ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 13, 2021

உடலை விட்டுப் பிரிந்தால் ஆவி உலகில் நாம் அல்லல்படக் கூடாது - ஈஸ்வரபட்டர்

 

தேவர்கள்... அசுரர்கள்.. மனிதர்கள்... என்று இனம் பிரித்துக் காட்டினார்கள் நம் முன்னோர்கள். தேவர் என்பவர் யார்...? அசுரர் என்பவர் யார்...? மனிதர் என்பவர் யார்...?

எந்தெந்த வளர்ச்சி செயல் புரிந்து... எந்தெந்த எண்ண ஓட்டத்தில் வாழ்கின்றார்களோ அதனை இனம் பிரித்துத் தேவனாகவும் அசுரனாகவும் மனிதனாகவும் காட்டினர்.

இன்று நம்மிலேயே இந்த மூன்று வகைக் குணத்தவர் உள்ளனர். அவரவர்களின் எண்ணப் பயனால் அமைவதுவே இந்தக் குண நிலை. மனித ஆத்மாவுக்கு மட்டுமல்ல. அனைத்து நிலைகளுக்கும் இது உண்டு என்று உணர்த்தியுள்ளேன்.

நம் பூமியின் ஒத்த நிலைகள் மற்ற மண்டலங்களுக்கு மாறுபாடு கொள்கின்றன. சூரியனின் ஒளி அலையை ஈர்த்து நம் பூமி வெளிக்கக்கும் உஷ்ண அலையின் சக்தி நிலைப்படி நம் பூமியின் சுழற்சி ஓட்டமும் இயற்கைத் தன்மையும் அமைந்துள்ளன.

அது அல்லாமல் பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட விகிதத் தூரத்தைக் கொண்டும் நம் பூமியின் நீர் நிலையின் தன்மை கொண்டும் நம் பூமிக்குத் தொடர்புடைய மண்டலங்களின் ஈர்ப்பு அலைகளின் வெளிக்கக்கும் அமில குணத்தைக் கொண்டும் நம் பூமியின் இன்றைய குண நிலை உள்ளது. இது போல் மற்ற மண்டலங்களின் தன்மைகளும் மாறுபடுகின்றன.

உஷ்ண அலையில் வாழும் நம் பூமியில் பிரிந்து வாழும்... பிரிந்து என்பது
1.இந்தப் பூமியில் வாழ்ந்த ஆன்மாக்கள்
2.இந்தப் பூமியின் சுழற்சி ஓட்டத்துடன் எந்த இடத்தில் எந்த எண்ணத்தில் தன் ஆத்மா பிரிந்ததுவோ
3.அதே எண்ண நிலைக்கொப்ப அந்த உஷ்ண அலையின் நிலையுடனே
4.இந்தப் பூமியின் சுழற்சியுடன் இந்தப் பூமியின் ஓட்டத்திலும் இந்தப் பூமியின் ஈர்ப்புடனும் அதன் சுழற்சி நிலை உள்ளது.

நம் பூமி ஓர் இடத்தில் நிற்பதில்லை. சுழன்றே ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் பூமியிலிருந்து பிரிந்த ஆத்மாக்களும் அதன் சுழற்சியிலேயே ஓடிக் கொண்டே சுழன்று கொண்டே வருகின்றன.

ஆத்மா பிரிந்த பிறகு மேலுலகம் சென்று விட்டான் என்கிறனர்.
1.மேல் உலகம் என்பது எந்த உலகம்...?
2.இந்தப் பூமிக்கும் மற்ற மண்டலங்களுக்கும் மேல்... கீழ்... என்ற நிலை உள்ளதுவா...?
3.சூரியனின் ஒளி அலைகள் பாயும் மத்திய பாகத்தை மேல் பாகம் என்றாலும் இரவிலே கீழ் பாகத்தில் வாழுகின்றோமா...?

சுழலும் சுழற்சி வட்டத்தில் கீழும் இல்லை... மேலும் இல்லை...!

இந்தப் பூமியின் காந்த ஈர்ப்பின் நிலையுடன் ஒட்டி... பூமியின் சுழற்சியுடன் நாம் எப்படி அதன் ஈர்ப்பில் வாழ்கின்றோமோ அதைப் போல் தான் இந்த உலகில் வாழ்ந்து பிரிந்த உயிராத்மாக்கள் இந்த உலகின் ஈர்ப்பின் வட்டத்திற்குள் காந்த அமில வட்டத்திற்குள்ளேயே நம்முடன் கலந்தே தான் அவர்களின் அமில வட்டக் குணங்களும் உள்ளன.

ஆவி பிரிந்து அந்த ஆத்மா ஆகாயத்தில் சென்று நிற்பதில்லை...!

நம் மூதாதையர்களினால் சொல்லப்பட்ட நடந்த கதைகளில் பேய் பிசாசு வந்ததாகவும்... அதன் பாதம் நிலத்தில் பதியவில்லை...! என்றும் பேய்க்கும் பிசாசிற்கும் பாதம் நிலத்தில் பாவாது...! என்றெல்லாம் கதைகளாகக் கேட்டிருப்பீர்.

இவைகள் எல்லாம் கதைகள் அல்ல...! உண்மை நிலையில் வெளிப்பட்ட சில அர்த்தம் கொண்ட செயல் முறைகள் தான்.

1.பிம்ப உடல் இல்லாததினால் அவற்றின் உடல் பூமியில் பதிவதை நாம் காண முடியாதேயன்றி
2.மனித ஆன்மாக்கள் எப்படிப் பூமியில் வாழ்கின்றனவோ அதைப் போல்
3.ஆவி ஆத்மாக்களும் இந்த ஈர்ப்பின் வட்டத்திற்குள்ளேயே இருக்க முடியும்... இருக்கின்றன...!

இந்த ஈர்ப்பின் வட்டத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்றால் அதற்குகந்த ஞானம் பெற்றிருந்தால் தான்... அந்தப் பக்குவ வழியில் சூட்சமம் கொண்டோர்களினால் தான்... இந்தப் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்கு மேலே (வெளியிலே) செல்ல முடியும்.

1.இந்தப் பூமியின் சக்தி அலையில் இருந்து நம் ஆத்ம நிலை மற்ற நிலைகளுக்குச் செல்ல வேண்டும் என்றால்
2.அதற்குகந்த பயிற்சித் திறன் நாம் பெற்றிருந்தால் அதன் செயலில் செல்ல முடியும்.

மனிதனிலிருந்து பிரிந்து சென்ற ஆத்மாக்களினால் இந்த ஈர்ப்பின் தன்மையிலிருந்து பறந்து எங்கே வேண்டுமானாலும் செல்ல முடியாது.

பூமி சுழன்று கொண்டே உள்ள பொழுது பூமி சுழலுவதும் ஓடுவதும் நமக்குத் தெரிகின்றதா..? இல்லை...! அதே போல் அதன் ஈர்ப்பில் ஐக்கியப்பட்டுள்ள நம்மைப் போன்ற நிலைதான் இந்தப் பூமியில் பிறந்து இந்தப் பிம்ப உடலை விட்டுச் சென்ற ஆத்மாக்கள் நிலையும் உள்ளது.

ஆக உடலை விட்டுப் பிரிந்த எந்த ஆன்மாவாக இருந்தாலும் இந்தப் பூமியின் பிடிப்பிலே இதனின் ஈர்ப்பு வட்டத்தில் தான் இருக்க முடியும். மீண்டும் மீண்டும் உடல் பெற்றுத் தான் ஆக வேண்டும்.

1.இதிலிருந்து தப்பி இந்தப் பூமியின் ஈர்ப்பைக் கடந்து சென்று பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
2.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்லும் சப்தரிஷி மண்டலங்களுடன் நீங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்பதற்குத்தான்
3.இந்தப் பாடநிலைகளை விளக்கவுரைகளாகத் தொடர்ந்து கொடுக்கின்றேன்.