ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 7, 2021

அகஸ்தியன் நுகர்ந்த பல கோடித் தாவர இனங்களின் சக்திகளை நுகரப் பழகிக் கொள்ளுங்கள் (அகஸ்தியரின் அருள் மணங்கள்)

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்திய மாமகரிஷியை நினைவு கொள்ளுங்கள். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகளையும் அவன் பிறந்த பின் அவன் பெற்ற சக்திகளையும் பெற வேண்டும் என்று உங்கள் புருவ மத்தியில் எண்ணித் தியானியுங்கள்.

1.அகஸ்தியன் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் நுகர்ந்து
2.அந்த உணர்வின் அறிவாகத் தனக்குள் உருபெற்றதை
3.விண்ணிலிருந்து வந்த உணர்வலைகளைத் தனக்குள் வளர்ச்சி பெறச் செய்த அந்த முதல் நிலைகளை எண்ணி
4.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியர் தாயின் கருவிலே பெற்ற சக்தி கொண்டு குழந்தைப் பருவத்தில் முதன் முதலில் விண்ணை நோக்கிப் பார்க்கும் போது சூரியனின் இயக்கத்தைப் பார்க்கின்றார்... கோள்களையும் நட்சத்திரங்களையும் பார்க்கின்றார்... அதை எல்லாம் தனக்குள் உணர்கின்றார்.

அன்று அந்த அகஸ்தியன் பார்த்த இந்தப் பிரபஞ்சத்தின் அதிசயங்களை நாமும் காண வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் அந்தக் குழந்தைப் பருவத்தில் விண்ணின் ஆற்றலைக் கண்டு மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக வெளிப்படுத்துகின்றான். அதை நீங்கள் நுகரும் போது
1.உங்கள் உடலிலே உள்ள அணுக்கள் அனைத்தும் ஒரு புத்துயிர் பெற்றது போன்று ஆகிறது
2.மகிழ்ச்சியான உணர்வுகள் உங்கள் உடல் முழுவதும் பரவும்
3.அதே சமயத்தில் அந்த அகஸ்தியனின் அருளாற்றல்கள் உங்கள் உடலில் ஊடுருவி
4.உங்கள் நெற்றியில் ஒளியின் சுடராகத் தெரிய வரும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அகஸ்தியன் உணர்வுகளைத் தனக்குள் விளையச் செய்து அந்த உனர்வின் அலையை எமக்குள் (ஞானகுரு) பாய்ச்சினார்.

அகஸ்தியன் பார்த்த விண்ணுலக ஆற்றலை எல்லாம் நம் குருநாதர் நுகர்ந்து இன்றும் அவர் ஒளியின் நிலையாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்,
1.அந்தக் குரு அருளின் துணையால்...
2.அகஸ்தியனின் உணர்வுகளை நீங்களும் பெறும் தகுதியை இப்பொழுது பெறுகின்றீர்கள்.
3.உங்கள் உடலுக்குள் அதை எல்லாம் உணரும் அறிவாகப் பதிவாகிறது.
4.அதனின் நினைவாக நீங்கள் எண்ணும் போதெல்லாம் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதியையும்... சக்தியும் பெறுகின்றீர்கள்.
5.உங்கள் புருவ மத்தியிலும் சரி... உடலுக்குள்ளும் சரி ஒளிக் கதிர்கள் பரவுவதை உங்களால் உணர முடியும்
6.நீங்கள் ஒளியின் சரீரம் ஆவது போன்று உணர்வீர்கள்.

அகஸ்தியன் குழந்தையாக இருக்கும் போது தன் தாய் தந்தையை உற்றுப் பார்க்கின்றான். தாய் தந்தையர் உடலில் அவர்கள் பூசிய அந்தப் பச்சிலை வாசனைகள் வருவதை அகஸ்தியன் நுகர்கின்றான்.
1.அதை இப்பொழுது நீங்களும் நுகர்ந்து இழுத்துச் சுவாசியுங்கள்.
2.உங்களுக்குள் அந்த மணங்கள் பரவி உங்கள் உடலில் உள்ள பிணிகளைப் போக்கச் செய்யும்.

அகஸ்தியன் அவன் நினைவைத் தன் தாய் தந்தையரின் பால் செலுத்தும் போது அவர்கள் உடலிலிருந்து வந்த மணங்களை நுகரும் போது அவன் மகிழ்ச்சியுற்ற உணர்வுகள் எவ்வாறோ அதைப் போன்று
1.உங்களுக்குள்ளும் அந்த மணங்கள் அனைத்தும் சென்று
2.உங்கள் உடலில் அறியாது சேர்ந்த கடும் தீமைகளை அடக்கும்
3.மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் உங்கள் உடலில் பரவும்... அதைப் பார்க்கலாம்... உணரலாம்...!

நாம் மலைப் பகுதிகளில் செல்லும் போது ஆங்காங்கு இருக்கும் தாவர இனங்களின் மணங்களை நுகர்வது போன்று... அந்த அகஸ்தியன் சுவாசித்த அருள் மணங்கள் உங்கள் சுவாசத்தின் வழி உடலுக்குள் சென்று... “பல அற்புத மணங்களாக உங்கள் உடலிலே பரவும்...!” உங்கள் நினைவுகள் அனைத்தும் மகிழ்ச்சி பெறும்.

1.அண்டத்தின் அறிவைக் கண்டுணர்ந்து
2.அதன் அறிவின் தொடராக அகஸ்தியன் வெளிப்படுத்திய அந்த அறிந்துணரும் சக்திகளை அனைவரும் பெற்று
3.அகஸ்தியன் வழியில் அருள் ஞானம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா... என்று ஏங்கித் தியானியுங்கள்.

முதல் தடவையாக இந்த உணர்வுகள் உங்களுக்குள் கொடுக்கப்படுகிறது (ஞானகுரு). அகஸ்தியன் அருள் மணங்களை நுகர்ந்தால் எத்தகைய நஞ்சினையும் அடக்க முடியும்.