ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 14, 2016

கலியில் தப்பி கல்கி என்ற ஒளி நிலை பெறுங்கள்

கலி கல்கி என்ற நிலைகளில் உலகம் இன்று இயங்கிக் கொண்டுள்ளது.

உதாரணமாக, ஒருவனைக் கொலை செய்வது ஒருவனைத் துன்புறுத்துவது, நல்லவர்களை வாழவிடாது தடுப்பது. பிறருக்குத் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்பது இவை எல்லாம் கலி என்று பொருள்.

இந்த மனிதனின் வாழ்க்கையில் நஞ்சினை வென்று பிறர் துயர்களை அவன் பார்வையில் நீக்கி துயரங்களை எல்லாம் நீக்கும் நிலை பெற்று உணர்வினை ஒளியாக மாற்றி அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்து நஞ்சினை வென்றிடும் வலுவான சக்தி பெற்றவன் கல்கி.

இந்த மனிதனின் வாழ்க்கையில் அகஸ்தியன் துருவனாகி உலகில் உள்ள அனைத்து நிலைகளையும் கண்டறிந்து உணர்ந்து அவன் வாழ்க்கையில் பேரருள் பேரொளி என்ற நிலைகளை அடைந்து ஒளியின் உடலாக துருவ நட்சத்திரமாக இருக்கின்றான், அது கல்கி.

அதாவது, பல உணர்வுகளையும் உயிரைப் போல ஒன்றாக்கி உணர்வின் தன்மையை ஒளியாக்கிச் செல்வது தான் கல்கி.

நம் பூமியில் அப்படிப் பெற்ற முதல் மனிதன் தான் அகஸ்தியன்.

கலி என்ற தீமையின் நிலைகளை நீக்குவதற்குத் தான், உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மையாக கல்கி என்ற நிலையை எல்லோரும் அடையத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் அருள் உணர்வுகளை உங்களுக்குள் உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்து வருகின்றோம்.

தீமைகள் வரும் போது யாம் பதிவாக்கிய அருள் உணர்வுகளை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால், அதனைப் பெறவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று இச்சைப்பட்டால் அந்த முதல் மனிதன் அகஸ்தியன் சென்ற பாதையில் எளிதில் நீங்கள் ஒளி நிலை (கல்கி) அடையலாம்.