ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 29, 2021

குருநாதர் எனக்கு இராஜதந்திரமாகக் கொடுத்த சக்தி

 

எத்தனையோ பேர் எத்தனையோ விதமான கஷ்டங்களில் இங்கே வந்திருப்பீர்கள். குடும்பத்தில் கஷ்டமாக இருக்கும்... பிள்ளை சொன்னபடி கேட்காதிருக்கும்... நோய் வந்து கஷ்டமாக இருக்கும்... உதவி செய்தும் கஷ்டமாக இருந்திருக்கும்... தொழிலில் நஷ்டம் இருந்திருக்கும்... வியாபாரத்தில் மந்தமாக இருக்கும்... இப்படி எத்தனையோ சிக்கல் இருக்கும்.

இந்த எண்ணம் உள்ள அத்தனை பேருக்குமே
1.எந்தெந்த எண்ணத்தில் நீங்கள் வந்தீர்களோ அந்தந்த எண்ணங்கள் மாறி
2.உங்களுக்கு உயர்வான சக்தி கிடைக்க வேண்டும் என்று தான்
3.அருள் உபதேசத்தைக் கொடுத்து இந்த உணர்வை உங்களுக்குள் ஊடுருவச் செய்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்கிறோம் (ஞானகுரு).

உங்கள் உடலில் உள்ள எல்லாக் குணங்களிலும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியையும் 27 நட்சத்திரங்களின் உணர்வுகளையும் ஈர்க்கும்படித் தூண்டி... இந்த உணர்வின் தன்மை கொண்டு காந்த சக்தியைப் பெறச் செய்து... எல்லோருடைய உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெறச் செய்கிறோம்.

உதாரணமாக... குழம்பிலே புளிப்பு உப்பு காரம் துவர்ப்பு எல்லாம் போட்டு ஒரு ருசியாக எப்படிக் கொண்டு வருகின்றோமோ இதே போல் எல்லோருடைய உணர்வுகளிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும்படி செய்து கொண்டிருக்கின்றோம்.

ஞானிகளைப் பற்றி உபதேசித்து அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்யும்போது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது.

அப்படிக் கவர்ந்த உணர்வுகளை உங்கள் செவிகளில் படும்படி செய்து உங்கள் உடலுக்குள் இருக்கும் குணங்களுக்குள் இது ஆழமாக ஊடுருவச் செய்து “1008 குணங்களிலும்...” பதியச் செய்கின்றோம்.

1.ஏனென்றால் எனக்கு குருநாதர் எப்படி இராஜதந்திரமாக உள்ளுக்குள் நுழைய வைத்தாரோ
2.அதைப் போல் தான் உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி... உணர்வின் தன்மையைத் தட்டி எழுப்பி
3.உங்களுக்குள் துன்பத்தை ஊட்டி கொண்டிருக்கும் வேதனைகள் நீங்குவதற்கு இதைச் செய்கிறோம்.

அந்த உணர்வின் தொடரை நீங்கள் மீண்டும் இதே போல் எண்ணி எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளைப் பெற முடியும். உங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாம்.

1.குருநாதர் எனக்குத் துன்பத்தைக் கொடுத்து அந்த ஆற்றலைத் தெரிய வைத்தார்.
2.உங்களுக்குத் துன்பம் வரப்போகும் போது இந்த முறையைக் கையாண்டால் அதனின் இயக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
3.தியானத்தில் இந்தச் சக்தியை எடுத்ததால் இந்தத் துன்பம் போனது...! என்று நீங்கள் அறியலாம்.

ஆக... கஷ்டம் இல்லாமல் நீங்கள் பெறுகின்றீர்கள். “சாமி இலேசாகச் சொல்கிறார்...” என்று அலட்சியமாக இதை விட்டுவிடாதீர்கள். காரணம்...
1.வாக்கினால் யாம் சொல்லும் போது
2.இதை எண்ணி எடுப்பவர்களுக்குச் சீக்கிரம் நல்லதாகிறது.

நீ உருப்படுவாயா...? என்று ஒருவர் நம்மைச் சொன்னால் நீ அப்படியா சொல்கிறாய்... என்று அதே வார்த்தையை நாம் எடுத்துக் கொண்டால் என்ன ஆகிறது...!

நம் வியாபாரத்தில் மந்தம்... கை கால் குடைச்சல்... தலை வலி,,, மேல் வலி என்று உங்களை இப்படிக் கீழே கொண்டு போகிறது.

அதே போல் துன்பத்தைத் துடைப்பதற்குச் “சாமி சொன்னாரே...” என்று நினைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தீர்கள் என்றால் இந்தக் காற்றிலிருந்து வரும் அந்தச் சக்தி உதவி செய்யும்.

உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் சேர வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கும் போது...
1.சில நேரங்களில் விண்...விண்.. என்று
2.உங்கள் நெற்றியிலோ உடலிலோ இந்த உணர்வுகள் ஏற்படும்.
3.எம்முடைய வாக்கினைப் பதிவு செய்தவர்களுக்கு நிச்சயம் இந்த உள் உணர்வுகள் வரும்.

உங்கள் உடலில் இருக்கும் துன்பங்கள் நீங்க வேண்டும் என்பது தான் என் பிரார்த்தனை. உங்கள் உயிரான ஈசனைத் தான் நான் பிரார்த்தனை செய்கிறேன். உயிர் தான் இந்த உடலை உருவாக்கிய ஆற்றல்மிக்க சக்தி.

இப்படி ஆயிரக்கணக்கானவர்களை நான் பிரார்த்திக்கும் போது அந்த “ஆயிரம் பேரின் சக்தியும்...” எனக்குக் கிடைக்கிறது. குருநாதர் எனக்குக் காட்டிய வழி இது தான்.

ஆகவே பல உணர்வின் தன்மையை எடுத்துச் சூரியன் எப்படி ஒளியாக மாறுகிறதோ அதே மாதிரி நீங்களும் இதைச் செய்து பாருங்கள். உங்களுக்குள்ளும் அந்த அரும் பெரும் சக்தி கூடும். ஆற்றல்மிக்க மெய் ஞானியாக வளர்வீர்கள்.