ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 11, 2016

நம்மை அறியாமல் நம் மனதிற்குள் நடப்பதை விஞ்ஞானம் நிரூபிக்கின்றது

இப்பொழுது வெளிநாடுகளிலோ மற்ற வளர்ச்சி அடைந்த சில இடங்களிலோ நாம் தங்கக்கூடிய லாட்ஜுகளில் ஒரு எலெக்ட்ரானிக் அட்டையைத் தான் (ELECTRONIC CARD) கொடுக்கின்றார்கள். சாவி எதுவும் கிடையாது.

அந்த அட்டையைக் கொண்டு போய் அங்கே செருகினால் இந்த நம்பருக்குண்டான பவர் இவ்வளவு தான் என்கிற வகையில் கரண்டைக் (ELECTRONIC SIGNALS) கொடுத்துவிடுகின்றது. அட்டையைச் செருகினால் தான் கதவு திறக்கின்றது.

அந்த அட்டை அதற்குள் நுழையும்படித்தான் வைத்திருக்கின்றார்கள்.  அட்டைக்குள்தான் எலெக்ட்ரானிக்கை வைத்துள்ளார்கள்.

இதே போல நீங்கள் உங்களுக்குள் பதிவான ரெக்கார்டுகளை (பல கோடி எண்ணங்களையும், உணர்வுகளையும்) என்ன செய்கின்றீர்கள்?

திட்டியவனையும், கஷ்டத்தையும், நஷ்டத்தையும், அதைப் போன்ற எண்ணத்தைச் செலுத்தினால் அந்த அட்டையைச் செருகிவிடுகின்றீர்கள்.

(அட்டையைச் செருகவில்லை) ஏற்கனவே கண்களால் உங்களுக்குள் பதிவானதை மீண்டும் நினைவாக்குகின்றீர்கள். உடனே உள்ளுக்குள் இருந்து கிளர்ந்து அதற்குண்டான சஞ்சலத்தையும் கவலையையும் உண்டாக்குகின்றது.

விஞ்ஞானி அங்கே ELECTRONIC CARD கண்டுபிடிக்கின்றான்.  அதைப் போல சங்கடம் உங்களுக்கு வருகின்றது.

ஆனால், இந்த எலெக்ட்ரானிக் அட்டையை வைத்துத் திருடர்கள் என்ன செய்கின்றார்கள்?

நீங்கள் என்னதான் போட்டிருந்தாலும் கூட அந்த அட்டைக்குத் தகுந்த மாதிரி எலெக்ட்ரானிக்கின் அதிர்வுகளை வலு அழுத்தமாகிக் கொண்டு வந்தபின் எல்லாக் கதவுகளையும் ஒரே அட்டையை வைத்துத் திறக்கின்றான்.

இங்கே விஞ்ஞானிகள் செய்து கொடுத்த நிலைகளை நாம் உபயோகிக்கப் பழகிக் கொள்கின்றோம்.

ஆனால், திருடர்கள் ஒரே அட்டையை வைத்து எல்லாக் கதவையும் திறக்கின்றார்கள். அப்பொழுது அவனுடைய திறன் எப்படி இருக்கின்றது?

இதே மாதிரி நமக்குள் வேதனை என்ற உணர்வுகள் வந்தால் என்ன செய்கின்றோம்?

வேதனை வந்தபின் அதை வலுப்படுத்திக் கொள்கின்றோம். அப்பொழுது என்ன ஆகின்றது? நமக்குள் இருக்கக்கூடிய கெட்ட அணுக்கள் எல்லாவற்றையும் திறந்துவிட்டுவிடுகின்றோம்.

அப்பொழுது நமக்குள் மனக் கலக்கமாகி சிந்தனையை இழந்துவிடுகின்றோம். சிந்திக்கும் தன்மை இழந்தபின் என்ன ஆகின்றது? நம் உடலில் அந்த வேதனை என்ற உணர்வாகும்போது கடுமையான நோயாக மாறுகின்றது.

இந்த நோயின் தன்மை ஆன பிற்பாடு உடலைவிட்டுப் போகும் பொழுது யார் மேல் வெறுப்பு ஆனதோ அந்த உடலுக்குள் தான் போகும். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்பொழுது இதை மாற்றிட நாம் என்ன செய்யவேண்டும்?

இன்றைய உலகில் மிகவும் பயங்கரமான கடுமையான விஷத் தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது. அதிலிருந்து மாற்றி அமைக்கக்கூடிய சக்திகள் அனைத்தையும் இப்பொழுது உங்களுக்குள் ரெக்கார்டு செய்து கொண்டிருக்கின்றேன்.

உங்கள் வாழ்க்கையில் தீமைகள் வரும்போது இப்பொழுது பதிவாக்கியதை நினைவுக்குக் கொண்டு வந்தாலே போதுமானது.

ஆகவே, தீமைகளையெல்லாம் நீக்கக்கூடிய வலுவான நிலைகளை, சமப்படுத்தும் நிலைகளை, தீமைகளை வென்ற மகரிஷிளின் அருள் சக்திகளை எண்ணி எடுக்கச் சொல்கின்றோம். இதில் ஒன்றும் சிரமமில்லை.

அதை எண்ணி எடுத்து உங்கள் உடலுக்குள் சேர்த்தீர்கள் என்றால் உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும். உங்களை நீங்கள் நம்புங்கள்.