ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 14, 2016

வாழ்க்கையில் வரும் தீமையை மாற்றியமைக்கும் பயிற்சி – உங்கள் அனுபவத்திற்கு

இன்று மனிதனின் வாழ்க்கையில் தீமைகள் எப்படி எல்லாம் வருகின்றது என்று தெரிந்து கொள்தல் வேண்டும். இதை மாற்றுவதற்கு உங்களுக்குச் சக்தி வேண்டும்.

அது உங்களுக்குத் தெரியாது.., தெரிய வைக்கின்றோம். அந்தச் சக்தி பெறுவதற்குண்டான ஊக்கத்தையும் கொடுக்கின்றோம். உங்களுக்குள் தெரியக்கூடிய அளவிற்கு அருள் ஞானிகளின் அருள் வித்துக்களைப் பதிய வைக்கின்றோம்.

திட்டியவனை நினைத்தவுடன் உடனே நமக்கு ஆத்திரம் வருகின்றது. நம்முடைய காரியங்கள் எல்லாம் தடைப்படுகின்றது.

அப்பொழுது அந்தச் சங்கடம் வரும்போது நான் உங்களுக்குள் பதிவாக்கியதை எண்ணினால் உங்களுக்குள் ஞானம் வரும். அதை விலக்கக்கூடிய யுக்தி வரும்.

உங்கள் சொல் என்ன செய்யும்?

அந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் நாம் பேசும் இந்த உணர்வலைகள் அவர்கள் மனதிற்குள் போய் நம் மீது உள்ள கடுப்பைக் கொஞ்சம் குறைக்கச் செய்யும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

“என்னை இப்படிப் பேசினான்” ஆகவே, என்னை இப்படித்தான் பேசுவான் என்ற உணர்வு வந்து நாம் அந்த அச்ச உணர்வோடு பேசும் பொழுது ஏதாவது ஒன்று பதில் சொன்னோம் என்றால் அவர்களுடைய செவியில் பட்டு நம்முடைய அந்தப் பயப்படும் உணர்வே அவர்கள் உடலுக்குள் போய் மிரட்டும் நிலைக்கு உருவாக்கிவிடும்.

ஒருவரிடம் கடன் வாங்கி இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம் திருப்பிச் செலுத்தச் சிறிது கால தாமதம் ஆகின்றது. நாம் எப்படியும் வாங்கிய பணத்தைக் கட்டவேண்டும் என்று விரும்புவோம்.

அப்பொழுது அதை எப்படி எண்ண வேண்டும்?

ஏனென்றால், அவன் சரியான நேரத்தில் கொடுத்து உதவினான். அது நியாயம் தான். ஆனால், நாம் வாங்கினோம் அவனுக்குக் கொடுக்க முடியவில்லை. சரியான முறையில் எப்படியும் கொடுக்கக்கூடிய சக்தி வேண்டும்.

நான் சொல்வதைக் கொஞ்சம் கேட்டு அமைதியாக இருந்து எனக்கு அந்த வழி கொடுக்க வேண்டும் அந்த நிலை பெறவேண்டும் என்று நாம் எண்ணினோம் என்றால் அந்த வலுவான உணர்வுகள் நாம் எண்ணும்போது மூச்சலைகள் வெளிப்படுகின்றது.

கடன் கொடுத்தவர் நம்மை எண்ணி வரும்போது அதை அவர் சுவாசித்தால் அவர் உடலில் இது இணைந்து நம் மேல் இருக்கக்கூடிய வெறுப்பின் தன்மையை நிச்சயம் குறைக்கும்.

இதே மாதிரி தொழிலே ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்துவிட்டு இந்தப் பொருளை வாங்குவோர் நன்றாக இருக்க வேண்டும். அதற்குண்டான மன பலம் பெற வேண்டும்.

நம்மிடம் பழகும் நண்பர்களுக்கும் ஒத்துழைக்கக்கூடிய தன்மை வரவேண்டும். நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நம்முடன் ஒத்துழைக்கும் தன்மை வரவேண்டும் என்று இப்படித்தான் இணைத்துக் கொண்டு போக வேண்டும்.

நீங்கள் சங்கடத்துடன் எண்ணி வேலை செய்பவர்களிடம் போய் ஒரு வேலையைச் சொன்னால் இதே சங்கடம் அவனை இயக்கி அவனைத் தவறு செய்ய வைத்துவிடும்.

நீங்கள் சங்கடத்துடன் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றினால் வாடிப் போகும். நம்மை அறியாமல் இயக்கும் இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட நமக்கு ஒரு வலுவான சக்தி வேண்டும். அந்த வழி அறிந்து செயல்படும் நிலைகள் பெறவேண்டும்.

ஒரு பள்ளிக்குச் சென்றால் விஞ்ஞானியாக வேண்டும் என்றால் அது எப்படி என்ற நிலைகளைச் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.

ஒரு இஞ்சினியராக வேண்டும் என்றால் எப்படி என்றும் ஒரு ஆசிரியராக வேண்டும் என்றால் எப்படி என்றும் சொல்லிக் கொடுக்கின்றார்கள். அந்தப் பாடங்களைப் படிக்கின்றார்கள்.

இதைப் போன்று தான் எனக்குக் குருநாதர் அதைக் கற்றுக் கொடுத்த அந்த உணர்வை நினைவுபடுத்தி உங்களுக்குள் பதிவாக்கிவிட்டால் நினைவுக்கு வரும் பொழுது சங்கடங்களைச் சமாளிக்கும் ஞானம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

அந்த ஞானத்திற்குண்டான யுக்தி தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நீங்கள் பெறவேண்டும் என்று அடிக்கடி சொல்லி அதை உங்களுக்குள் ரிக்கார்டு செய்து வைத்துவிடுகின்றேன்.

அப்பொழுது இதையெல்லாம் வந்து இயக்கப்படும் பொழுது, ஈஸ்வரா என்று உங்கள் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தை எடுக்கப்படும் பொழுது தீமைய நீக்கக்கூடிய சக்தியாக உங்களுக்குள் பெருகத் தொடங்குகின்றது.

இப்பொழுது என்ன செய்கின்றோம்? பாலில் சர்க்கரையைப் போட்டால் இனிப்பாக இருக்கின்றது. சர்க்கரையுடன் சேர்த்துக் காபித் தூளைப் போட்டால் அது ஒரு ருசியாக இருக்கின்றது.

சர்க்கரையுடன் கொஞ்சம் புளிப்பைச் சேர்த்தால் அது ஒரு ருசியாக இருக்கின்றது. அந்தப் புளிப்புடன் இலேசான காரத்தைச் சேர்த்தால் அது ஒரு ருசியாக இருக்கின்றது.

மிளகைப் போட்டுப் பாருங்கள் அது ஒரு ருசியாக இருக்கும். மிளகாயைப் போட்டுப் பாருங்கள். அந்தப் புளிப்பு காரம் எல்லாம் சேர்த்து பானக்கம் கரைத்தது போன்று ஒரு ருசியாக இருக்கும்.

இதைப் போலத்தான் உங்களுக்குள் எத்தகையை தீமையான நிலைகள் வந்தாலும் அதை நல்ல சுவை மிக்கதாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களுக்கு வேண்டும்.

அதற்குத்தான் வழி சொல்கின்றோம்.