ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 19, 2016

உங்கள் வாழ்க்கையில் மன நிம்மதி கிடைக்கும்படிச் செய்கின்றோம்

குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் பேரருளைப் பெருக்கி இந்த இருண்ட உலகமாக இருக்கும் நிலையில் இருளை அகற்றி அருள் ஒளியைப் பெறும்படி செய்கின்றோம்.

உங்களுடைய பேச்சும் மூச்சும் பிறரையும் நல்வழிப்படுத்தும் நிலையும் அருள் வழி வாழும் அந்த வலிமை நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்பதற்காக துருவ தியானத்தைக் கொடுத்துள்ளோம். ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையும் கொடுத்துள்ளோம்.

உங்கள் உடலிலும் உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கச் செய்து இனி ஒரு பிறவி இல்லை என்ற நிலை அடையும் மார்க்கத்தைக் காட்டுகின்றோம்.

நான் விடிய விடியச் சொன்னாலும் கேட்கின்றீர்கள், படிக்கின்றீர்கள். ஆனால், “உங்கள் மனது எப்படியோ.., அப்படித்தான்..”.

குடும்பத்திற்குள்ளோ, தொழிலிலோ, மற்ற நிலைகளுக்குள் சென்றவுடன் “சாமி எப்படி எல்லாம் சொல்கின்றார்.., இந்தப் பையன் எப்படிச் செய்கின்றான் பார்..,” “சாமி பல உண்மைகளைச் சொல்கிறார்.., ஆனால், இவர்கள் இப்படி எல்லாம் மோசம் செய்கின்றார்கள்..,, ஏமாற்றுகின்றார்கள்..,” என்பார்கள்.

தவறு செய்யும் உணர்வுகள் முன்னாடி வந்தவுடன் நான் சொல்வதை விட்டுவிட்டு தீமைகளை உடலுக்குள்ளே விட்டுவிடுவார்கள்.

அதைத்தான் ஒரு குரு பரீட்சைக்காக வேண்டி கொழுக்கட்டையை வாங்கிக் கொண்டு வா என்று சிஷ்யரிடம் சொல்கின்றார்.

மனதில் அவசரமான நிலைகளில் இருந்ததனால் வாங்கி கொண்டு வருகின்றேன் என்று சொல்லிக் காசை வாங்கிச் சென்றவர் என்ன செய்கின்றார்?

போகும் பாதை இடைவெளியில் ஒரு சாக்கடையைத் தாண்டும் போது “அத்தடிபட்சா..,” என்று சொல்லித் தாண்டுகின்றார். “நாற்றமடிக்கின்றது..,” என்று சொல்லி குரு சொன்னதை விட்டுவிட்டு நாற்றத்தை எடுத்துக் கொள்கின்றார்.

கடைக்குச் சென்று கொழுக்கட்டை வேண்டும் என்று கேட்பதற்குப் பதில் “அத்தடிபட்சா..,” கொடுங்கள் என்று கேட்கின்றார். ஆக, குரு சொன்னதை மறந்து அதைக் கேட்கின்றார்.

எனவே, உங்கள் வாழ்க்கையில் இதைப் போன்ற உணர்வுகளைக் கொண்டு செல்லாதபடி நாற்றத்தை நீக்கும் அருள் ஞானத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.  இருளை அகற்றும் பெரும் அருள் ஞானிகளாக நீங்கள் ஆகவேண்டும் என்று தான் இத்தனை நேரமும் உபதேசிக்கின்றோம்.

உங்களுக்கு இது நல்ல நேரம்.

ஒவ்வொரு நிமிடமும் அருள் உணர்வுகளை எடுத்துக் கொண்டால் அது உங்களுக்கு நல்ல நேரமாகவே அமையும். நல்ல தொழிலாகவும் அமையும். வளர்ச்சியும் கூடும்.

தொழில் சிறப்பாக இருந்தால் மன நிம்மதி கிடைக்கும். அந்த நிம்மதியான நிலைகளில் நம் சொல்லை வாடிக்கையாளர்களும் கேட்டாலும் சரி அவர்களுக்கும் நம் பார்வை பட்டவுடன் ஒரு நிம்மதி கிடைக்கும்.

நம்மிடம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். நம்மிடம் சரக்கை வாங்கினால் அவர்களுக்கும் ஒரு நிம்மதி கிடைக்கும்.

ஆனால், நமக்குள் நிம்மதியற்ற நிலைகளில் நம்மிடம் சரக்கை வாங்கிச் சென்றார்கள் என்றால் அவர்கள் நிலையும் அதுவாகிவிடும்.

ஏனென்றால், இந்த உணர்வுகள் எல்லாவற்றிலும் இந்த “மேக்னட்” இந்த உணர்வு பதிவாகும். அதனுடைய செயலாக்கங்களை மாற்றிவிடும்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளை நாம் அனைவரும் பெற்று அந்த அருள் வழியில் செல்வோம்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி பிறவி இல்லாத நிலைகள் அடைந்தான். அதைப் பின்பற்றிச் சென்றோர் அனைவரும் சப்தரிஷி மண்டலமாக முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்ற நிலையில் வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வெளிவரும் ஆற்றல் மிக்க சக்திகளை நம் உடல் முழுவதும் பாய்ச்சி எல்லா அணுக்களையும் பெறச் செய்து அதன் வழியில் இந்த வாழ்க்கையைச் சீர்படுத்துவோம்.

இந்த உடலுக்குப் பின் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.