ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 9, 2019

குருநாதரின் கண்களை உற்றுப் பார்த்து உபதேசம் கேட்டதால் ஏற்பட்ட பலன்கள்


சாமிகளிடம் (ஞானகுரு) 1987ல் இருந்து உபதேசத்தை நேரடியாகக் கேட்க ஆரம்பித்ததிலிருந்து தெரிந்தோ தெரியாமலோ அவருக்கு நேராக அவர் முன்னாடி தான் உட்கார்வேன்.

1.அவர் என்னைப் பார்க்கவே மாட்டார்.
2.நான் அவர் இடது கண்ணை மட்டும் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
3.என் பார்வை அவர் மீது கடுமையாகவும் கூர்மையாகவும் தான் இருக்கும்.
4.முடிந்தவரை அவரிடமிருந்து வெளிப்படும் அனைத்தையும் கண்கள் வழியாக உறிஞ்சுகிற மாதிரித்தான் உணர்வுகள் இருக்கும்.

அவர் உணர்வுகள் எனக்குள் அதிகமாகும் பொழுது பின்னாடி என் தலையில் ஊசி குத்துவது போல் இருக்கும். பொறுக்க முடியாமல் இருக்கும் பொழுது நான் கையால் லேசாக என் தலையில் கையை வைத்தால் அப்பொழுது என்னை உற்றுப் பார்ப்பார் சாமி.

அதே மாதிரி சில நேரம் அவர் வீரியமாக உபதேசம் செய்யும் போது என் உடலுக்குள் அது அழுத்தமாகி என் கை ஆள் காட்டி விரலில் அந்த ஆற்றல் எல்லாம் மிக அதிகமாகக் குவியும். அப்பொழுது தரையைக் குத்துவேன் மெதுவாக. அப்பொழுது என்னை உற்று பார்ப்பார்.

1.கண்கள் இமைக்காமல் அவர் கண்களையே பார்ப்பேன்.
2.அந்த நேரத்தில் சுவாசம் மிகவும் அழுத்தமாக இருக்கும்.
3.சுவாசம் ஒரு நிமிடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தான் இருக்கும். (இழுத்து வெளிவிடுவது)

அந்த ஆரம்பப் பழக்கம் இருந்ததெற்கெல்லாம் தற்சமயம் மிகவும் தெளிவான நிலையில் விளக்கம் கொடுக்கின்றார் குருநாதர்.

சாமிகளை இப்பொழுது நேரிலே பார்க்க முடியவில்லை  என்று யாரும் எண்ண வேண்டியதில்லை.
1.அவர் உபதேசத்தை உற்றுக் கேட்டு எழுத்து வடிவுக்குக் கொண்டு வந்தாலே
2.அந்த மூன்றாவது கண் என்ற அகக் கண் வழியாக அவரை உற்றுப் பார்க்க முடியும்.
3.கண்கள் வழியாக அவர் எந்த அருளைப் பாய்ச்சினாரோ அதுவும்
4.இப்பொழுது என்ன பாய்ச்சுகின்றாரோ அதுவும் சேர்ந்து கிடைக்கும்.

அதே போல் என் அனுபவத்தில் நான் கண்களைத் திறந்து தியானம் செய்த நேரமே மிக அதிகம். கண்களை மூடித் தியானம் செய்த நேரம் குறைவு தான்.

திறந்திருக்கும் கண்கள் வழியாகத்தான் எல்லா உணர்வுகளும் நமக்குள் வந்து சேர்கிறது.
1.அதே திறந்திருக்கும் கண்கள் வழியாக அருள் உணர்வுகளை எடுத்துப் பயிற்சி செய்ததால்
2.என்னால் மற்ற எந்த வேலை (எந்த வேலையாக இருந்தாலும்) செய்து கொண்டிருந்தாலும்
3.அந்த நேரத்தில் அதே கண்கள் வழியாகவே குருவையும் உயிரையும் மகரிஷிகளையும் விண்ணிலேயும் என்னால் தொடர்பு எடுக்க முடிகிறது.

அங்கிருந்து எடுக்கும் சக்திகளை உயிர் வழியாகச் சுவாசித்து அந்தச் சக்திகளை உடலுக்குள் ஊடுருவச் செய்து சரியான ஆணைகளை (COMMANDS) இட்டு இயக்கவும் முடிகிறது.

நான் அந்த நேரத்தில் விழித்த நிலையிலேயே விண்ணிலே மகரிஷிகளுடன் ஒரு நேரடித் தொடர்பு (VIDEO CONFERENCING) செய்துவிட்டு
1.என்னுடன் தொடர்பு கொண்டவர்களுக்குத் தக்க பதிலும்
2.அதன் மூலம் எனக்கு நல்லதாகவும் அவர்களுக்கு நல்லதாகவும் எல்லோருக்கும் நல்லதாகவும் ஆகிக் கொண்டேயுள்ளது.

இன்றும் அது தொடர்ந்து கொண்டுள்ளது. (விழித்த நிலையில்)