ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 10, 2019

மிக மிகக் குறைவான நேரத்தில் தியானத்தின் மூலம் அதீத சக்திகளைப் பெற முடியும்…! எப்படி…? – அனுபவம்


கேள்வி:-
நான் ஷிப்ட் வேலையில் பணிபுரிகிறேன். சில நேரங்களில் OVER TIME பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஷிப்டில் உள்ள போது குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய தியான முறையைக் கூறுங்கள்.

பதில்:-
குறைந்த நேரம் செய்யக் கூடிய தியானம் அல்லது கூடிய நேரம் செய்யும் தியானம் என்று எதுவும் கிடையாது.

எவ்வளவு நேரம் தியானம் செய்கிறோம் என்பதை விட எந்த அளவுக்கு அழுத்தமாக நாம் தியானிக்கின்றோம் என்பது தான் மிகவும் முக்கியம்.
1.அழுத்தம் அதிகமானால் வெப்பம் கூடும்.
2.வெப்பம் கூடினால் கவரும் சக்தியான காந்தம் கூடும்.
3.கவரும் சக்தி கூடினால் அதிக ஆற்றல் கிடைக்கும்.

நாம் செய்யும் தியானத்தின் அழுத்தத்தை அதிகமாக்க வேண்டும் என்றால் ஞானகுருவின் உபதேசங்களை அதிகமாக ஆழமாகப் பதிவாக்க வேண்டும். அதுவும் குறிப்பாக நாம் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் அதனுடன் இணைத்து அதையும் கேட்டுக் கொண்டே… பதிவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்…!

சிலர் சொல்வார்கள். சாமிகள் உபதேசம் சரியாக அர்த்தம் ஆகாது. அதனால் அமைதியான நேரத்தில் கேட்டால் தான் நல்லது என்பார்கள். தினசரி வாழ்க்கையில் அமைதியான நேரம் என்பது எப்பொழுது வரும் என்று யார் சொல்ல முடியும்...?

ஆனால் சாமிகள் தன்னுடைய உபதேசத்தைப் பற்றி அவர் சொல்லும் பொழுது
1.இதை அர்த்தம் தெரிந்து எடுப்பதைக் காட்டிலும்
2.உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்
3.திரும்பத் திரும்பக் கேட்டுப் பதிவாக்குங்கள் என்று தான் பல முறை சொல்லியுள்ளார்,

உதாரணமாக சினிமாப் பாடலாக இருந்தாலும் சரி அல்லது மற்ற எந்தப் பாடலாக இருந்தாலும் சரி அதை எல்லாம் நம் மற்ற வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது தான் கேட்டு மகிழ்கிறோம்.

ஒரு பாடலை எத்தனை முறை கேட்கிறோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு தடவை தான் கேட்கிறோமா…? இல்லையே..! அதே சமயத்தில் பாடல் பிடிக்கவில்லை என்றாலும் பத்துப் பதினைந்து தடவை கேட்கும்படியான சந்தர்ப்பம் வந்துவிட்டால் உங்களை அறியமாலே அந்தப் பாடலை நீங்களே பாடுவீர்கள்.

இதற்கு நல்ல உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் டி.வி.யிலோ அல்லது FM ரேடியோவிலோ விளம்பரங்களை அடிக்கடி சொல்லும் பொழுது அது எல்லாம் அப்படியே நமக்குள் பதிவாகின்றது.
1.அழுத்தம் என்பதற்கு அர்த்தமே இது தான்.
2.பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ… அது முக்கியமில்லை…!
3.நாம் எந்த அளவுக்கு அதைப் பார்க்கின்றோமோ அல்லது கேட்டுப் பதிவாக்குகின்றோமோ அது தான் முக்கியம்.

நீங்கள் டி.வி விளம்பரங்களை உற்றுப் பார்க்கின்றீர்களா..? இல்லை…! ஆனாலும் திரும்பத் திரும்பப் பார்க்கும் பொழுது அது நமக்குள் பதிவாகின்றது. அடுத்து அந்தப் பதிவானது அதன் அறிவாக நம்மை இயக்குகிறது.

அது போல் தான்
1.ஞானகுருவின் உபதேசக் கருத்துக்களைத் திரும்பத் திரும்பக் கேட்க...
2.எல்லா நேரத்திலும் (பாத்ரூமில் இருந்தாலும்) கேட்டுக் கொண்டேயிருந்தால்
3.ஒவ்வொரு நாளைக்கும் சாமிகள் சொல்லும் ஏதாவது ஒரு விஷயம் தனியாகப் புலப்படும் (அந்த நுண்ணிய உணர்வுகள்)
4.இப்படிப் பதிவாகும் உபதேசம் நாள்கள் மாதங்களாகி… மாதங்கள் வருடங்களாகும் பொழுது… நம் உடலில் உள்ள இரத்தங்களில் எல்லாம் அந்த அணுக்களின் அதீத பெருக்கமாகும்.
5.(குறைந்த பட்சம் ஆறு மண்டலமாவது பதிவாக்க வேண்டும் 6 X 48 = 288 நாள்கள்)

அப்படிப் பெருக்கமாகும் பொழுது குருவின் உணர்வுகள் நமக்குள் உணர்ச்சியைத் தூண்டும்… தூண்டிக் கொண்டே இருக்கும்…! அந்தத் தூண்டுதல் வந்துவிட்டாலே
1.ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் கண்ணின் நினைவு புருவ மத்திக்குச் சென்று
2.அங்கிருந்து பூமியின் வடக்குத் திசையில் துருவப் பாதையின் வழியாக துருவ நட்சத்திரத்துடன் மோதி
3.மோதிய வேகத்திலேயே துருவ நட்சத்திரத்தின் சக்திகளை அப்படியே உறிஞ்சி
4.உங்கள் உடலுக்குள்ளோ உடல் உறுப்புக்குள்ளோ அல்லது அடுத்தவருக்குள்ளோ மற்ற பொருளுக்குள்ளோ…
5.எங்கே செலுத்த வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அங்கே அதைச் செலுத்தினால்
6.அது தான்… “குறைவான நேரத்தில் எடுக்கும் மிக மிகச் சக்தி வாய்ந்த தியானமாகும்…!

இப்படி ஒரு நாளைக்குப் பத்துப் பதினைந்து தடவை எடுத்தால் உங்கள் எண்ணத்தில் அல்லது உங்கள் மனதில் காலையில் எழும் பொழுதும் இரவு படுக்கும் பொழுதும் இது தான் ஓடிக் கொண்டே இருக்கும்.

ஷிப்டும் ஞாபகம் இருக்காது. வேலையும் ஞாபகம் இருக்காது. ஆனால் எல்லா வேலையும் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாகச் செய்வீர்கள்.

அந்த வேலையும் சரியாக நடக்கும். அதே சமயத்தில் இந்தத் தியானத்தின் மூலம் அதீத அளவிலும் சக்தி பெற முடியும். (இடி மின்னல் சூறாவளி போன்று எடுத்துக் கொள்ள முடியும்).

தீமைகள் அதிகமாக வந்தால் அதை நீக்கி நல்லதாக்க இடி மின்னல் சூறாவளி போன்று நான் வருவேன் என்று ஈஸ்வரபட்டர் சொல்லியுள்ளார்.
1.நான் அவர் சொன்ன வழியில் தான் செய்து கொண்டுள்ளேன்.
2.மணிக்கணக்காகத் தியானம் செய்வதில்லை.

ஞானகுருவின் உபதேச LINK:- https://wp.me/P3UBkg-1Ia