ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 22, 2022

அனைத்து உயிராத்மாக்களும் தன் வளர்ப்பில் வளர்ச்சி கொள்வதற்காக வித்திட்டவர்கள் மகரிஷிகளே…!

கொங்கணர் ஞானம் பெற்ற நிலைகளை விவரிக்கத் தொடங்கினால் அது எந்த வகை என்றுரைக்க நினைப்பதற்கு அடங்கிடுமோ..?

“மாடி வீட்டு அரசன்... கோடி வீட்டுப் புருஷன்...!” என்ற வகை உண்மை நிலையில் இவர் வேறு... அவர் வேறு...! என்று பிரித்துச் சொல்லும் வகையில் “கோடி வீட்டுப் புருஷார்த்த புருஷனே கொங்கணர்...!” என்றாலும் அவர் எடுத்த அவதார நிலைகளே பாலாஜி... வெங்கடேஸ்வரன்... ஸ்ரீனிவாசன்...!

இருந்தாலும் பின் அவரே மாடி வீட்டு அரசன் ஆக ஆன செயலில் இரு வகைச் சூட்சமங்கள் பெற்ற அவதாரமே ஸ்ரீனிவாசன் என்னும் வெங்கடேசக் கொங்கண மாமகரிஷி.

ரிஷி மூலம் பார்க்காதே... நதி மூலம் பார்க்காதே...! என்று அக்காலங்களில் சொல்வார்கள். அதனின் வகையில்
1.மெய்ப் பொருளைக் கண்டறிந்த அந்த மாமகரிஷிகள் பெற்ற ஞானத்தை மட்டும் நாம் அறிந்து
2.அதைப் பெறுகின்ற ஞானத்தின் வளர்ச்சிக்கு முயல்வோம்.

அறிவின் வளர்ச்சிக்கு வளச்சியூட்டும் செயலாக அந்தக் கொங்கணர் பெற்ற சூட்சமத்தின் தொடர் நிலைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அன்றைய கால கட்டங்களில் ஞானி சித்தனாகி... சித்தன் முனிவனாகி... பின் ரிஷியாகும் தொடர்பில் அனைத்தையும் அனுபவ ஞான வளர்ச்சி என்னும் தொடர்பில் பெற்றவர்கள் தான்.

தனது அறிவின் ஞான வளர்ப்பை மீண்டும் மீண்டும் வளர்ப்பாக வளர்த்திடவும் இந்த உலக மக்கள் உய்வு (பிறவியில்லா நிலை) எய்திடவும் ஏற்படுத்தப்பட்டது தான் ஜெப நிலையும் தியான நிலையும்.

அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய... வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மூச்சலைகளையே ஒவ்வொரு உயிரும் உண்ணும்படியாக தியானத் வழித் தொடரை ஏற்படுத்தினார்கள்.

எந்தெந்த உயிராத்மாக்கள் எண்ணி ஏங்குகின்றதோ அவர்களுக்கெல்லாம்
1.தாங்களே (மகரிஷிகளே) உணவும் ஆகி
2.உணவாக்கிட விறகாகவும் எரிந்து
3.ஆகாரமாகப் புசிக்கும் பக்குவ கதியில் அதாவது நமது உயிரான்மாக்கள் ஆன்ம சக்தியைக் கூட்டிடும் ஆகார கதிக்குத் தானே ஆகாரமாகி
4.பேரருள் பேரொளி சக்தியையே அளித்திட்ட வள்ளல் பெருமக்களே மகரிஷிகள் ஆவர்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிராத்மாக்களும் தன் வளர்ப்பில் வளர்ச்சி கொள்வதற்காக வித்திட்டவர்கள் மகரிஷிகளே.

நம்முடைய வளர்ச்சிக்கு வழி காட்ட உறுதுணையாக இருந்து... நாம் பெறும் சக்திக்கே சக்தி அளித்திட்ட..
1.அந்தச் சக்தியின் செல்வங்கள் (மகரிஷிகள்) பெற்ற நற்சக்திக்கு வலு சேர்க்கும் விதமாக
2.நம்முடைய ஞான சக்தியை வளர்த்திடும் நிலையாக நாம் அனைத்தையும் அறிந்து உணர்ந்திட வேண்டும்.

கோபம் குரோதம் காமம் ஆசை விருப்பு வெறுப்பு என்னும் தொடரிலே அவசரம் ஆத்திரம் பழி பாவம் என்று வரும் நிலையில் அவை அனைத்தையும் நாம் நீக்கிடும் உயர் ஞான சக்திக்கு அந்தக் கொங்கணவர் பெற்ற... பெற்று அளித்துக் கொண்டிருக்கும் அனுபவப் பாடம் நமக்குப் பேருதவியாக இருக்கும்.

ஏனென்றால் கொங்கணவர் தன் தாய் சக்தியின் தொடர்பு மூலமாகவும் தன் மனையாளின் சக்தி (பத்தினி) மூலமாகவும் தான் துர்க்கதியை அகற்றி நற்கதியை அடைந்தார்.

தாய் சக்தி… மனைவி சக்தி... என்ற ரிஷி பத்தினி சக்தியின் கலப்பு பெற்ற அந்த மாமகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் ஏங்கிப் பெற்றால் அவர்களின் வளர்ச்சியின் அருள் ஒளி வட்டத்தில் நாம் அனைவரும் கலந்திடலாம். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்...!