ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 26, 2022

“செத்த பிற்பாடு...” யாருக்கு என்ன தெரியப் போகிறது...? என்று சாதாரணமாக நினைக்கின்றனர்

எனக்குத் தொல்லை கொடுக்கின்றான்... என் குடும்பத்தை நாஸ்தி செய்கின்றான்... அவனை விடுவேனா பார்...! என்று எண்ணினால் உடலுக்குப் பின் அவன் உடலுக்குள் சென்று அதே வேலையாக அந்தக் குடும்பத்தையும் கெடுக்கிறது.

குழந்தை மீது மிகுந்த பாசமாக இருந்தால் போதும். வாழ்க்கையின் கடைசியில் உடல் நோயினால் அவஸ்தைப்படும் பொழுது நான் போய்விட்டால் அவன் என்ன செய்வான்...? ஏது செய்வான்...? எப்படித் தன்னைப் பாதுகாப்பான்...? என்று எண்ணி உடலை விட்டு உயிரான்மா பிரிந்தால் அந்தக் குழந்தையின் உடலுக்குள் சென்று எல்லாவற்றையும் அவனை இழக்கச் செய்துவிடுகிறது.

ஏனென்றால்
1.இப்படி மூன்று லட்சம் பேருடைய உணர்வுகள் அது எப்படி இயங்குகின்றது...?
2.உடலுக்கு பின் என்ன...? என்கிற நிலையை அறிந்த பின்பு தான் உங்களிடம் இந்த உண்மைகளைச் சொல்கின்றேன்.

செத்த பின்னாடி என்ன தெரியப் போகின்றது...? யார் என்ன செய்யப் போகின்றோம்...? என்று தான் பெரும் பகுதியானோர் சொல்வார்கள். பேய் வந்து ஆடுகிறது என்றால் அது எப்படிப் பேய் எப்படி ஆடுகிறது...? என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அது அவர்களைப் பிடித்தது என்றால் சரியாய் போய்விடும்.

ஒருவர் இப்படித்தான் சாமியே இல்லை... பூதம் இல்லை...! என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் குடும்பத்திலே ஒருவர் இறந்த பின் அந்த ஆவி அவர் பெண் குழந்தை மீதே வந்து விட்டது.

வந்த பின் என்னிடம் (ஞானகுரு) ஓடி வந்தார். ஏன் குழந்தை என்னென்னமோ சொல்ல ஆரம்பிக்கின்றது என்றார்.

“நீ தான் கடவுளே இல்லை...” என்று சொன்னாய் அல்லவா என்றேன்.

கடவுளே இல்லை என்று தான் சொன்னேன் ஆனால் இந்தப் பிள்ளை தெரியாத வார்த்தைகளை எல்லாம் பேசுகிறது. குழந்தையின் தலையில் இருந்து குங்குமம் வருகின்றது. அதற்கு ஒன்றுமே தெரியாது ஆனால் வருகின்றது. ஏதாவது பேச ஆரம்பித்தால் நல்ல நறுமணங்கள் வருகின்றது. இது என்னப்பா... விசித்திரமாக இருக்கின்றது...? என்றார்.

நீ தான் பேயும் இல்லை பூதமும் இல்லை என்று சொன்னாய். “சாமி இல்லை...” என்கிற பொழுது இது எப்படி இருக்கும்...? என்கிற நிலையில் நீ தெரிந்து கொள் என்று விளக்கத்தைச் சொன்னேன்.

மந்திரத்தை ஏவியதால் தலையிலிருந்து குங்குமம் வருகிறது. மனித உடலிலிருந்து ஆன்மா பிரிந்து இன்னொரு உடலுக்குள் போனால் என்ன செய்யும்...? என்று நீ தெரிந்து கொள் என்றேன்.

பின்னர் தன் நாஸ்திகத்தையே அவர் விட்டுவிட்டார்.

ஆனால் இதற்காக நீ மந்திரவாதியிடம் செல்ல வேண்டாம். நான் சொல்லும் முறைப்படி தியானத்தைச் செய். அந்த குழந்தையைச் சீராக்க முடியும் என்று சொன்னேன்.

அதே பிரகாரம் அவர் செயல்படுத்தும் போது அந்தக் குழந்தை நன்றாக ஆனது.

குருநாதர் இப்படிப் பல அனுபவங்களை எமக்குக் கொடுத்ததைத் தான் உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன். இயற்கையின் உண்மைகளை அறியும்படி செய்தார்... நுகரும்படி செய்தார். அந்த உணர்வை எனக்குள் ஊட்டினார்.

காடு மேடல்லாம் அலைந்து திரிந்து தான் அதை எல்லாம் அறிந்து கொண்டேன். ஆனால் நீங்கள் உட்கார்ந்து அமைதியாகக் கேட்கின்றீர்கள்.

சிரமப்பட்டுத்தான் நான் இதை வளர்த்தேன் அதன் வழியில் கண்ட உண்மைகளைத் தெரியப்படுத்துகின்றேன்
1.உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்... நீங்கள் நினைவு கொள்ளுங்கள்
2.தீமையிலிருந்து விடுபடுங்கள்... பிறவி இல்லா நிலை அடையுங்கள்
அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்கள்.

அருள் உணர்வுகளைச் சேர்த்து தீமைகள் புகாதபடி அதை அடக்கி அருள் ஞான உணர்வின் கருவாக உருவாக்குங்கள்... இந்திரலோகமாக மாற்றுங்கள்... உடலுக்குள் பிரம்மலோகமாக மாற்றுங்கள்... சொர்க்கலோகமாக உருவாக்குங்கள்... சிவலோகத்தைச் சொர்க்கலோகமாக மாற்றுங்கள்.

1.உயிருடன் ஒன்றி உடலை விட்டு வெளி வரும் போது உயிரைச் சொர்க்க வாசலாக அமையுங்கள்
2.எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்தீர்களோ உயிர் அங்கே அழைத்துச் செல்லும்
3.உங்களை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யும்.

அந்த அருள் பெற வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கின்றேன் உங்கள் உயிரை வேண்டுகின்றேன். அவன் அமர்ந்திருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும்... அவனால் உருவாக்கப்பட்ட சிவனான உடலுக்குள் மகிழ்ச்சிக்குரிய நிலைகள் வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

இந்த உபதேசத்தின் வாயிலாகத் தீமை நீக்கும் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் ஒளியான அணுவின் கருக்களாக உங்களுக்குள் எப்படியும் உருவாக வேண்டும் என்று தான் மூச்சு விடாது பேசிக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

துருவ நட்சத்திரத்தை எண்ணி நீங்கள் தியானிக்கும் போது
1.உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது போன்று இந்த உணர்ச்சிகள் உங்கள் உடலில் பரவும்
2.அந்தச் சக்தி தொடர்ந்து உங்களுக்குக் கிடைக்கும்.