ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 2, 2016

உயிர் வெளியேறிவிட்டால் இந்த உடல் நீசம் (நாற்றம்) ஆகின்றது ஏன்?

நாம் இப்பொழுது “இது என் உடல், நமது உடல்” என்று நினைக்கின்றோம். நம் உடலுக்குள் எத்தனையோ விதமான உணர்வின் அணுக்கள் உண்டு. அதனின் மலமே நம் உடல்.

அதாவது “அணுக்களின் மலம் தான்” இந்த உடல். தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த உயிரான ஈசன் உடலை விட்டுப் போய்விட்டால் இந்த உடலான சிவம் சவமாகி விடுன்றது.

நாம் எண்ணும் உணர்வுகள் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று நம் உடலாக மாறிக் கொண்டேயுள்ளது. ஆனால், உயிரின் இயக்கத்தால் தான் நாம் இயங்குகின்றோம்.

உயிரின் இயக்கம் இல்லை என்றால் நம் உடலிலுள்ள அணுக்களிலும் இயக்கம் இல்லை.

எத்தகைய உணர்வை நாம் சுவாசித்து இந்த உடலில் வளர்த்துக் கொண்டோமோ அந்த அணுக்களின் மலமே நம் உடலாகின்றது.

 அந்த அணுக்களின் மலமாக நம் உடலானாலும் இந்த உடலை விட்டு உயிர் சென்றுவிட்டால் நம் உடலையே தின்னும் அணுக்களாக மாறிவிடுகின்றது.

அதாவது நம் உடலை உருவாக்கிய அதே அணுக்கள் உயிர் வெளியில் சென்றபின் நம் உடலை உணவாக உட்கொள்ளும் அணுவாக மாறிவிடுகின்றது.

இப்படி ஆன அந்த அணுக்களின் மலம் வெளிப்படும் பொழுது நாற்றமாகின்றது.

முதலில் நுகர்ந்த உணர்வின் மணம் அந்த உணர்ச்சிக்கொப்ப நம் உடலாக நல்ல உடலாகின்றது. ஆனால், உயிர் வெளியே சென்றுவிட்டால் அதே அணு ஜீவ அணுவாக இருப்பது உயிரணுவாக மாறுகின்றது.

உயிரின் துடிப்பால் இயக்கும் அணு “ஜீவ அணு”. அது நுகர்ந்த உணர்வின் மலம் நம் உடலாகும் பொழுது சிவமாகின்றது.

ஆனாலும் இந்த உயிர் உடலை விட்டுச் சென்றபின் இந்த ஜீவ அணு உயிரணுவாக மாறுகின்றது. உயிரணுவாக மாறிய பின் எந்த ஜீவ அணு நம் உடலை உருவாக்கியதோ அந்த உடலையே உணவாக உட்கொள்ளும் நிலை வருகின்றது.

அது உணவாக உட்கொண்டு வளர்ந்த பின் உயிரணுவான பிற்பாடு அதன் மலத்தை வெளியிடும் பொழுது நாற்றம் சகிக்க முடியாது. இறந்த பின் உடலிலிருந்து நாற்றம் வருவதை நீங்கள் பார்க்கலாம்.

இந்த உடலாக நாம் எந்தெந்த குணத்தை நாம் எடுத்தோமோ அதற்குத்தக்க நம் உடலில் “நல்ல மணங்களாக” இருக்கின்றது. ஆனால், அதே உடலை இந்த உயிரணு நுகர்ந்து அது உணவாக உட்கொண்டால் நாற்றமாகின்றது. நம்மால் பக்கத்தில் இருக்க முடியவில்லை.

எத்தனை வகைச் செடிகளை இது கவர்ந்து அந்த அணுக்கள் அதன் உணர்வின் தன்மையை நம் உயிரணு கவர்ந்து ஜீவ அணுக்களாக மாறியதோ இது உயிர் சென்ற பின் இந்த உடலை இந்த ஜீவ அணுக்கள் உயிரணுக்களாக மாறி அதன் உடலாகிப் புழுக்களாகிவிடுகின்றது.

மனிதனுக்குள் எத்தனை விதமன வேதனைகளைப் பட்டோமோ எத்தனை வேதனைப்படுத்தினோமோ, எத்தனை துயர்படுத்தினோமோ இந்த உணர்வின் அணுக்கள் புழுவாகி மலமாகும் பொழுது அந்த நாற்றமாக வெளிப்படுகின்றது.

இப்படி நாற்றமாகும் உடலைத்தான் நம் வாழ்நாளில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் பெரிதாக மதித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.. யாரும் இல்லை என்று மறுக்க முடியுமா?

என் அம்மா என்போம், அப்பா என்போம், கணவன் என்போம், மனைவி என்போம், அண்ணன் தம்பி, தங்கை இன்னும் என்னென்னவோ சொல்வோம்.

உயிர் வெளியேறி விட்டால் எவ்வளவு நேரம் அந்த உடலை வைத்திருக்கின்றோம்? ”உடலை எப்பொழுது அடக்கம் செய்வார்கள்” என்று தான் உடனே கேட்கின்றோம்.

அந்த மெய்ஞானிகள் காட்டியது உயிரே கடவுள். அவனின்றி ஒரு அணுவும் அசையாது. ஆனால், உயிரைப் பற்றி நாம் சிறிதளவாவது, சிறிது நேரமாவது சிந்திக்கின்றோமா?

“அவனுடன் அவனாக” (உயிருடன்) – “அவனாக நாம் ஆகும் நிலையை” நாம் எய்த வேண்டும். இதைத்தான் கோவில்களில் “மனித உடலைப் பெற்ற நீ தெய்வமாக ஆகு..,” என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஆனால், நாம் இன்றும் கடவுளைத் தேடிக் கொண்டே தான் இருக்கின்றோம்.