ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 5, 2021

தேடிய செல்வத்தை வைத்து வைத்தியம் பார்த்து உடலைக் காத்தாலும்... “உயிரான்மாவை ஒளியாக மாற்ற வேண்டும்”

 

உதாரணமாக நாம் வாழும் இந்த மனித வாழ்க்கைக் காலங்களில் வேதனை என்ற அணுக்கள் நம் உடலில் வளர்ச்சி அடைந்தால் கடுமையான நோய்களும் அதனால் மேலும் மேலும் வேதனை அதிகரிக்கின்றது.

1.தேடிய செல்வம் எத்தனையோ இருப்பினும்…
2.வைத்தியத்திற்குச் செலவழித்து உடலைப் பாதுகாத்தாலும்
3.உடலில் விளைந்த உணர்வுகள் கடைசி நிலை எதுவோ
4.அதன் வழி இந்த உயிர் அழைத்துச் சென்று வேறொரு உடலாக மாற்றிவிடும்.

ஆகவே இந்த உடலில் இருக்கும் பொழுதே துருவ நட்சத்திரத்தின் பேரருளை வளர்த்துப் பிறவி இல்லா நிலை அடைவதே கடைசி எல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அதை எண்ணி எண்ணி வேதனைப்படுவதோ… அல்லது தன்னைச் சார்ந்தோர் வேதனைப்படுவதை அடிக்கடி நுகர்ந்தாலோ… அதை எல்லாம் தூய்மைப்படுத்தவில்லை என்றால் தீய அணுக்களாக மாறி உடலில் நோய்களாக மாறிவிடும்.

ஆகவே ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் இதைப் போன்ற கஷ்டங்களோ நஷ்டங்களோ அது எது வந்தாலும்… உடலுக்குள் அதை வளர விடாது தடுக்கும் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

தடுக்க வேண்டும் என்றால் கார்த்திகேயா… என்ற ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைப் புருவ மத்தியில் இருக்கும் நம் உயிரில் அடிக்கடி இணைக்க வேண்டும்.

1.கண் வழியாக அந்த அரும் பெரும் சக்திகளைக் கவர்ந்தாலும்
2.கண்ணின் நினைவை உயிரிலே இணைக்கப்படும் போது
3.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் திறன் வருகிறது
4.அப்பொழுது மூக்கின் வழி செல்லும் தீய உணர்வுகளை அது தடைப்படுத்துகின்றது.

அதற்குப்பின் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைச் செலுத்தப்படும் போது அதுவும் வலுப் பெறுகிறது.
1.அப்பொழுது நம் உடலுக்கு முன் முகப்பில் உள்ள
2.விஷத் தன்மைகளைத் தூர ஒதுக்கிச் செல்ல… அங்கிருந்து வெளியே தள்ளி விடுகின்றது.
3.நமது ஆன்மா தூய்மை ஆகிறது.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆன்மா… ஒரு வட்டம் உண்டு. அந்த ஜீவான்மாக்களும் அப்போது சுத்தமாகிறது.

இப்படி ஒரு பயிற்சி நமக்குள் வளர்ந்துவிட்டால்…
1.உயிரைப் போன்றே நாம் நுகரும் உணர்வின் தன்மைகளும்
2.ஒளியின் அறிவாக அந்த அணுக்கள் வளர்ச்சி பெறும் சக்தி பெறுகின்றது.

அதாவது… உயிருடன் இணைந்து ஒளி என்ற ஆறிவு எப்படி இருந்ததோ… அதன் அறிவின் தன்மை பெற்ற அணுக்களை இப்படிச் சிறுகச் சிறுக மாற்றி… இந்த உடலுக்குப் பின் நாம் ஒளியின் சரீரமாக மாறுவதே கடைசி நிலை.

அந்த நிலைக்கு வரும்போது..
1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தோமோ
2.அதனின் ஈர்ப்புக்கே உயிர் நம்மை அழைத்துச் சென்று விடும்.