ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 16, 2016

எல்லோருக்கும் உதவி செய்தேன்..., ஆனால் எனக்கு இப்படி வந்துவிட்டது..! என்றால் அதைத் தடுப்பது எப்படி..?

கஷ்டம் என்று ஒருவர் கேட்டால் அவர் கஷ்டத்தைக் கேட்டு பணத்தைக் கொடுத்துவிடுகின்றீர்கள். அவர் கஷ்டமெல்லாம் உங்களிடம் விளைந்து விடுகின்றது.

அடுத்து, நான்கு பேருக்கு நல்ல மனிதன் என்று சொல்லி அவருக்கு உதவி செய்தேன், இவருக்கு உதவி செய்தேன் எல்லாம் செய்தேன்.., கடைசியில் ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான் என்பார்கள்.

நீங்கள் நுகர்ந்த உணர்வு கொண்டு இந்த உணர்ச்சிகளைத்தான் உங்கள் உயிர் ஆளுகின்றது. ஆனால், இதன் வழி அவர்களைக் காக்கின்றோம். உங்களைக் காக்க என்ன செய்கின்றீர்கள்?

எல்லோருக்கும் உதவி செய்தீர்கள். உங்களைக் காக்க என்ன செய்தீர்கள்?

இதைப் போன்ற நிலைகளில் நான் இப்பொழுது சொல்கிறேன். நல்லவர்கள் தான் பெரும்பகுதி இரக்கம் ஈகை கொண்டாலும் வேதனைப்பட்ட உணர்வுகள் வீட்டில் குடும்பத்தில் கஷ்டம் என்ற நிலைகள் கேட்கப்படும் பொழுது இந்த நிலைகள் வருகின்றது.

எம்மிடம் வருபவர்கள் என்ன சொல்கிறார்கள்?

எத்தனை தரம் யாம் சொன்னாலும் கூட என் பையன் குறும்புத்தனம் செய்து கொண்டேயிருக்கின்றான். என் நோய் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது, கடன் வாங்கியவர்கள் கொடுக்கவே மாட்டேன் என்கிறார்கள், இதைத்தான் கேட்கிறார்கள்.

எனக்கு அந்த நல்ல அருளைக் கொடுங்கள். அவர்களுக்கும் நல்ல அருள் கிடைக்க வேண்டும். கடன் வாங்கியவர்கள் திரும்பக் கொடுக்கும் எண்ணமும் அந்தச் சக்தியும் வரவேண்டும். இப்படி யாராவது கேட்கின்றார்களா என்றால்.., இல்லை.

ஒருவர் சொல்வதைக் கேட்டாலே உங்களுக்குள் இத்தனை துயரங்கள் வருகின்றது. நீங்கள் அத்தனை பேரும் எம்மிடம் வந்து கஷ்டம், கஷ்டம் என்று சொன்னால் என் உயிரில் பட்டால் என்ன ஆகும்?

அந்த உணர்ச்சிகளை எனக்குள் சேர்க்க வேண்டுமா?

உங்களுக்கு நல்லது செய்வதற்கு மாறாக காடு மேடெல்லாம் அலைந்து பல நிலைகளைப் பெற்று வந்தாலும் இப்பொழுது 1000 பேர் எனக்குள் வந்து குறைகளைச் சொன்னால் உங்கள் வலு எனக்குள் வந்து என்ன ஆகும்?

எனக்குப் பாதுகாக்கும் சக்தி இல்லை என்றால் உங்களுக்கு முன்னாடி நான் எங்கேயோ போய்விடுவேன். பல நோய்களை எடுத்து போகவேண்டியது இருக்கும்.

ஆனால், குரு கொடுத்த அருளால் இதையெல்லாம் நீக்கி உங்களுக்கு நல்லதாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.

தயவு செய்து “எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது” என்ற வார்த்தையை விட்டுத் தள்ளுங்கள். எங்கள் குடும்பத்தில் ஒன்று சேர்த்து வாழும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

இதைச் சொன்னால் கேட்பதற்கு ஆளே இல்லை. திருப்பிச் சொன்னோம் என்றால் “நான் மறந்துவிட்டேன்” என்கிறார்கள். காரணம் என்ன?

உடலில் உள்ள அணுவிற்கு அது சாப்பாடு தேவை.

உதாரணமாக கருவாட்டுக் குழம்பை நாற்றத்துடன் சாப்பிட்டால் அது ருசியாக இருக்கும். மீன் குழம்பு வைத்தால் நாற்றமாக வைத்தால் நன்றாக இருக்கும்.

ஆனால், நல்ல குழம்பை வைத்து ருசியாகச் சாப்பிட வேண்டும் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? ஐய்யய்ய..,, எனக்கு இது ஆகாது அந்த நாற்றமாக இருந்தால் தான் சாப்பிடுவேன்.

அதே மாதிரித்தான் உணர்வின் அணுக்கள் அந்தச் சுவையைப் பெற்றால் அந்த உணர்வின் தன்மைதான் விளையும். இதைப் போன்ற நிலைகள் நம் மனிதன் வாழ்க்கையில் வருகின்றது.

 துருவ நட்சத்திரம் சர்வ தீமைகளையும் வென்றது, நஞ்சினை ஒளியாக மாற்றும் திறன் பெற்றது. ஆகவே, அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்களுக்குள் அறியாது வரும் தீமைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.