ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 6, 2022

அருளைத் தேடினால் தேவையான பொருள் தானாக வரும்... பொருளைத் தேடினால் வேதனை தான் வரும்

நம் பிரபஞ்சத்தில் உள்ள செவ்வாய்க் கோளை எடுத்துக் கொண்டால் “சிவப்பு நிறமாகவும்” புதன் கோளை எடுத்துக் கொண்டால் “மஞ்சள் நிறமாகவும்” இருக்கின்றது.

பல நட்சத்திரங்களுடைய கலவைகள் இதனுடன் (புதன் கோளில்) சேர்க்கப்படும் பொழுது உலோகத் தன்மை கொண்ட எத்தனையோ வகையான நிலையில் அது மாற்றிக் கொண்டிருக்கின்றது.

வியாழன் கோளை எடுத்துக் கொண்டால்...
1.நட்சத்திரங்களின் கதிர்வீச்சின் சக்திகளைத் தனக்குள் அடக்கி
2.ஒரு பொருளுக்குள் ஊடுருவி அதிலே இணைக்கும் சக்தியைக் கொடுக்கின்றது.

அதிலே வெளிப்படும் ஆவி தன்மைகள் மேகங்களாக மாறுவதைச் சனிக் கோள் தனக்குள் எடுத்து நீராக எப்படி மாற்றிக் கொள்கின்றது...? என்று இப்படி இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை எல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்

ஒவ்வொரு கோளும் தனக்கென்று உபக்கோள்களாக வளர்க்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தன்மைகள் கொண்டது. எட்டுக் கோள் 10 கோள் 12 கோள் என்று துணைக்கோள்கள் உண்டு.

வியாழன் கோளுக்கு 24 உபக்கோள்கள் உண்டு. அந்த 24 கோள்களும்
1.27 நட்சத்திரத்தின் சக்திகளை இது கவர்ந்து எடுத்துப் பல பல கலவைகளாகச் சேர்த்துக் கொள்கின்றது.
2.ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான நிலைகள் வரும்.
3.அதிலே ஒன்று இந்தப் பக்கம் சுற்றும்.. இன்னொன்று மறு பக்கம் சுற்றும்.

இன்றும் விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்வதற்குச் சிரமப்படுகின்றனர் அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையிலிருந்து வருகின்றதா...! என்ன...? என்கிற வகையில் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டே உள்ளார்கள்.

24 கோள்கள் அங்கே சுழன்று கொண்டிருக்கின்றது 27 நட்சத்திரங்களின் உணர்வுகளைக் கவரந்து இதற்குள் ஒரு மிக்சர் ஆகி இந்த உணர்வின் தன்மை “புது விதமான கதிரியக்கமாக” மாற்றுகின்றது.

சனிக்கோள் எப்படித் தனக்குள் உறை பனியாக மாற்றுகின்றதோ வியாழன் கோளும் இதே போன்று உறை பனியாக மாற்றிக் கொள்ளும் செயல்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் (ஞானகுரு) என்றால்
1.எதிர்காலத்தில் இந்த உண்மைகளை எல்லாம் நீங்கள் அறிய வேண்டும்
2.நான் மட்டுமல்ல... இந்த உண்மைகளை உணர்ந்து நீங்களும் தெளிந்து தெரிந்து
3.இந்த உலகின் இருளை மாய்க்கக் கூடிய சக்தியாக வளர வேண்டும்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவால் பேரழிவு வருகிறது அதிலிருந்து நீங்களும் மீள வேண்டும்... மற்றவர்களையும் மீட்க வேண்டும். “பிறவி இல்லை” என்ற நிலையை நீங்கள் ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.

இந்த உடலில் இருக்கும் வரை “எந்த நிலையில் இருந்தாலும்” கோடி செல்வங்கள் வைத்திருப்பினும் அந்த செல்வம் நமக்கு உறுதுணையாக இருப்பது இல்லை.

1.உடல் நலம் சரியில்லை என்றால்
2.அந்த செல்வத்தைக் கொண்டு வந்து முன்னாடி வைத்தாலே நமக்கு வெறுப்பு தான் வரும்.

சொத்திலே பாகங்கள் பிரிக்கும் போது சகோதரர்களுக்குள் வெறுப்பான உணர்வுகள் வரப்படும் போது அதனால் நோயின் தன்மை ஆகும்பொழுது
1.இதனால் தான் எனக்கு பகைமை ஆனது இதனால் தான் நோயானது என்று
2.பணத்தைப் பார்த்தாலே வெறுப்பு வரும்... இந்தக் கிரகத்திலேயே நான் முழிக்க வேண்டாம் என்று வரும்

ஆகவே பொருளைப் பற்றி எண்ணாதபடி அருளைப் பெற வேண்டும் என்று எண்ணி வளர்த்துக் கொண்டால் பொருள் மேல் ஆசை வராது.

பொருள் மீது ஆசை இல்லாதபடி அருள் ஞானம் பெற வேண்டும் என்று ஆசையை வளர்த்தால் கிடைக்கக்கூடிய பொருளைச் சிதறாது அந்த அருள் சக்திகளை எடுக்கப்படும் போது மனது நிம்மதியாக இருக்கும்.
1.இந்த வாழ்க்கையில் நமக்குத் தேவையான
2.போதுமான செல்வங்கள் நிச்சயம் வந்து கொண்டே இருக்கும்