ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 28, 2016

தாங்க முடியாத கஷ்டம் வந்தபின் “வேறு வழி இல்லை” என்றால் எந்த நிலை ஆகின்றது?

ஒரு உயிரணு நம் பூமிக்குள் வந்து ஒரு செடியின் சத்தை நுகர்ந்து புழுவாகின்றது. புழுவான பிற்பாடு அடுத்த செடியின் வாசனை படும் பொழுது பார்ப்பதற்குக் கண்கள் இல்லை.

கண் இல்லை என்கிற பொழுது என்ன செய்கிறது?

தன் இரைக்காகச் செல்லும் போது எந்தச் செடியில் உருவானதோ அந்த மணத்தை நுகர்ந்து பார்த்துத்தான் செல்ல வேண்டும்.

அப்படி நுகர்ந்து பார்க்கும் பொழுது இதைக் காட்டிலும் ஒரு மோசமான செடியின் வாசனையை நுகர நேருகின்றது. அதனின் சந்தர்ப்பம் அவ்வாறு ஆகின்றது.

அந்த மோசமான செடியின் வாசனையை நுகர்ந்தவுடன் மயக்கமாகின்றது. அப்படி மயக்கமானபின் என்ன செய்கின்றது? தன் இரையைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இரண்டும் சேர்த்து வருகின்றது.

அந்த மயக்கமாகும் பொழுது “பார்க்க வேண்டும்…,” என்ற உணர்ச்சிகள் புதிதாகத் தோன்றுகின்றது.

ஏனென்றால் கண்கள் இல்லாதபோது தன் இரையைப் பார்க்க வேண்டும் என்று தன் எண்ணத்தைப் பரவச் செய்யும் பொழுது அந்த மணத்தை அறிய விரும்புகின்றது.

ஆனால், முடியவில்லை. அப்பொழுது அதனால் வேதனைப்படுகின்றது.

அந்த மோசமான செடியின் வாசனை பட்டதனால் அதற்கு வேதனை வருகின்றது. வேதனை ஆனவுடன் பார்க்க வேண்டும் என்ற உணர்ச்சி “தன்னிச்சையாகவே…,” உந்துகின்றது.

சாதாரணமாக ஒரு மனிதனுக்குக் கஷ்டம் வந்ததென்றால் தப்ப வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது. கஷ்டம் வருவதற்கு முன் நாம் செய்வதைச் செய்து கொண்டிருப்போம்.

கஷ்டம் வந்ததும் அதிலிருந்து எப்படி விலகுகின்றது என்று அதற்கப்புறம் தான் வரும்.

ஒருவருடன் சண்டை போட்டோம். அவனுக்குப் பக்கபலமாக ஆள் இருக்கின்றது என்று தெரிந்தவுடன் உடனே அவனிடமிருந்து “எப்படிடா தப்புகின்றது…,” என்ற நினைப்பு வரும.

முதலிலே இலேசாகத் தெரியும்.

ஆனால், பின்னனியில் ஆள் இருக்கிறது நம்மை உதைப்பதற்குக் கூட்டம் வந்துவிட்டது என்றால் “இதற்கு என்ன செய்வது..?” என்ற தெரியாதபடி தவிப்போம்..

இதே மாதிரித்தான் தனக்குள் வலு தேடும் எண்ணங்கள் வருகின்றது.

ஆக, புழுவாக இருக்கப்படும் பொழுது தன் மணத்தால் விஷத்தின் தன்மையை நுகர்ந்தபின் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.

அப்படி அந்தப் புழுவின் உடலில் தோன்றும் பொழுது அது சுவாசிக்க நேருகின்றது. அந்த உணர்வுகள் வருகின்றது. அப்பொழுது தான் சுவாசித்ததை உருவாக்குகின்றது.

யார்..?

“வாசு தேவன்”, சுவாசித்ததை உருவாக்கக்கூடியவன் என்று உயிருக்குக் காரணப் பெயரை வைக்கின்றார்கள்.

முதலில் உயிருக்கு பெயர் ஈசன் என்றும் விஷ்ணு என்றும் காரணப் பெயர் வைத்தாலும் “பார்க்க வேண்டும்.., என்று சுவாசித்த உணர்வு” வாசுதேவன்,

“தேவகி…, பார்க்க வேண்டும் என்ற “தேவைக்குத் தக்கவாறு” இது நுகர்ந்து கொண்ட பின் அதன் உடலில் கண்கள் உருவாகின்றது.

அதைத்தான் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் இந்த உடலான சிறைக்குள் கண்ணன் பிறந்தான். கண்கள் பிறந்தது. நம் சாஸ்திரங்கள் இவ்வளவு தெளிவாகக் கூறியுள்ளது. புழு அதனுடைய எண்ணத்தால் தான் கண் உருவாகியது.

இப்பொழுது ஒரு தொழில் செய்யும்போது ஏதோ நிலைகள் சிந்தனையில்லாது இருண்ட நிலைகளில் இருக்கின்றீர்கள்.

இவன் அப்படிச் செய்தான், இவன் இந்த மாதிரி நடக்கின்றான், கொடுத்தவனுக்குப் பணம் கொடுக்க முடியவில்லை, வந்து கேட்கின்றான். கேட்பவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

“என்ன செய்வது..,” என்று தெரியவில்லை.

இதில் கொஞ்சம் கௌரவம் வந்ததென்றால் “இனி என்னத்தை.., உயிரை வைத்துக் கொண்டு வாழ்வது?” என்ற இந்த நிலைக்குச் சென்றுவிடுகின்றார்கள்.

எப்படி உயிர் வாழ வேண்டும் என்று நினைக்கும் பொழுது என்ன செய்கின்றார்கள்? தற்கொலைக்குச் சென்று விடுகின்றார்கள்.

வேதனை தாளாது நிவர்த்திக்கக்கூடிய வழி இல்லை என்கிற பொழுது இருண்ட நிலை வருகின்றது. அந்த இருண்ட நிலை வரப்படும் பொழுது முடியாத நிலை வரப்படும் பொழுது தற்கொலை ஆகின்றது.

அப்படி ஆகவில்லை என்றாலும் கூட இருண்ட நிலை வரும் பொழுது சிந்தனையற்ற நிலையில் போகும்போது ரோட்டில் சென்றால் ஆக்சிடென்ட் ஆகின்றது.

யாராவது சொன்னால் வெறுப்பு வருகின்றது. ஏதாவது ஒரு பொருளை எடுக்கப் போனால் கவலையுடன் எடுக்கும் பொழுது சரியாக அதைப் பிடிக்கத் தெரியாமல் கீழே விட்டுவிடுவார்கள்.

அப்பொழுது எது செய்கின்றது? அந்த உணர்வின் இயக்கமாகத்தான் இருக்கின்றது. அதற்கு மாற்றாக ஒரு வலு வேண்டுமல்லவா?

புழுவாக இருக்கும் பொழுது “பார்க்க வேண்டும்” என்ற வலுவை எண்ணுகின்றது. ஏனென்றால், வேறு வழி இல்லை.

வேறு வழி இல்லை என்றால் தற்கொலை செய்வதற்குத்தான் மனிதர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

செல்வத்தைத் தேடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் தாங்க முடியவில்லை நான் என்ன செய்வது?

அவன் கேட்பான், இவன் கேட்பான் பிள்ளைகள் படிப்புக்குப் பணம் கேட்குமே? இதற்கெல்லாம் நான் என்ன செய்வது? ஆக, தற்கொலைக்குச் சென்றுவிடுகின்றார்கள்.

அப்பொழுது நாம் மனிதனாக வந்து இந்த உடலை வளர்த்த நல்ல உணர்வை நம் உணர்வு கொண்டு அந்த விஷத்தைப் பாய்ச்சி இந்த உடலை அழித்துவிட்டால் என்ன ஆகும்?

உடலை விட்டு வேண்டுமென்றால் போகலாம்.

ஆனால், விஷத்தால் எந்த உணர்வைச் சேர்த்தோமோ இந்த உயிர் அதற்குத்தக்கவாறு “நீ வாப்பா…, உனக்கு நல்ல உடலைக் கொடுத்தேன் நீ கொன்றுவிட்டாய்.., என்னை நீ அவமதித்துவிட்டாய்..., ஆகவே, இன்னொரு தரம் இந்த உடலில் நீ அனுபவித்துப் பார்.

அந்த வேதனைப்படும் உணர்வைக் கொண்டு இந்த உயிர் அடுத்த உடலை உருவாக்கும். “தப்ப முடியாது”.

(தற்கொலை செய்து) தப்பித்துவிட்டோம் என்று நினைக்கின்றோம். ஆனால், தப்ப முடியாது. இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பல கோடித் தீமைகளிலிருந்து விடுபடவேண்டும் என்று சுவாசித்த உணர்வு கொண்டு மனிதனாக வந்த நாம் தீமைகளை நீக்கத் தவறினால் மறுபடி கீழான விஷ ஜெந்துக்களாகத்தான் பிறக்க நேரும்.

நேற்றைய செயல் இன்றைய சரீரம், இன்றைய செயல் நாளைய சரீரம்.

ஆகவே, நம் வாழ்க்கையில் எத்தகைய கடுமையான இன்னல்கள் வந்தாலும் அந்த நேரத்தில் அதிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ள அருள் மகரிஷிகளின் ஆற்றல்களை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் சேர்த்து அதை விளைய வைத்து, உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக அந்த மகரஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்வதே மனிதனின் கடைசி எல்லை.

அந்த எல்லையை அடையும் மார்க்கங்களைத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.