ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 2, 2022

மந்திரவாதிகள் செய்யும் சில தந்திரமான வேலைகள்

அன்று சாங்கிய சாஸ்திரங்களை ஏற்படுத்தினார்கள் அல்லவா... அந்த அரசர்கள்...! அதற்கென்று ஒரு கூலி ஆளை வேலைக்கு வைத்திருப்பான் ஐந்தாம் படை என்பார்கள்.

அது போன்று தான் இன்றும் அந்த வழியில் வந்தவர்கள் மந்திர தந்திர வேலைகள் செய்து கொண்டுள்ளார்கள்.

உடலை விட்டு ஒருவர் பிரிந்தால் அதற்கென்று இன்று சாங்கியங்களைச் செய்கிறோம். அதை எல்லாம் செய்து கொண்ட பிற்பாடு தனித்துப் பிரித்து வைத்துக் கொண்ட பின்
1.நம் வீட்டு வாசல் படியில் இருக்கும் மண்ணை எடுத்துக் கொள்வார்கள்.
2.அதை எடுத்த பின் அதற்கென்று தனித்த இடத்திற்குக் கொண்டு செல்வார்கள்.

இறந்தவரின் உடலை எங்கே புதைத்தார்களோ அதைத் தெரிந்து கொள்வார்கள். புதைத்திருந்தால் அந்த இடம் அல்லது சுட்டு (தகனம்) இருந்தால் அந்த இடம். அங்கே செல்வார்கள்.

எந்த தெய்வத்தின் மேல் அவர் பக்தி கொண்டு வாழ்ந்திருந்தாரோ எந்தெந்த வழிகள் அதைப் பின்பற்றி மந்திரம் எல்லாம் சொன்னாரோ அதை வரிசைப்படுத்திச் சொல்லிக் கொண்டே வருவார்கள்.

இந்த தெய்வத்தின் மீதுதான் அவர் பக்தி கொண்டார் என்ற நிலை வந்தவுடனே இறந்தவர் வீட்டில் அவர்கள் தந்தையை நினைத்துச் சாமி கும்பிடுவார்கள். ஆனால் அவர்கள்
1.சுடுகாட்டில் பாத மண்ணை வைத்து மந்திரத்தை சொல்லி
2.அந்த இறந்த ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வான்.

கைவல்யப்படுத்திய பின் பல பல வேலைகளைச் செய்வான். குட்டிச்சாத்தான் ஆக மாற்றுவான்... பில்லி சூனியத்திற்குப் பயன்படுத்துவான்... ஒரு சிலரின் நோய்களைப் போக்கவும் பயன்படுத்தலாம்.

இதுகள் எல்லாம் செயல்படுத்துவதற்கு... கர்ப்பத்தில் உருவாகும் கரு கலைந்தது (ABORTION) என்றால் அதை எடுத்துக் கொள்வார்கள். ஆஸ்பத்திரிக்குச் சென்று பிரசவத்தின் போது வரும் பனிக்குட நீரை எடுத்துக் கொள்வார்கள் இது எல்லாம் மந்திரவாதிகள் செய்யக்கூடிய நிலைகள்.

அதை எடுத்து வைத்துக்கொண்டு மந்திரத்தைச் சொன்ன உடனே இந்த குழந்தையினுடைய (பனிக்குட நீரை எடுத்த குழந்தையின் ஆன்மா) ஆன்மா பிரிந்துவிடும்.

மந்திரத்தால் அதைக் கவர்ந்து கொண்டு சில கரு வித்தைகளை எல்லாம் செய்வார்கள் அதாவது... ஜோதிடங்கள் பார்ப்பது குடும்பங்களைக் கெடுப்பது தனக்கு ஆகாதவர்களுக்கு தீய செயல்களைச் செய்வது... குட்டிசாத்தானாக வைத்து வேலைகளைச் செய்வார்கள்.

ஆகவே
1.இந்த சாங்கிய சாஸ்திரங்களில் சிக்குண்ட குடும்பங்கள் எல்லாம்
2.இப்படி பேயாகப் போய்... நோயாகப் போய்... சர்வ நாசமாக ஆகிப்போகும் நிலைகள் தான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது.

உடலை விட்டுப் போன பிற்பாடு அந்த ஆன்மாக்களுக்கு நாம் இங்கே உணவை வைத்துக் கூப்பிடுவோம். ஆனால் கடைசியில் இன்னொரு உடலுக்குள் சென்று அவஸ்தைப்பட்டு அந்த உடலை விட்டுப் போன பிற்பாடு தேளாகவோ பாம்பாகவோ பூச்சியாகவோ தான் பிறக்க வேண்டி வரும்.

குடுகுடுப்புக்காரன் வீட்டுக்கு வந்தால் புது துணியைக் கொடுத்தால் வாங்க மாட்டான். பழைய துணிகளைத் தான் கேட்டு வாங்குவான் காரணம் நம் உடலிலிருந்து வெளி வந்த மணம் அதிலே இருக்கும்.

அதை வைத்து மந்திரங்களை ஜெபித்த உடனே
1.இங்கே வீட்டில் நாம் என்னென்ன செய்திருக்கின்றோம்...?
2.வீட்டிற்குள் நாம் மறைத்து வைத்திருக்கக்கூடிய அடுக்குப் பானையில் இருப்பதையும் சொல்ல ஆரம்பிப்பான்.

இப்படி இதை இவனுக்கு ஒரு பிழைப்பாகச் செய்வான். பற்றாக்குறைக்கு ஆகாதவர்கள் யார் என்று தெரிந்து வைத்திருப்பான். அவனே அதாவது செய்துவிட்டு வந்து “உங்களுக்கு ஆகவில்லை...” என்பான்.

காரணம்...
1.இன்னார் தான் உங்களுக்கு இந்தக் கெடுதலைச் செய்தார்கள் என்று சொல்வான்.
2.நாம் அடப்பாவிகளா...! என்போம்.
3.எல்லாம் சொன்ன பின்... வெளியிலே சொல்லக்கூடாது ஆபத்தான விஷயம் என்று
4.நம்மிடம் சத்தியமும் வாங்கிக் கொள்வான். பரிகாரம் என்ற பெயரில் காசையும் வாங்கிக் கொள்வான்.

சிநேகிதமாகச் சொல்வது போல் சொல்லி தலை முடியும் பழைய துணிகளையும் கொடுங்கள் என்று அதையும் கேட்டு வாங்கிக் கொள்வான்.

தலைமுடி பழைய துணியை வைத்து அதற்கென்ற கருவை வைத்து மணலில் எல்லாவற்றையும் கலந்து சில வீடுகளில் தூவிவிடுவான்.

அந்த மணல் பட்டதென்றால்
1.வீட்டிலிருப்பவருக்குக் கை கால் வராதபடி செய்யும்
2.குழந்தை உருவானால் அந்தக் கருக்களைச் சிதையச் செய்வது.
3.சில இடங்களில் நிறைய இது போன்று செய்வார்கள்.

இந்த மாதிரித்தான் சாங்கியங்களைச் செய்து... காசைக் கொடுத்து மோட்சத்திற்கு அனுப்பி விடலாம் என்று நினைக்கின்றார்கள்...! ஆனால் மோட்சத்திற்குச் செல்ல முடியாது.

1.இந்தச் சாங்கிய சாஸ்திரப்படி அனுப்பினோம் என்றால் நிச்சயம் நரக வேதனைப்படும் நிலைகளுக்குத் தான் செல்ல முடியும்
2.மனிதனல்லாத உயிரினமாகத்தான் உருவாக்குமே தவிர
3.மீண்டும் மனிதனாகக் கூட வரத் தகுதி இல்லாது போய்விடும்.