ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 20, 2016

தீமையை நீக்கும் உணர்வைச் சேர்த்தால் தீமையை நீக்கி வாழும் ஒளிச் சரீரம் பெறமுடியும்

இன்று குறுகிய காலமே வாழ்கின்றோம். விஞ்ஞான அறிவால் பூமியே கரையும் தன்மைக்கு வந்துவிட்டது. இதற்குள் உங்கள் வாழ்க்கையை எப்படி உயர்த்த வேண்டும் என்று தான் உபதேசிக்கின்றோம்.

நீங்கள் எண்ணியதைத்தான் உங்கள் உயிர் உருவாக்குகின்றது. நீங்கள் எண்ணியத்தைத்தான் உயிர் இயக்குகின்றது. உணர்வின் தன்மை உடலாக்குகின்றது.

அதன் வழியே உணர்ச்சிகள் உங்களை இயக்குகின்றது. வேறு எந்தக் கடவுளும் அல்ல. நுகர்ந்த உணர்வை உங்கள் உயிர் ஈசனாக இருந்து உருவாக்குகின்றது.

உள் நின்று அதன் உணர்வின் வலிமையை ஊட்டுகின்றது. எதன் வலிமையைச் சேர்க்கின்றோமோ அதன் வழியே அடுத்து தீமையை நீக்கும் உணர்வை உங்கள் உடலுக்குள் சேர்த்தால் தீமையை நீக்கியே வாழும் உணர்வின் உடலாக மாற்றுகின்றது.

தீமையின் நிலையில் ஏங்கி இப்படியாகி விட்டது என்றால் தீமையின் செயலாக்கி அதன் உடலாகவே மாற்றுகின்றது.

ஆகவே, நீங்கள் எண்ணியதைத்தான் உங்கள் உயிர் உருவாக்குகின்றது. எண்ணியதை வைத்த்துத்தான் உயிர் ஆண்டவனாக உங்கள் உடலை ஆள்கின்றது.

ஆகவே, தெளிந்த மணம் பெறுவோம். நினைவிருக்கும் போதே இந்த நினைவெல்லாம் இப்பொழுது உங்களுக்குள் இருக்கின்றது.

வேதனையும் வெறுப்பும் கொதிப்பும் ஏற்பட்டுவிட்டால் அடுத்துச் சிந்தித்துச் செயல்படும் தன்மை இல்லை. உங்களுக்குள் ஏற்கும் தன்மையும் இல்லை. பின் நாம் மாறுவதே மிகக் கடினம் தான், மாற்றியமைப்பதே மிகக் கடினம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் நினைவாற்றல் இருக்கும் பொழுதே அன்னை தந்தையை உங்கள் கடவுளாக மதித்து அவர்கள் தான் நம்மைத் தெய்வமாகக் காத்தார்கள் என்ற நிலையில் அவர்கள் குருவாக இருந்தார்கள் என்பதை முழுமையாக்கி அதன் வழி செல்லுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெற்று இருளை அகற்றி என்றும் பேரின்ப நிலை பெற்று என்றும் பிறவியில்லா நிலை அடையும் தருணத்தைத்தான் அவர் உணர்த்திய அருள் வழிப்படி உபதேச வாயிலாக ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே, ஒவ்வொருவரும் இதைப் பின்பற்றுங்கள்.

பௌர்ணமி தியானம் துருவ தியானம் போன்றவைகளைக் கொடுத்துள்ளோம். தியானத்தில் அருள் சக்திகளைக் கூட்டிக் கொள்ளுங்கள்.

அருள் உணர்வுகளை நூல் வடிவிலும் வெளிப்படுத்தியுள்ளோம். அதைப் படியுங்கள். உங்கள் மனதில் பதிவாக்குங்கள். அருளைப் பெருக்குங்கள். இருளை அகற்றுங்கள். பிறவியில்லா நிலை அடையுங்கள்.