ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 22, 2016

யாம் பதிவாக்கும் அருள் ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்தால் உயிர் உங்களை அருள் ஞானியாக உருவாக்கும்

என்னமோ சாமி கட.., கட.., என்று பேசினால் எங்களுக்கு என்ன தெரிகிறது? என்று நீங்கள் எண்ணிவிட வேண்டாம்.

ஒரு குழந்தையை நீங்கள் எடுத்துக் கொண்டால் நாம் சொல்வதைக் கேட்கச் செய்த பின் அடுத்து கேட்டீர்கள் என்றால் அப்படியே திருப்பிச் சொல்லும்.

நீங்கள் பல வேலைகளில் இருக்கின்றவர்கள் இதையெல்லாம் நாம் என்றைக்குப் பார்க்கப் போகிறோம்.., கேட்கப் போகிறோம்..,? என்று விட்டீர்கள் என்றால் தீர்ந்தது. யாம் சொல்வதை அழித்துவிடுகின்றீர்கள் என்று அர்த்தம்.

ஆகவே பதிவான நிலைகளை நினைவு கொள்ளுங்கள்.

ஒவ்வொரு சமயத்திலும் அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதியச் செய்துள்ளேன். சந்தர்ப்பத்தில் இக்கட்டான நிலைகள் வரும்போது யாம் பதிவு செய்த இந்த உணர்வுகள் உங்களுக்கு உதவி செய்யும்.

திட்டுவோரின் உணர்வு உங்களுக்குள் பதிவாகும்போது சங்கடமாகின்றது. அந்தச் சங்கடமான நேரத்தில் வெறுப்பு என்ற உணர்வுகள் அதிகரித்து அதே வெறுப்பான காரியங்களைச் செயல்படுத்தச் செய்கின்றது உங்கள் உடலை, அந்த உயிர்.

இதைப் போலத்தான் நன்மை என்ற நிலையில் பண்பு பரிவுடன் பிறரைப் பார்த்து உணர்ந்து உங்களை அறியாது நுகர்ந்த தீமையான உணர்வுகள் உங்களுக்குள் பதிவானதற்குள் அருள் உணர்வுகளை இப்பொழுது பதிவு செய்கின்றேன்.

அதை மீண்டும் நீங்கள் நினைவு கொண்டால் அந்தத் தீமைகளிலிருந்து விடுபட மகரிஷிகளின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் உங்கள் உயிரான ஈசன் நுகர்ந்ததைத் தான் இயக்குகின்றான். மகரிஷிகளின் உணர்வை அணுவாக உருவாக்குகின்றான். அதன் வழி உங்களை வழி நடத்துகின்றது.

ஆகவே நம் வாழ்க்கையில் நம் உயிர் ஈசனாக இருப்பினும் நாம் நுகர்ந்த உணர்வு தன் இனத்தை உருவாக்கும் ஈசனாக உருவாகின்றது.

நமக்குள் உருவாகும் போது ஈசனால் உருவாக்கும் நிலையைப் பிரம்மன் என்றும் பிரம்மத்தின் சக்தி நமக்குள் உருவாகும் போது அதாவது ஆவியாக இருப்பது ஒரு திடப் பொருள் ஆகும்போது (உடலாக) ஆண்பால் என்று காட்டுகின்றனர்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் சக்தி என்றும் மணத்தின் தன்மை நுகர்ந்ததை சரஸ்வதி ஞானத்தின் நிலைகள் கொண்டு அது எவ்வாறு இயக்குகின்றது என்ற நிலையை தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரம்.

நம் உயிர் நாம் நுகர்ந்ததை வைத்துத்தான் இயக்கும். ஆகவே, எமது உபதேசங்களைப் பதிவாக்கிக் கொண்டு தீமைகளிலிருந்து விடுபடும் உணர்ச்சிகளை நுகர்ந்தால் அதன் ஞானப்படி உங்கள் உயிர் இயக்கி உங்களை நஞ்சினை வென்றிடும் அருள் ஞானியாக உருவாக்கிவிடும்.

இதில் ஒன்றும் சிரமமில்லை.