ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 30, 2021

நாம் பணிய வைக்க வேண்டியது எதை...?

 

ஓ...ம் ஈஸ்வரா என்று சொல்லும் போது பிரணவம்... நாம் எண்ணியதை உயிர் ஜீவன் பெறச் செய்கின்றது. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும் அது எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள்.

கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருங்கள்.
1.நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) கொடுக்கும் இந்த உணர்வு
2.அந்த உயர்வின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியைப் பெறச் செய்யும்.

இந்நேரம் வரை உபதேசித்த அந்த ஆற்றல் மிக்க சக்தியை “நீங்கள் எண்ணும் போதெல்லாம் எண்ணியவுடனே அதைக் கிடைக்கச் செய்து...” உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்த உணர்வுகள் அனைத்தையும் தாழ் பணியச் செய்வதே “எமது ஆசி” (ஞானகுரு).

ஆகையினால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மேல் நோக்கி நினைவினைச் செலுத்தி உயிரிடம் வேண்டித் தியானியுங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.

எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்... எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்... நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்...! என்று இதே மாதிரி நான் சொன்னதை நீங்கள் எண்ணி எடுத்துப் பாருங்கள்.

உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகள் அனைத்தும்
1.அது தாள் பணிந்து... உங்களுக்குள் அது ஒத்துழைத்து... உயர்வான எண்ணங்களுக்கு வழி காட்டியாக அது அமையட்டும்.
2.எதுவும் கெட்டதல்ல... உங்களுக்கு அது வலுவூட்டும்... வழி காட்டியாகவும் அது இருக்கும்
3.கெட்டது என்று அது தான் காட்டுகின்றது... அதை நீக்கிவிட்டு நாம் செல்ல வேண்டும்.

கெட்டது என்று வழி காட்டினாலும் அந்த உணர்வின் தன்மை அது எனக்குள் சேர்ந்து விடுகிறது. ஆனால் வழி காட்டிய நிலைகள்
1.எனக்குள் பணிந்து அந்த நல் வழி காட்டியாக இருக்க வேண்டும்.
2.அந்த நல் வழி காட்டிய விஷம் என்னை ஆட்கொள்ளக் கூடாது.

மெய் ஒளி பெறும் அந்தத் தகுதி கொண்டு நாம் அதைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் ஆசி வாங்குவது. ஆகையினால் இதை மீண்டும் மீண்டும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

1.அரசனுக்குக் கீழ்படிதல் என்பது கௌரவத்திற்காகத் தான்...!
2.ஒரு பெரியவரைக் கண்டால் அடிபணிதல் வேறு.
3.ஆனால் நமக்குள் துன்பங்களைப் பணியச் செய்வது என்பது வேறு.

ஆகவே மெய் ஒளி வளர்ந்து நமக்குள் தீமை செய்து கொண்டிருக்கும் அந்த உணர்வின் தன்மையைத் தாழ் பணியச் செய்ய வேண்டும் என்பதே ஆசீர்வாதமாகக் கொடுக்கும் அருள் வாக்கின் தன்மைகள்.

நீங்கள் ஒவ்வொருவரும் மெய் ஒளி பெறவேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).