ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 4, 2019

உயிரின் துணையால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து “ஒளியின் சரீரம் பெறும் வல்லமையைப் பெறுங்கள்...!”


1.வெப்பம் 2.காந்தம் 3.விஷம் இந்த மூன்று நிலைகள் தான் ஆதியிலே உருவானது. வெப்பம் உருவாவதற்கு மூலம் விஷமே தான். விஷத்தின் தன்மை வெப்பமாகி வெப்பத்தின் தன்மை காந்தம் ஆகும்போது  உணர்வின் சுழற்சியாகி சூரியனாகும் போது விஷத்தைப் பிரிக்கின்றது.

உணர்வின் தன்மை மற்றவற்றோடு கலந்து ஓர் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது சூரியன். இதைப்போல தான் விஷத்தின் தாக்குதலால் ஏற்பட்டது தான் நம் உயிர்.

நாம் நுகரும் உணர்வுகள் அந்த ஒவ்வொரு அணுக்களிலும் விஷம் இயக்கச் சக்தியாக உண்டு.
1.விஷத்தின் இயக்கம் தான் என்றாலும்
2.உணர்வின் சத்து அதிகரித்து
3.அதன் உணர்வின் உணர்ச்சியின் எண்ணங்களைத் தூண்டச் செய்யும் நிலைகளில் தான் அந்த விஷம் இருக்கும்.

இவ்வாறு பல கோடிச் சரீரங்களில் உருபெற்றதும் உரு மாறியதும் இன்று மனிதனாக உருவாக்கியதும் இந்த உயிரின் செயலாக்கங்களே...!

ஏனென்றால் இயக்கச் சக்தி கொண்ட உயிர் தான் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ
1.அந்த உணர்விற்கொப்ப ரூபங்கள் அமைவதும்
2.அந்த உணர்விற்கொப்ப எண்ணங்கள் உரு பெறுவதும்
3.எண்ணத்தின் தன்மையால் தன் வாழ்க்கை வாழ்வதும்
4.தன்னைக் காட்டிலும் கடுமை கொண்ட உணர்விலிருந்து மீள்வதும்
5.இவ்வாறு பல போர் முறைகள் கொண்டு உணர்வுகள் இரண்டறக் கலந்து ஒன்றை இணைத்து ஒன்றி வாழும் நிலை கொண்டு
6.இவ்வாறு நஞ்சினை அடக்கி உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற முடியும்.
7.மனித உடல்பெற்ற பின் இந்த நிலை பெற முடியும்.

நம் உடலை உருவாக்கியது உயிரே தான். பல கோடிச் சரீரங்களில் கவர்ந்து கொண்ட உணர்வுகள் மனித ரூபத்தை பெறச் செய்யக்கூடிய திறன் பெறுகின்றது.

இவ்வாறு இந்த உயிரணு நுகர்ந்த உணர்வுக்கொப்பத் தான் உடல் அமைகின்றது என்பதனை அறிந்தவன் அகஸ்தியன். மனிதனாக உரு பெற்ற பின் தன்னுடைய ஆறாவது அறிவின் துணை கொண்டு எண்ணத்தால் உயர்ந்ததை நுகர்ந்து தனக்குள் வரும் தீமைகளை அகற்ற முடியும் என்பதைத் தெளிவாக்குகின்றான் அகஸ்தியன்.

அகஸ்தியன் தன் வளர்ச்சியில் துருவனாகின்றான். துருவன் ஆன பின் துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரமாகின்றான். தான் கண்டுணர்ந்த நிலைகளை மற்ற மக்களும் அறிந்து அதை நுகரும் திறன் பெறக்கூடிய நிலைக்கு உருவாக்குகின்றான் அந்தத் துருவ மகரிஷி.

1.மனிதனில் உயர்ந்த நிலை பெற்று
2.இன்னொரு சரீரம் பெறாது உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அவனின்று (துருவ மகரிஷி) வெளிப்படும் உணர்வுகளை
3.சூரியன் காந்தப்புலன் அறிவு கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டு நம் பூமிக்குள் பரவச் செய்து கொண்டேயுள்ளது.

சூரியனால் கவரப்பட்ட உணர்வுகள் வெப்பம் காந்தம் விஷம் என்று இருந்தாலும் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வை நாம் நுகர்வோமென்றால்
1.விஷத்தின் இயக்கத்தை அடக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
2.விஷத்தை அடக்கும் உணர்ச்சியின் நிலைகளை நமக்குள்ளும் கூட்டி
3.தன்னைத் தான் அறிந்திடலும்
4..தன்னைத் தாக்கும் நஞ்சின் தன்மையில் இருந்து விடுபடுவதும் என்ற உணர்வுகளை நமக்குள் தோற்றுவிக்கும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் முக்கியமான நுண்ணிய உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கி உங்கள் வாழ்க்கையில் தெளிவான சிந்தனை கொண்டு உங்களைக் காக்கும் உணர்ச்சிகள் வர வேண்டும் என்பதற்காகத்தான்.

இக்கட்டான நிலைகளைச் சந்திக்கும் சந்தர்ப்பம் வரும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் பெற்று தீமைகளை அடக்கிடல் வேண்டும்.

தீமை செய்யும் உணர்வுகளை மாற்றும் சக்தி கொண்டது துருவ நட்சத்திரம். உங்களுக்குள் அதை இணைக்கப்படும் போது ஒவ்வொரு நினைவிலும் இது சேரும்.

ஒரு குழம்பிலே பல சரக்குகளைப் போட்டாலும் காரத்தை இணைக்கும் போது எல்லாச் சரக்கையும் சேர்த்து இதைக் கூட்டி உணர்ச்சியின் தன்மை கொண்டு வருகின்றது.

இதைப்போல தான் தீமை என்ற உணர்வை எப்போது பார்கின்றீர்களோ... கேட்கின்றீர்களோ... நுகர்கின்றீர்களோ... அதை நுகரும் அடுத்த நிமிடம் அது உள் புகுந்து அந்தத் தீமைகள் செய்யாது தடுத்து நிறுத்த வேண்டும்.

தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உணர்வுக்கு தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் துருவ தியானத்தில் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கச் சொல்கிறோம்.

ஆகவே அகஸ்தியன் சென்ற பாதையில் நாமும் செல்வோம் என்றால் நமது வாழ்க்கையில் இருள் சூழும் நிலையில் இருந்து விடுபட்டு சந்தர்ப்பத்தால் நுகரும் விஷத் தன்மையை அகற்றி ஒளியின் சிகரமாக மாற்றிடும் வல்லமை பெறுகின்றோம்.