ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 13, 2016

மூன்றாவது உலக யுத்தம் வந்தால் இந்தப் பிரபஞ்சமே அழிந்துவிடும், எதுவும் மிஞ்சப் போவதில்லை - நாம் செல்வது எங்கே..?

தீவிரவாதம், தீவிரவாதிகள் என்ற நிலை உலகம் முழுவதும் பரவி வரப்படும்போது மனிதனுடைய வாழ்க்கையில் நிம்மதியை அறவே இழந்து வாழும் தன்மைகள் வருகின்றது.

நிம்மதியை இழந்துவிட்டால் வாழ்க்கையில் “நாமும் தீவிரவாதியாகி..,” இந்த மனித உடலைவிட்டு தீமையின் செயல்களைச் செய்து வாழும் உலகை இனி உருவாக்கிவிடுவோம்.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நினைவு இருக்கப்படும்போதே நமது வாழ்க்கையை நாம் வளமாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

எப்படி..?

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி அதை வளமாக்கி அந்த வளத்தின் நிலைகளை நமக்குள் வளர்த்துக் கொண்டால் இந்த மனிதனின் வாழ்க்கையின் முடிவு நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

ஏனென்றால், இன்று உலக யுத்தம் “மூன்றாவது உலக யுத்தம்” வந்தால் யாரும் மிஞ்சப் போவதில்லை. நமது பூமியும் சரி இந்த சூரியக் குடும்பமும் சரி. “எதுவும்.., மிஞ்சப் போவதில்லை”.

இந்தப் பிரபஞ்சத்திற்குள் ஏற்கனவே அணுக்கதிரியக்கங்கள் அதிகமாகப் பரவி விட்டது. அணுக்கதிரியக்கங்களால் நமது பூமிக்குள் கொதிகலன் அதிகமாகும் போது இங்கு கூழாகி நிலநடுக்கங்கள் அதிகமாக வந்து கொண்டே இருக்கின்றது.

“தினசரி” எங்கேயாவது நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டு தான் உள்ளது.

அதே சமயத்தில் கொதிகலன் அதிகமாகி மோதும் இடம் எங்கே இருக்கின்றதோ அங்கே பூகம்பமாக மாறி ஊரையே உள்ளுக்குள் கொண்டு போகின்றது.

இதே மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தக் கதிரியக்கங்கள் சூரியனுக்குள் சென்றவுடன் அதுவும் கொதிகலன் ஆகி கருப்புப் புகையை விஷத்தன்மையைக் கக்கிக் கொண்டு இருக்கின்றது.

விஷத்தை நீக்கும் தன்மை கொண்ட நிலையில் சூரியன் இருந்தாலும் விஷத்தின் உணர்வு அதன் உடலில் ஓடும்போது வரும் அணுக்கதிரியக்கங்களின் விஷத்தின் தன்மை மோதலாகி.., “விஷக் கதிரியக்கங்கள்” இன்று பிரபஞ்சத்தில் அதிகமாகப் பரவும் தன்மை வருகின்றது.

சூரியனிலிருந்தும் இன்று விஷத்தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது. இதே போல ஒவ்வொரு கோள்களுக்கும் இதே நிலை ஆகிக் கொண்டு வருகின்றது.

நாளடைவில் இந்த யுத்தங்கள் வந்து அணுகுண்டுகளை வெடிக்கச் செய்தால் எல்லாக் கோள்களுக்குள்ளும் அணுக்கதிரியக்கங்கள் ஊடுருவி அது அனேகமாகக் கூழாக மாறி நமது பூமியும் சிதைந்து சுக்குநூறாகச் சிதைந்து போகும் தன்மை வருகின்றது.

வெடித்துவிடும். அது கூழாகப் பரவிவிடும். அந்த மாதிரிப் பரவிவிட்டால் இதில் வாழும் உயிரினங்களின் நிலை என்ன?

பூமியைத் தவிர மற்ற கோள்களில் ஜீவணுக்கள் தான் உண்டு. ஆனால் ஜீவணுக்களின் தன்மை உயிரணுக்களாக ஆகி மனிதனைப் போல ஞான வளர்ச்சிப் பெற்ற உடல்கள் “மற்ற கோள்களில் இல்லை”.

இன்று இந்தப் பூமியில் ஞான வளர்ச்சி பெற்ற மனித உடல்கள் இருந்தும் இந்தப் பூமியே சிதைந்துவிட்டால் சூரியன் நிலைகள் மறைந்துவிட்டால் இந்த உயிர் இந்த உடலில் கடைசி நிமிடத்தில் எந்த வேதனைப்பட்டதோ அந்த வேதனை உணர்ச்சியுடன் தான் (நம்) உயிரான்மா பிரபஞ்சத்தில் பரவும்.

கோள்கள் இருக்காது. அதற்கு வேண்டிய தாவர இனங்கள் இருக்காது. இருந்தாலும் தாவர இனங்களிலும் அணுக் கதிரியக்கம் உண்டு. ஆனால், அதை உட்கொண்டாலும் கதிரியக்கங்கள் நம்மை மாற்றிவிடும்.

இதுபோன்ற சூழ்நிலை வருகின்றது.

இதேபோலத்தான் கெமிக்கல் கலந்த நிலைகளில் விஷத்தின் தன்மை கொண்ட நிலைகளை ஒவ்வொரு தண்ணீரிலும் மற்ற நிலைகளிலும் தீவிரவாதிகள் பரப்பி உடலிலே கடும் நோயாக வரும் தன்மைகளை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள்.

இந்த மாதிரிக் காலத்தில் வாழப்படும்போது, “நாம் எப்படி இனி வாழ வேண்டும்..,” என்ற நிலையை முடிவு செய்து கொள்ளுங்கள்.

அருள் ஞானிகள் காட்டிய வழிகளில் அந்த ஞானத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டால்தான் கூடுமான வரையிலும் இந்த உடலுக்குபின் நாம் பிறவியில்லா நிலைகள் அடையும் அந்தச் சக்தியைப் பெறுகின்றோம்.

இந்தப் பிரபஞ்சமே சிதைந்து போனாலும் நமது உயிர் இந்த உடலைவிட்டுச் செல்லும்போது வேகா நிலை என்று இருக்கும் இந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குச் செல்லும்.

இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும், அகண்ட அண்டத்தில் அனைத்தும் அழிந்தாலும் இந்தத் துருவ நட்சத்திரம் என்றுமே அழியாத நிலைகள் கொண்டது.

ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உயிரணு தோன்றி உணர்வின் தன்மை ஒளியான அந்த உடலின் தன்மையைக் கொண்டு “துருவ நட்சத்திரமாகவும்.., சப்தரிஷி மண்டலங்களாகவும்..,” சுழன்று கொள்ளார்கள். ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் இவ்வாறு உண்டு. 
இந்த உடலில் பிறந்த உயிரணுக்கள் அதை நேசித்து வந்தால் அதன் உணர்வை நமக்குள் அதிகமாகப் பெருக்கி வந்தால், இந்த உடலைவிட்டு நாம் சென்றால் இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் “நமது உயிரான்மா துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பிற்குச் சென்று..,” பேரானந்த நிலை என்று ஏகாந்த நிலைகள் பெறுவது உறுதி.

ஏனென்றால், நமக்குள் இந்தத் தெளிவான நிலைகள் இல்லை. அது இல்லாததனால் “யாரோ.., எவரோ.., செய்து கொடுப்பார்கள் என்றும், நமக்கு வரம் வாங்கித் தருகின்றார்கள்..,” என்ற நிலையில்தான் இன்றும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால், நான் வந்து உங்களுக்கு வரம் வாங்கிக் கொடுக்க முடியாது. வழியைக் காட்டலாம். அருளைக் கொடுக்கலாம். வலுவைக் கொடுக்கலாம்.

வலுவான நிலை கொண்டு அதை எடுக்கும் திறன் “உங்களிடம் தான்..,” இருக்கின்றது. உங்களால் முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.