ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 6, 2021

நல்ல நேரத்தையும் காலத்தையும்… நாம் தான் உருவாக்க வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

தீபத்திற்கு ஓ…ம் என்ற ஒலியின் உருவ எழுத்தினை மேல் வைத்து ஐம்புலனின் ஐக்கிய ஒளியை ஐந்து முகங்களாக்கி தீபமேற்றி வணங்கிட நம் முன்னோர்ககள் வழிப்படுத்திச் சென்றார்கள். ஒவ்வொரு முறைகளுக்கும் தத்துவ மையம் கொண்டே சகல நிலைகளையும் உணர்த்தினார்கள் அன்றைய சித்தர்கள்.

இப்படிப் பல முறைகளை உணர்த்தியும் வாழ்க்கை என்ற சுழலிலிருந்து ஞானம் பெறவும் அதற்குகந்த ஜெப முறையை வழிப்படுத்தியதை எல்லாம்
1.“அதற்குகந்த காலங்கள் வரட்டும்…!”
2.இப்பொழுது வாழும் இந்த வாழ்க்கை நிறைவுக்குண்டான வழி செயல் முற்றுப் பெற்ற பிறகு தான்
3.ஞான வழிக்கு நம் ஜெப நிலை செல்ல வேண்டும் என்று கால நிலையைக் கடத்தி
4.அதற்குகந்த காலத்தை ஏற்கும் நாளை எண்ணியே வாழும் காலத்தையே கடத்திவிடுகின்றனர்.

பசிக்கு உண்ணுகின்றோம். ஆனால் அதற்குகந்த காலம் வரட்டும் என்று காத்திருப்பதில்லை பசிப்பவன்…! அதே போல் எந்தச் செயலில் இருந்தாலும் எந்தச் சூழ்நிலையில் சிக்குண்டிருந்தாலும்
1.நம் உடலிலிருந்து வெளிப்படும் கழிவை வெளிப்படுத்த
2.அதற்குரிய “காலம் வரட்டும்…” என்று பொறுத்திருக்க முடிகின்றதா…?

உடலில் உள்ள அமிலத்தை உண்டு… கழித்தே… வாழும் நாம் அந்த உடலுக்குகந்த உயர் குணமுடைய அமில ஞானத்தைப் பெறுவதற்காக மட்டும் கால நிலையையும் வயது வரம்பையும் நீட்டி… வரும் நாள்.. என்று எண்ணிக் கடத்தி வருகின்றோம்.

இதனை உணர்த்தத்தான் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்திச் சாந்த குணத்தின் சக்தி அமிலத்தை ஈர்க்கும் ஜெப நிலையைப் பெறுங்கள் என்று சொல்கிறோம்.

அன்பு ஆசை என்ற பிணைப்பான நிலைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அதி அன்பினால் வரும் வினையையும்… அதி ஆசை கொண்ட பேராசைக் குணத்தையும் வழிப்படுத்திடாமல்
1.இந்தத் தீய குணத்தின் ஆணிவேரை முதலில் சமப்படுத்தும் பக்குவத்தை ஏற்று
2.நம் ஆத்ம ஜெபம் இருந்திடல் வேண்டும்.

ஆண்டவனின் அன்பைப் பெற “அன்பே தெய்வம்.. அன்பே சத்தியம்…!” என்ற அன்பு வெறிக்கு அடிமைப்பட்டாலும் நம் ஆத்ம நிலை உயருவது கடினம்.

நம் எண்ணமெல்லாம்…
1.இந்த உலகுடன் கலந்துள்ள அலையில் உள்ள
2.நல் அலைகளை மட்டும் சேமிக்கும் பழக்கத்தைத்தான் மேற்கொள்ள வேண்டும்.
3.தீய அணுக்கள் என்று ஒதுக்கியும் வெறுத்தும்
4.”நான் நல்லவன்…” என்ற ஒரே வெறி கொண்ட நிலை பெற்றாலும்
5.நம் ஆத்ம நிலை வளருவது கடினம் தான்.

கலாச்சார அடிப்படையில் வந்த உணர்வுகளை விலக்கி ஞானிகளின் கலாச்சாரத்தினை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றேன்.