ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 1, 2021

நாம் சேமிக்க வேண்டிய அழியாத சக்தி எது...? என்று இனி முடிவு செய்து கொள்ளுங்கள்...

 

நமக்கு இந்த உடல் சொந்தமா...? நாம் சேர்த்து வைத்த சொத்துக்கள் எல்லாம் நமக்குச் சொந்தமா...? ஆகவே இனி அழியாச் சொத்து எது...? என்பதை முடிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்... அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.இனி இருப்பதாவது நல்லதாக இருக்க வேண்டும்.
3.மற்றவர்களுக்கு ஒரு நல்ல அறிவும் ஞானமும் வர வேண்டும்
4.அவர்கள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் எல்லாமே செய்கிறோம். ஆனால் இந்த உடலை விட்டு உயிரான ஈசன் போய்விட்டால் என்ன செய்கிறது...? உடல் நீசமாகிறது. முதலில் சிவம் என்று சொல்கிறோம். கடைசியில் இதைச் “சவம்” என்று தான் சொல்கிறோம்.

எவ்வளவு உயர்ந்த மனிதனாக இருந்தாலும் சவமாக ஆன பிற்பாடு...
1.ஆயிரம் மாலைகளைப் போடலாம்
2.அப்புறம் கொண்டு போய் அனாதையாகத் தள்ளிவிட்டுத் தான் வருகின்றோம்.

இந்த உடல் நிலைத்திருக்கிறதா...? இல்லை. உயிர் வெளியே சென்று விட்டால் இந்த உடலுக்கு மதிப்பு இருக்கிறதா...?

அப்படி என்றால் நாம் எதை மதிக்க வேண்டும்...?

நம் உயிரை நாம் மதித்தாக வேண்டும்...! அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று வலுவாக்கிக் கொள்ள வேண்டும். அதை வலுவாக்கிய பின் இந்த உடலை விட்டு எப்பொழுது சென்றாலும்
1.நாம் எப்பொழுதும் அவனுடன் நிலையாக இருக்கலாம்.
2.அவனுடன் அவனாகவும்... “அவனாகவும்” நாம் வாழலாம்.
3.ஏனென்றால் உயிரால் உணர்வால் எடுத்துக் கொண்ட ஒளியின் நிலைகள் அது.

ஆனால் இப்பொழுதும் நாம் அவனுடன் அவனாகத் தான் வாழ்கிறோம். எப்படி...!

அன்றாட வாழ்க்கையில் நாம் எதை எதை எல்லாம் எடுக்கின்றோமோ “அந்த இம்சை எல்லாம்...” இந்த உடலில் இருக்கிறது. எம்மம்மா... ஐய்யய்யோ... அப்பப்பா...! இதுவும் அவனுடன் தான் வாழ்கிறோம்.

ஆகவே இருளை நீக்கிப் பொருள் காணும் உணர்வை உயிருடன் ஒன்றச் செய்யும் போது ஒளியின் சரீரமாகி நிலையான நிலைகள் பெறுகின்றோம்.

நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒளியின் சரீரமாக என்றும் நிலையாக இருக்கலாம்.

அது தான் கல்கி...!

1.உயிர் ஒளியாகின்றது... பல நிலைகளை வெல்கிறது.
2.மனிதனாக ஆன பின் நரசிம்மா... தீமைகளைப் பிளக்கின்றது.
3.தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளை விளைய வைக்கின்றது.
4.விளைந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி என்றும் நிலைக்கின்றது - கல்கி.

ஆனால் கல்கி எங்கேயோ இருக்கின்றான் என்று நாம் நினைக்கின்றோம்.

நம் உயிர் தான் கல்கியாக... அதிலே உணர்வுகள் வளர்ந்தது போல் எதனை இணைக்கின்றோமோ அதன் நிலை கொண்டு அதுவாகிறது. கார்த்திகேயா (வெளிச்சம்) தெளிந்திடும் அறிவு வருகிறது.

இந்த உடலில் அதைப் பெற்ற பின் இன்பத்தின் உணர்வின் தன்மை கொண்டு அவனுடன் இணைக்கும் போது என்றும் பேரின்பப் பெரு நிலை அடைகின்றது.

இந்த வாழ்க்கையில் கஷ்டம்... நஷ்டம்... துன்பம்... எல்லாம் வரும்.
1.கஷ்டம் வந்தாலும் உயிரின் பிடிப்பை விட்டு விடக் கூடாது.
2.அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி அதைச் செயல்படுத்த வேண்டும்.