ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 1, 2021

எண்ணத்தை வைத்துத் தான் தியான நிலையையும் சுவாச நிலையையும் ஒருநிலைப்படுத்த முடியும் - ஈஸ்வரபட்டர்

 

தியான நிலை… சுவாச நிலை… வேண்டும் என்று கேட்கின்றாய். இப்பொழுது இங்கே கொடுக்கும் பாடங்கள் எல்லாம் என்னப்பா..?
1.சுவாச நிலையே தான் தியான நிலை.
2.தியான நிலையே தான் சுவாச நிலை.

பூஜையில் அமர்ந்து நீ விடும் சுவாச நிலையில் ஜெபித்திடும் ஜெபங்கள் தான் சுவாச நிலையும் தியான நிலையுமாப்பா…? இல்லையப்பா…!

உன் எண்ணத்திற்குப் பல காலம் பல வழியில் பல வழிகளை நானும் என் சிஷ்யனும் செப்பிவிட்டோம். இன்னும் வேண்டுகிறாய் தியான நிலைக்கும்… சுவாச நிலைக்கும்…!

1.நீ எண்ணும் எண்ணமே தான் தியான நிலையும்… சுவாச நிலையும்… பெரும் ஜெப நிலையும்...!
2.எண்ணும் எண்ணமே தான் உன் வாழ்க்கை நிலையும்… உன் உடல் நிலையும் புரிந்ததா…?

எண்ணும் எண்ணம் போல் வாழ்வு…! என்பார்கள். எண்ணும் எண்ணமே தான் வாழ்க்கையுடன் கலந்து வருகிறது.

உன் வாய் திறந்து சொல்லும் சொல்கள் தான் காற்றிலே சுற்றுகிறது என்று எண்ணுகிறாய். உன் மனதில் எண்ணும் சிறு எண்ணமும் உன் சுவாச நிலையில் தான் சுற்றுகிறது.

நீ எண்ணும் எண்ணமெல்லாம் உன் சுவாச நிலையில் வெளிப்படுகின்றது. நீ பிறவி எடுத்த நாள் முதல் கொண்டு நீ எண்ணிய எண்ணமும்… நீ சிரித்த… அழுத… பேசிய எல்லா ஓசைகளுமே உன்னைச் சுற்றியே தான் வந்து கொண்டிருக்கின்றது.

உன் கடந்த காலத்தை எண்ணிப் பார்…!

உன் நினைவில் நீ ஒன்று நினைத்ததும் நீ ஒன்று நடத்தியதும் ஞாபகத்தில் வந்திடும்.
1.நீ பேசிய பேச்சுக்கள் மட்டும் தான் சுற்றிக் கொண்டுள்ளது என்று எண்ணுகிறாய்
2.நீ நினைத்ததும் உன்னையே தான் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்தப் பிறவி மட்டுமல்ல…! ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் அவன் உயிரணுவின் சுவாச நிலை எல்லாமே அவன் உள்ளவரை சுற்றிக் கொண்டே தான் உள்ளது.

இந்த உலகம் சுற்றுவதே இச்சுவாச நிலையில் தான்.
1.மனிதனைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் மனிதன் வாழ்கின்றான்.
2.உலகைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் உலகம் உருள்கின்றது.

உன் சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எந்த நிலைக்கப்பா நான் அருள்வது…? நீ எண்ணும் எண்ணமே தான் சுவாச நிலை… ஜெப நிலை… பெரும் ஜோதி நிலை எல்லாமே…!

காலத்தைக் கடத்தி விட்டாய்…! இனி இருக்கும் காலத்தில் உன் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எய்திடப்பா…!

எண்ணும் எண்ணத்திலேயே மனிதன் வாழ… எண்ணம்தான் உயிர் ஜீவனப்பா…!
1.உன் உயிருக்கு ஏதப்பா ஆகாரம்…?
2.எண்ணும் எண்ணம் தான் அந்த உயிரின் ஜீவனப்பா…!
3.புரிகிறதா...! மிகவும் விளக்கமாகச் சொல்லியுள்ளேன்.

இதைப் புரிந்து கொண்டால் உன் எண்ண நிலையை உயர்த்தி மகரிஷிகளுடனும் சித்தர்களுடனும் நீ கலந்திடலாம்…!