ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 1, 2019

மணத்தை மாற்றி… “மனதை மாற்றும் வழி…!” - அனுபவம்


அணுவின் ஆற்றலை அறிந்தவன் அகஸ்தியன்.  அகஸ்தியன் காட்டிய அருள் வழிப்படி வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றும் எல்லா அணுக்களிலுமே உண்டு. இந்த மூன்றும் எங்கும் எதிலும் சேர்ந்து கொள்ளும்.

நான்காவது மணம். அணுவிற்குள் இருக்கும் விஷம் அந்த மணத்தை இயக்கப்படும் பொழுது உணர்வின் இயக்கம் ஐந்தாக மாறுகிறது. எந்த மணமோ அதற்குத்தக்க உணர்வாகத் தான் அந்த அணு இயங்கும்.

ஆகவே ஒரு அணுவின் இயக்கத்தை மாற்ற வேண்டும் என்றால்
1.அணுவிற்குள் இருக்கும் மணத்தை மாற்றினால் தான்
2.அதனின் இயக்கத்தை மாற்ற முடியும்.
3.தியானம் செய்பவர்கள் இதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
4.அதாவது நம் மனதை மாற்ற வேண்டும் என்றால் நாம் சுவாசிக்கும் (சுவாசத்தை) மணத்தை மாற்ற வேண்டும்.

உதாரணமாக ஒருவர் நமக்குப் பிடிக்காத நிலையில் தீமையான உணர்வுகளை நம்மிடம் பேசிக் கொண்டிருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

இப்படிப் பேசுகிறாரே…! என்று எண்ணினால் நம் நல்ல மனம் கெடுகிறது. நம் நல்ல உணர்வின் இயக்கமும் மாறிவிடுகிறது.

அப்பொழுது அவர் பேசுவதை நம்மால் நிறுத்த முடியவில்லை…. நம்மாலும் அங்கிருந்து விலக முடியவில்லை…! என்றால் அந்தச் சமயம் நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.அவர் பேசி வெளிப்படுத்தும் உணர்வுக்குள் இருக்கும்
2.வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றையும் ஆற்றலாக நாம் எடுத்து
3.அதன் துணை கொண்டு மகரிஷிகளின் ஆற்றலை - “அந்த மணத்தை அதிகமாக நாம் சுவாசிக்க வேண்டும்…!

அந்த மகரிஷிகளின் அருள் மணத்தை நமக்குள் எடுத்து எடுத்து வலிமையாக்கி யார் நம்மிடம் பேசுகின்றாரோ அவருக்குள் பாய்ச்ச வேண்டும்.

ஆனால் அவர்கள் எதை எதையோ பேசிக் கொண்டே இருப்பார்கள். அது காதில் விழுந்தாலும் அதை நமக்குள் கொண்டு செல்லாமல் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நல்லதை உருவாக்கும் ஆற்றலாக மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும்.

அவர்கள் பேசப் பேச நமக்குள் மகரிஷிகளின் ஆற்றல்கள் கூடிக் கொண்டிருக்கும். அப்பொழுது நம்மிடமிருந்து வெளி வரும் மணம் (மூச்சலைகள்) மாறுகிறது. நம் மனம் மாறுகிறது.

இந்த மகரிஷிகளின் மணம் அதிகமாக நம்மிடமிருந்து வெளிப்படும் பொழுது அதை அவர்கள் சுவாசித்ததும் தேவையில்லாது பேச்சுகளைப் பேசுவதை நிறுத்திக் கொண்டு விலகி விடுவார்கள்.

இது தான் ஆத்ம சுத்தி. இதை வலுப்படுத்திக் கொள்வதே தியானம்,  இந்த மாதிரியான அனுபவம் மிக மிக முக்கியமானது.

ஏனென்றால் தங்கத்துடன் கலந்த செம்பையும் வெள்ளியையும் திரவகத்தை ஊற்றினால் தான் பிரிக்க முடியும். அது போல் யார் எதைப் பேசினாலும் அதிலுள்ள தீமையைப் பிரிக்கும் நிலையாக
1.நம் கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி
2.அவர்கள் பேசும் உணர்வினை “அந்த இயக்கத்தை நேரடியாக எதிர்க்காமல்…!
3.அவர்கள் பேசும் உணர்வில் வெளிப்படும் வெப்பம் காந்தம் விஷம் இவைகளை வைத்து
4.நாம் எடுக்க விரும்பும் மகரிஷிகளின் மணங்களைக் கவர்ந்து கொண்டேயிருக்க முடியும்.

அவர்கள் தவறாகப் பேசப் பேச நாம் இவ்வாறு செய்தால் இன்னும் அதிகமாக மகரிஷிகளின் மணங்களைக் கவர முடியும். நமக்குள் மெய் உணர்வுகள் அபரிதமாக வளரத் தொடங்கும். பிற உணர்வுகள் நம்மை இயக்க முடியாது.

செய்து பாருங்கள்…! தீமைகள் நம்மை அணுகாது. நல்ல சக்திகளை நாம் பெறக்கூடிய சந்தர்ப்பமாக இது உருவாகும்.