ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 5, 2016

துருவன் இளம் வயதில் எப்படி “மகா சித்து பெற்றான்...”

நமது காவியங்களைப் படித்துப் பார்த்தால் முன்பு புலஸ்தியர் சொன்னார் (புலையர் என்பது மருவி புலஸ்தியர் ஆனது) என்று தான் காட்டியிருப்பார்கள்.

ஓர் அரசனுக்கு இரண்டு மனைவி, அவரவர்களுக்குக் குழந்தை உண்டு. அரசனுடன் பழகியிருக்கும் குழந்தையைத் தன் மடி மீது வைத்து அந்தத் தாய் கொஞ்சுகின்றது.

அந்த நேரத்தில் இன்னொரு தாயின் மகன் தன் தந்தையிடம் வந்து அமர்ந்து கொஞ்ச வேண்டும் என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது இந்தத் தாய் அவனைக் கொஞ்சவிடாது தடுத்தது.

அதனால் அவன் வெறுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றான். அங்கே தவமிருந்தான் என்று இப்படி நாம் உண்மையின் இயக்கங்களை நாம் அறியாதபடி தவறின் முறைகளைக் காட்டி துருவனின் இயக்கத்தை நாம் அறிந்திடாது செய்துவிட்டனர்.

அரசர்களுக்குகந்த நிலைகள் கொண்டு இப்படிப் பல நிலைகளைச் சொல்லி காவியங்களிப் படைக்கச் செய்து அசுர உணர்வுகளும் மற்ற குணங்களும் என்று பல பல காவியங்களாக மாற்றி மகாபாரதம், இராமயாணம் போன்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.

கந்த புராணம் சிவ புராணம் வந்தாலும் விநாயகர் என்ற நிலைகளில் இந்த அகஸ்தியன் கணபதியை வணங்கினான். அவனுக்கு சக்தி ஏற்பட்டது. ஆகவே, அவனிடம் எதையும் எதிர்த்துச் செய்ய முடியாது என்ற நிலைகளில் இப்படி கதைகளைக் காட்டி முழுமையும் காட்டாதபடி செய்துவிட்டனர்.

ஆக, காவியத் தொகுப்புகளை ஒவ்வொருவரும் அவரவருக்குத் தக்கவாறு வெளிப்படுத்தி இன்று நூல்களைப் படித்தவர்கள் உண்மையின் நிலைகளை அறியாது தான் படித்ததை தனக்குத் தெரிந்ததை அதையே பெரிது என்று வாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அகஸ்தியன் உருவான நிலையும், ஐந்து வயதில் துருவனாகும் போது பெற்ற ஆற்றல்மிக்க நிலைகளையும் எமக்குக் காட்டினார், உணர்த்தினார். 

அதாவது, காட்டிற்குள் சில தாவர இனங்களின் மணத்தைக் கண்டபின் பாம்பினங்களோ, மற்ற மிருகங்களோ அவைகளின் விஷத் தன்மை ஒடுங்கி பதுங்கி இருக்கின்றது. பச்சிலைகள் மணம் பட்ட பின் வலிமையான யானையும் தன் மூர்க்கத்தனத்தை இழந்துவிடுகிறது.

மூர்க்கத்தனமாகத் தாக்கித் தன் உணவாக எடுக்கும் யானையின் விஷத்தன்மைகள் இத்தகைய பச்சிலை மணங்கள் பட்டபின் ஒடுங்குகின்றது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காட்டுவாசிகள் காடுகளில் வாழ்ந்த புலையர்கள் இன்று அகஸ்தியன் என்று சொல்லும் அவனுடைய தாய் தந்தையர்கள் இதையெல்லாம் கண்டுணர்கின்றார்கள்.

காட்டு விலங்குகளிலிருந்து தப்பிக்க இந்தப் புலையர்கள் இத்தகைய பச்சிலைகளை அரைத்து முலாமாகப் பூசிக் குகைகளில் படுத்துக் கொள்கின்றார்கள்.

விலங்குகள் இரை தேடி வந்தாலும் அவர்கள் உடலிலிருந்து வரக்கூடிய மணத்தைக் கண்டபின் இதை நுகர்ந்த பின் மயக்கமடைந்து இவர்கள் பக்கம் வராது வேறு பக்கம் சென்று விடுகின்றது.

இவர்கள் முலாமாகப் பூசிய நிலைகளில் சந்தர்ப்பத்தால் கருவுறும் பொழுது கருவில் உருவாகும் அந்தக் குழந்தைக்கு தாய் தந்தையர் நுகர்ந்த மணங்கள் இணைந்து, நஞ்சினை வென்றிடும் அணுக்களாகப் பெருகுகின்றது.

இப்படிப் பத்து மாதங்கள் கழித்துப் பிறந்த குழந்தை அது பிறந்தபின் சூரியனை உற்றுப் பார்க்கின்றது. நாம் சூரியனை உற்றுப் பார்த்தால் கண்கள் கூசுகின்றது.

ஆனால், மோதலில் ஒளிப் பிழம்புகள் வருவதை அந்த உணர்வின் தன்மையை இந்தக் குழந்தை உற்றுப் பார்த்து சிரிக்கின்றான், மகிழ்கின்றான்.

பிரபஞ்சத்தின் உணர்வை அதன் தொடர் அலை வரிசையை அது எங்கே செல்கின்றதோ இந்தப் பிரபஞ்சத்தையும் அந்த இளம் பிஞ்சு உள்ளத்தில் அவன் உணர்கின்றான், மகிழ்கின்றான். ஆனால், வெளிப்படுத்தும் உணர்வு இல்லை.

நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவர்வதும் அதன் உணர்வுகள் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் மோதும் போது மத்தாப்பூ போல பொறி அலைகள் மாறுவதும் ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வு மாறுபட்டு மின் அணுக்களாக மாறுவதும் இதைப் போன்ற நிலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

விஷத்தை அடக்கி, உணர்வின் இயக்கத்தை அவன் நுகரும் உணர்வுகளை அவன் உயிர் அந்த ஞானத்தின் வழித் தொடராக ஒளியின் சிகரமாக எதையும் அறியும் அறிவாக அந்தப் பிஞ்சு உள்ளத்தில் அவனுக்குள் விளைகின்றது.

வெளிப்படுத்தும் உணர்வு இல்லை. ஆனால், நுகர்ந்த உணர்வு அவனுக்குள் விளைகின்றது.

இப்படி அவன் வளர்ந்து வரும் நிலைகளில் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றால் மற்ற மிருகங்கள் எல்லாம் யானையோ, புலியோ, பாம்போ மற்ற விஷ வண்டுகளோ இவர்கள் அருகில் வருவதில்லை

ஐந்தாவது வயது வரப்படும் பொழுது தனித்து இவன் காட்டுக்குள் சென்றால் மிருகங்கள் அனைத்தும் இவனைக் கண்டு பதுங்கி வருவதும் இவனுக்குப் பின் வருவதும் ஆக, இவன் ஒரு அரசனாகின்றான்.

அதே சமயத்தில் இவனைப் பின் தொடர்ந்து சென்றால் அங்கே உள்ள மக்கள் அனைவரும் மற்ற கொடூர மிருகங்களிடமிருந்து காக்கும் பண்பும் வருகின்றது.

இப்படித்தான் துருவனை அரசனாக பிற்காலங்களில் வைத்தார்கள். அதற்குப் பின் வராது. அவன் கடும் ஜெபம் எடுத்தான் என்ற நிலைகள் இருக்கும்.

ஆனால் அரசன் என்ற நிலைகளில் தான் காட்டினார்களே தவிர அந்தத் துருவன் எவ்வழியில் விண்ணுலகம் சென்றான் என்ற நிலை இல்லை.

நம் குரு காட்டிய நிலைகள், அகஸ்தியன் தாய் தந்தையர் தங்கள் உடல்களில் பூசிய நஞ்சினை வென்றிடும் பச்சிலை, மூலிகை மணங்கள் அவன் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் அணுக்களாக விளைந்தது. அதன் வழியில் தான் பேராற்றல் மிக்க சக்திகளையும் அகஸ்தியன் பெற முடிந்தது.

அகஸ்தியன் தன் ஐந்தாவது வயதில் துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து, துருவத்தின் ஆற்றலைப் பெற்றான். விண்ணுலக ஆற்றலை அறிந்தான், 27 நட்சத்திரங்களின் ஆற்றலையும் பெற்றான். அகண்ட அண்டத்தையும் அறிந்தான்.

அணுவின் ஆற்றலையும் அறிந்தான், தாவரவியல், புவியியல், உயிரியல் என்று அனைத்தையும் அறிந்தான். 16 வயதில் திருமணமாகி தான் பெற்ற சக்தியை மனைவிக்குப் பாய்ச்சி இரு உயிரும் ஒன்றெனெ இணைந்து ஒளியின் சுடராக மாற்றி துருவ நட்சத்திரமானான்.

நம் பூமியிலிருந்து விண்ணுலகம் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன். 

அவன் தான் இன்றும் துருவ நட்சத்திரமாக நின்று அதனின்று வெளிப்பட்ட உணர்வுகள் மற்ற மனிதர்களுக்குள் சென்று அவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக அவனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டுள்ளார்கள்.

அவர்கள் அனைவரும் மரணமில்லா பெருவாழ்வு எனும் அழியா ஒளிச் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.