துப் போனது எனறால் ஒன்று சேர்ந்து கூட இருந்து விட்டுப் போகும். வேறு ஒன்றும் செயல்படுத்த முடியாது.

ஆனால் புலி ஓநாய் இதுகளை எல்லாம் பார்த்தோம் என்றால் மோந்து பார்க்கும். நல்ல இரையாக இருக்கிறதா...? அல்லது கெட்டுப் போய்விட்டதா...? நமக்கு ஏதாவது இரைக்கு ஆகுமா...? என்று இந்த  உணர்வின் தன்மையை அது நுகர்கின்றது. கொன்று புசிக்கும் உணர்வு கொண்ட உயிரினங்கள் இப்படித்தான் நுகர்ந்து பார்க்கும்.

1.சாந்தமான மிருகங்கள் பார்த்துவிட்டுப் போகிறது.
2.ஆனால் கொன்று புசிக்கும் மிருகங்களோ தனக்கு இரைக்கு ஆகுமா...? என்று பார்க்கிறது.
3.காட்டுக்குள் வைத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இந்த இரண்டு வித்தியாசத்தையும் காட்டுகிறார்.
4.இது எல்லாம் அனுபவபூர்வமாகக் கொடுத்தது.
ஆகவே நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்களைச் சந்திக்கின்றோம். அதன் வழியில் வளர்த்துக் கொண்ட பல கோடி குணங்கள் நம் உடலுக்குள் உண்டு.

ரோட்டில் போகும் போது ஒருவன் வேதனைப்படுகின்றான். பார்த்தவுடனே அடப்பாவமே...! நல்ல மனிதனாக இருக்கின்றான்... இப்படி ஆகி விட்டதே...! யார் பெற்ற பிள்ளையோ...? என்று
1.பரிவு கொண்ட மனமும் இரக்கம் கொண்ட குணமும் தர்மம் செய்யும் எண்ணங்கள் கொண்டவர்களுக்கு
2.இத்தகைய எண்ணங்களைத்தான் எண்ணி ஏங்கிப் பெறச் செய்கிறது.
3.இந்த எண்ணம் இருந்தால் தான் நாம் அவனுக்கு உதவியே செய்வோம்.
4.இல்லை என்றால் அசுர குணங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு போய் கொண்டே தான் இருப்போம்.
5.உதவி செய்தாலும் அவன் பட்ட வேதனையான உணர்வுகளை நமக்குள் நுகர்ந்ததைத் தூய்மைப்படுத்துகின்றோமா...? என்றால் இல்லை.

இதை யாரும் செய்வதில்லை. உதவி செய்தோம் என்று அப்படியே சென்று விடுகின்றோம், ஆனால் நுகர்ந்த வேதனை நம்மையும் வேதனைப்படச் செய்யும் என்று அறியவில்லை.

அடுத்தாற்போல் நாம் செயல்படுத்தும் காரியத்தில் தோல்வி அடைந்து விட்டால் என்ன நினைக்கின்றோம்...? எல்லோருக்கும் நான் உதவி செய்தேனே...! எனக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற நிலையில் (முதலிலே நாம் சுவாசித்த) அந்த வேதனை உணர்வுகள் இயக்கி நம்மைச் சோர்வடையச் செய்கின்றது.

சோர்வு என்ற நிலைகள் உருவாக்கப்படும் போது சிந்திக்கும் வலு இழக்கப்படுகின்றது... மாற்றங்கள் ஆகின்றது...! சிந்திக்கும் தன்மை மாற்றம் ஆகப்போகும் போது அடுத்து தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் “விஷமாகின்றது...!”

இப்படி அந்த வேதனை என்ற உணர்வு மூன்றும் சேர்த்து கருவாக்கி இந்த உயிர் அந்த அணுவாக உருவாக்கி விடுகின்றது. மீண்டும் நான் நினைத்தேன்... வரவில்லையே...! என்று எண்ணுவதும் சாமி (ஞானகுரு) சொன்னார்... இது கிடைக்கவில்லையே...! என்றுதான் அப்பொழுது எண்ணுவீர்கள்.

அதை வளர்த்துக் கொண்டால் கீழே தான் போக முடியுமே தவிர உயர்ந்த நிலை பெற முடியாது.
1.சாமியை எண்ணுவீர்கள்.
2.ஆனால் சாமி சொன்னதை விட்டுவிடுவீர்கள்.

வயலில் களை முளைத்திருக்கிறது. அந்தக் களையை எடுங்கள்... என்று சொன்னால் களையை எடுப்பதற்குப் பதில் நல்ல செடி முளைத்தைத் தட்டி விட்டால் என்ன செய்யும்...?

நல்ல வித்தினை விவசாயப் பண்ணைகளில் வாங்கி விதைக்கின்றீர்கள். வளர்ந்த நிலையில் அதிலே இருக்கும் களைகளை எடுங்கள் என்று சொன்னால் முளைத்த நல்ல செடியையும் சேர்த்துப் பிடுங்கி விட்டால் எல்லாம் போய்விடுமல்லவா...!

அது போல் அருள் ஞானிகளின் வித்துக்களை உங்களுக்குள் ஆழமாக ஊன்றியுள்ளோம். களை (தீமைகளை) நீக்கும் போது களைகளை நீக்குவதற்குப் பதில் நல்லதையே வீழ்த்தி விடுகின்றோம். ஏனென்றால்
1.நல்ல குணத்துடன் இருக்கும் நாம் உயர்ந்த நிலைக்குச் செல்லப்படப்போகும் போது
2.சந்தர்ப்பத்தால் தீமையான உணர்வுகள் நமக்குள் கலந்தவுடன் அந்த நல்லதை அடக்கி விடுகின்றது.
3.அடக்கி விட்டால் மீண்டும் நினைவு எதிலே வரும்?
4.ஒரு காரியத்தில் இறங்கும் போதெல்லாம் தன்னைச் சோர்வடையச் செய்யும்.
5.வேதனை என்ற நிலைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கும்.

நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்ற நிலையில் விஷமான உணர்வை இணைத்து விட்டால் நமக்குள் இருக்கும் நன்மைகளைப் பிரித்தேவிடும். நல்லதைச் செயல்படுத்த முடியாதபடி ஆக்கிவிடும்.

அப்பொழுது அந்தத் தீமைகளே நம் உடலில் அதிகமாக விளையும். இதைத் தடுக்க வேண்டுமல்லவா...! சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நாம் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வை எடுத்து வரும் தீமைகளிலிருந்தெல்லாம்  மீள வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்துத்தான் மனிதனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்றும் வந்திருக்கின்றோம்.

ஆனால் இத்தனையும் கடந்து வந்த நிலையில் தன் இச்சையின் உணர்வு கொண்டு நிறைவேறவில்லை என்று மீண்டும் சோர்வும் வேதனையும் இது உருவாக்கும் அணுவின் தன்மை வரப்போகும் போது நல்ல குணங்களை அடக்கிவிடுகின்றது.

நல்லதை அடக்கிய பின் அதனுடன் இணைந்து செயலாக்கும் உணர்வின் கருவாக உடலுக்குள் நம் உயிர் உருவாக்கி விட்டால் நாம் நல்லதைச் செயல்படுத்த முடியாது.

இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் ஈஸ்வரா..! என்று புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் தடுக்க வேண்டும் என்று பல முறை சொல்லியிருக்கின்றேன்.

அரும் பெரும் சக்தியாக ஆத்ம சுத்தி என்ற கடுமையான ஆயுதத்தை உங்களிடம் கொடுத்து இருக்கிறேன். ஒரு இரண்டு நிமிடம் எண்ணி எடுப்பதற்கு என்ன...?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா...! என்று எண்ணி இணைத்துக் கொள்ளுங்கள்.

சிரமம் வரும் பொழுதெல்லாம் இப்படி அந்த வேதனை என்ற உணர்வை அடக்கி அருள் ஒளியின் அணுக்களைப் பெருக்கினால் நம் எண்ணம் என்ன செய்யும்...? அந்தத் துருவ மகரிஷியை எண்ண வைக்கும். துருவ நட்சத்திரத்துடன் ஒன்றச் செய்யும்.

ஆகவே அந்த ஞான வித்தினை இப்படிப் பக்குவப்படுத்தி வளர்த்தால் அருள் வாழ்க்கை வாழச் செய்யும். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.