ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 22, 2016

கணவன் உயர வேண்டும், அருள்ஞானம் பெறவேண்டும் என்று மனைவியும், மனைவி உயரவேண்டும் அருள்ஞானம் பெறவேண்டும் என்று கணவனும் எண்ணினால் சொர்க்கலோகம்

மகரிஷிகளின் அருள் சக்தியை கணவன் தான் பெற்ற சக்தி தன் மனைவிக்குப் பெறவேண்டும் என்றும் மனைவி தன் கணவனுக்குப் பெறவேண்டும் என்று அவர்கள் இரு மனமும் ஒன்றாகி அந்த வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் பெண்பாலுக்குத்தான் அதிக சக்தி உண்டு.

தனித்த நிலையில் நீங்கள் எந்தக் குணத்தை எண்ணினாலும் வீரிய சக்தி எடுத்துத் தவமிருந்தாலும் முனி என்ற நிலையாகும். இந்த உணர்வின் தன்மை மற்றவரின் சுகத்தைக் கெடுக்கச் செய்யும்.

முனி என்ற நிலை வரும் போது திருமணம் ஆகாதபடி அவர்கள் கடும் தவமிருப்பார்கள். அவர்களுக்குள் வளர்ச்சி இருக்காது. வேதனை உணர்வுகள் தனக்குள் வளரப்படும் பொழுது ஒருவரைத் “தொலைந்து போ.., “ என்று அவர்கள் சொன்னால் தொலைந்து போகும்.

அதே சமயத்தில் உணர்வை அங்கே குடும்ப வாழ்க்கையிலிருந்து பிரிக்கச் செய்யும். ஆகவே இதைப் போன்ற நிலையில் முனி என்ற உணர்வாகி பிறருக்குத் துன்பங்களை உருவாக்குமே தவிர நன்மைகளை உருவாக்காது.

நன்மைகளை உருவாக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

முதலில் குடும்பத்தில் கணவனும் மனைவியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று தன் மனைவிக்குப் பெறவேண்டும் என்று கணவனுக்குப் பெறவேண்டும் என்றும் எவெரொருவர் செய்கின்றனரோ அவர்கள் இந்த வாழ்க்கையில் நஞ்சை வெல்லும் அருள் சக்தி பெறுவர்.

கூடுமானவரையிலும் குடும்பத்தில் பெண்கள் சந்தோஷமாக இருக்கட்டும். அங்கே தொழில்கள் வளர்ச்சியாகும்.

பெண்கள் சோர்வடைந்தால் அங்கே தொழில்கள் குன்றும். சோர்வடையும் உணர்வு வரப்படும் பொழுது சோர்வின் தன்மை கலவையாகி எதன் உணர்வோ அதனைத் தான் வளர்க்கும்.

ஆகவே, பெண்பாலின் உணர்வுகளை என்றுமே அந்த அருள் உணர்வு அவர்கள் பெறவேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

அதைப் போல் அவர்களும் அந்த உணர்ச்சிகளை வளர்ச்சி அடையச் செய்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும் என்றும் எண்ணுதல் வேண்டும்.

எண்ணிவிட்டு கணவனுக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எவெரொருவர் சேர்த்துச் செயல்படுகின்றனரோ இந்தப் புவியில் இருளை அகற்ற முடியும்.

பெண்களின் உணர்வுகள் சக்தி தான் சிவமாகின்றது. சிவத்திற்குள் சக்தியாகத்தான் நம்மை இயக்குகின்றது. பெண்பாலின் உணர்வுகள் நமக்குள் அதிகரித்தால் அவர்களுடைய அன்பும் பண்பும் பரிவும் நமக்குள் உயர்ந்ததாக எண்ணினால் அந்த மகிழ்ச்சி என்ற உணர்வு நமக்குள் நிச்சயம் உருவாகும்.

ஆனால், பெண்களை எதிர்க்கும் நிலையில் வெறுப்பை ஊட்டினால் அந்த வெறுப்பின் தன்மை கணவன் பெற நேர்ந்தால் அவர் எத்தொழிலுக்குச் சென்றாலும் வெறுக்கும் உணர்வுகளும் சிந்தனையற்ற நிலைகளும் சோர்வடையும் தன்மை தான் வரும்.

ஆகவே, நாம் சொர்க்க பூமியாக மாற்றவேண்டும் என்றால் பெண்கள் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் அந்தப் பேரருளைப் பெறவேண்டும். மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை அது பெறவேண்டும் என்று ஆண்கள் எப்பொழுதுமே இவ்வாறு நினைத்து இந்த உணர்வுகளை வளர்த்தல் வேண்டும்.

அவர்களும் எப்பொழுதுமே கணவன் உயர வேண்டும் அருள்ஞானம் பெறவேண்டும் என்ற உணர்வினைக் கொண்டு வந்தால் இது சொர்க்கலோகமாக மாறுகின்றது. நம் உயிரே சொர்க்கவாசலாக மாறுகின்றது.