ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 22, 2022

சாம வேதத்தின் மூலங்களை குருநாதர் எனக்குக் கற்றுக் கொடுத்தவிதம்

காட்டுக்குள் புலி செத்துக் கிடக்கிறது. அந்த உடலிலிருந்து வெளிப்படும் “அழுகிய உணர்வுகள்...” மணங்களாக வருவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.

அப்படிக் கவர்ந்து கொண்ட பின் அதனுடைய சக்தி வலிமையாக இருக்கின்றது. அதே சமயத்தில் இயற்கையிலேயே விஷத்தின் தன்மை கொண்ட ஒரு செடியின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி நுகர்ந்து
1.அது அலைகளாக வரப்படும் பொழுது
2.இந்தப் புலியின் உணர்வின் தன்மையை நகர்த்திச் (துரத்தி) செல்கின்றது.

நகர்த்தி வேகமாகச் செல்லப்படும் பொழுது அடுத்துப் பல செடிகளின் உணர்வுகளுடன் மோதி இது கலவையாகி ஒரு சுழற்சி என்ற நிலையை அடைகின்றது.

இப்படி மூன்றும் ஒன்றாகிக் கருத்தன்மை அடைகின்றது. எடை கூடி பூமியின் ஈர்ப்பில் சிக்கி மண்ணிலே பதிகின்றது.

உதாரணமாக… வேப்பமரத்தினுடைய சத்தும் ரோஜாப்பூவினுடைய சத்தும் விஷச் செடியினுடைய சத்தும் சேர்ந்து புது விதச் செடியாகக் கருவேப்பிலையாக மாறியது போன்று…
1.இரத்தத்தை உறிஞ்சி வாழும் புலி (இறந்தது) உடலிலிருந்து வந்த உணர்வுகள்
2.மற்ற விஷச் செடியின் மணத்துடனும்… விஷமற்ற செடியின் மணத்துடனும் இணைந்து
3.புது விதத் தாவர இனமாக மாறுகின்றது

அந்த வித்து முளைத்துக் கொடியாகவோ செடியாகவோ வளர்ந்த பின் இரத்தம் கொண்ட மனிதனோ யானையோ புலியோ குருவியோ அந்த இடத்திலே சென்றால் அதை அப்படியே இழுத்துக் கவர்ந்து இரத்தத்தை உறிஞ்சிவிடும்… மடிய வேண்டியது தான்.

அஸ்ஸாம் காடுகளில் இது நிறைய உண்டு. இது எல்லாம் எப்படி இருக்கிறது...? என்ற நிலையைக் குருநாதர் காட்டினார்.

இங்கே நாம் வாழும் பகுதியில் அனேகமாக இல்லை. வைத்தியத்திற்காகப் பறித்து விடுவார்கள்.
1.கேன்சர் நோய் வந்த இடத்தில் இந்தச் செடியின் சத்தை மேலே தடவினால்
2.விஷத்தின் தன்மையை இது உறிஞ்சிடும் சக்தி பெற்றது.

இதைப் போன்ற செடிகள் விளைவது மிகவும் கடினம்.

அக்காலத்தில் இதை “ராஜ வைத்தியம்...” என்று சொல்வார்கள். அரசர்களுக்கு இதைப் பயன்படுத்திப் பயன்படுத்தி இந்த வித்தை மீண்டும் வளர்க்காது மறைந்தே போய்விட்டது.

குருநாதர் இத்தகைய செடிகள் எல்லாம் எப்படி உருவாகின்றது...? உருவானது…? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக காடுகளிலும் மேடுகளிலும் எம்மை (ஞானகுரு) அலையச் செய்தார்.

எனக்கு அங்கே சாப்பாடு இரண்டு பேரிச்சம்பழம்... இரண்டு பச்சிலை அவ்வளவுதான்…! அதைச் சாப்பிட்டு விட்டுத் தண்ணீரைக் குடித்துவிட்டு… குருநாதர் சொன்ன வழியில் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

இப்படித்தான் இயற்கையின் நிலைகளைப் பார்க்கும்படி செய்தார்.
1.ஒவ்வொரு நொடிக்கு நொடியும் இந்த காற்று மண்டலம் எப்படி மாறுகின்றது…?
2.எதன் வழி அது இயங்குகின்றது…?
3.செடி கொடிகளின் உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்று அந்த நிலையைப் பார்த்துக் கொண்டே நான் செல்ல வேண்டும்.

ஒரு இடத்தில் சுழிக்க்காற்று வருகிறது என்றால் அங்கு ஓடிச் சென்று நான் பார்க்க வேண்டும். எங்கே நிலை பெறுகிறதோ அங்கே பூமியிலே படரும் இடத்திற்குச் சென்று மணத்தால் அதை நுகரும்படி செய்வார்.
1.மணத்தால் நுகர்ந்து என்னென்ன செடிகள் வந்தது…? எல்லாம் கலந்து எப்படி ஆகிறது…?
2.புதுவிதமான செடிகளாக எப்படி உருவாகிறது…? என்று காடுகளிலும் மலைப் பகுதிகளிலும் பார்க்கும்படி செய்தார்.

இதைத்தான் ஆயுர்வேதம் என்று சொல்வார்கள். தாவர இனங்களின் உணர்வுகள் உணர்ச்சியாக இயக்குவதைச் “சாம வேதம்...” என்றும் சொல்வார்கள் .

இயற்கையின் உண்மை… அந்த உணர்ச்சியின் தன்மை எப்படி உருவானது…? ஒரு செடியின் வாசனை அது எப்படி இயக்குகின்றது…? இந்த உணர்ச்சியின் தன்மை எப்படி இயக்குகின்றது…?

ஒரு உணர்வுக்குள் ஒரு உணர்வைச் சேர்த்து ஒரு உணர்வுக்குள் மருந்தாகக் கொடுக்கப்படும் பொழுது இசைக்கொப்ப இந்த உணர்வுகள் இசையை மாற்றி எவ்வாறு செய்கிறது...? என்று வேதங்களின் மூலங்களில் இது கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த உண்மைகளை நீங்களும் உணர வேண்டும்… உங்களுக்குள் இயக்கும் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அறிய வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.