ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 29, 2019

செல்வம் தன்னாலே தேடி வரும்...! அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும்...?

இந்த மனித உடலுக்குப்பின் நாம் பெற வேண்டியது எது…? என்பதை உங்கள் எல்லோருக்கும் தெளிவாக்கும் தன்மைக்குத்தான் யாம் (ஞானகுரு) கொண்டு போகின்றோம்.

இன்று மனிதருடைய ஆசைகள் எப்படி இருக்கின்றது…? செல்வத்தைச் சம்பாதித்துவிடலாம்… செல்வத்தைத் தேடலாம்…! என்ற ஆசைகளில்தான் இருக்கின்றது.

ஆனால் இந்த உடலுக்குச் செல்வம் தேவை என்று யாம் உணர்ந்து தான் இருக்கின்றோம்.

நீங்கள் செல்வத்தைத் தேடிப் போகின்றீர்கள் என்றால் அவ்வழியில் உங்களை முறைப்படுத்திச் சென்றால் செல்வம் தானாக உங்களைத் தேடி வரும்.

நீங்கள் வேண்டாம்…! என்று சொன்னாலும் செல்வம் தன்னாலே தேடி வரும். அமைதியும் கிடைக்கும்… சொல்லும் நன்றாக இருக்கும்… கேட்போரிடத்தில் தீய உணர்வுகளை நீக்கும்…!

இப்பொழுது நாமே தபோவனத்துக்குச் செல்வம் வேண்டும் என்று தேடிப் போய்க் கொண்டிருந்தால் பணம் வரும். ஆனால் கூடவே சங்கடமும் சேர்த்து வரும்.
1.அப்புறம் குழப்பம் தான் வரும்.
2.ஆகையினால் நாம் செல்வத்தை எண்ணுவது முக்கியமல்ல.

உலக மக்கள் அனைவரும் அருள் செல்வம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த அருள் செல்வம் தன்னாலே வரும். அருள் செல்வம் என்பது
1.நாம் பார்க்கும் அனைவரது உயிரையும் கடவுளாக (ஈசனாக) மதித்து,
2.உயிரால் உருவாக்கப்பட்ட அந்த உடலை ஆலயமாக மதித்து
3.அருள் மகரிஷிகளின் அருள்சக்தி ஈசன் வீற்றிருக்கும் அந்த ஒவ்வொரு ஆலயத்திலும் படர்ந்து
4.அனைவரும் அருள் ஞானிகளாக வேண்டும் என்று நாம் வேண்டுவது தான்.

ஆரம்பத்திலிருந்து யாம் இதைத் தான் செய்து வருகின்றோம். அருளைப் பெருக்கும் பொழுது  இருள் நீங்குகின்றது. அப்பொழுது பொருள் தன்னாலே சேரும்.

எதன் நிலையில் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்பதற்குத்தான் இவைகளை உங்களுக்குத் தெளிவாகக் கூறுவது.