ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 3, 2021

உங்களைக் காத்துக் கொள்ள “குரு அருளை... திரு அருளாகக் கொடுக்கின்றோம்...!”

 

நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்குத் தண்ணீர் குறையும். அதே போல் தான் ஞானியின் உணர்வை நமக்குள் செலுத்தச் செலுத்த நம்மை அறியாது புகுந்த தீமைகள் அகன்று செல்லும்.

இப்படி அந்த ஞானிகளின் அருள் சக்தியைச் சேர்க்கும் பழக்கத்திற்கு நாம் ஒவ்வொருவரும் வரவேண்டும்.

ஒவ்வொரு சமயத்திலும் குருநாதர் எனக்கு (ஞானகுரு) எப்படி ஞானத்தைப் போதித்தாரோ... அதை அப்படியே உங்களுக்கும் போதிக்கின்றோம்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்தால்...
1.வாழ்க்கையில் அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அதுவே உங்களுக்கு வழி காட்டும்
2.அருள் ஞானத்தைப் பெறச் செய்யும்
3.இருளைப் பிளக்கச் செய்யும்... பொருளைக் காணச் செய்யும்.

அறியாது தவறு செய்கிறார்கள் என்றாலும் அதிலே உள்ள பொருளைக் காண முடியும். இருளைப் பிளந்து காட்டும்... உண்மையின் தன்மையை அறிய முடியும்.

அப்பொழுது அருள் ஞானத்தின் சக்திகள் நமக்குள் பெருகுகிறது. நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டிருக்கும் தீமைகளை அது பிளக்கிறது. பொருள் காணும் திறனை நாம் பெறுகின்றோம்.

சிறிது காலத்திற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்துப் பாருங்கள். உங்கள் அனுபவம் பேசும்.

ஏனென்றால் காற்று மண்டலம் மிகவும் நச்சுத் தன்மையாக உள்ளது.

இருந்தாலும் அதை நாம் ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் அதைச் சீக்கிரம் நமக்குள் இழுக்கும். “ஐயோ... நச்சுத் தன்மையாக இருக்கிறது...” என்று அதைப் பதிவு செய்து விட்டால் அடுத்து அந்த நச்சுத் தன்மை தான் நமக்குள் வரும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படர வேண்டும்
2.எல்லோருக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் உயர்வு கிடைக்க வேண்டும் என்ற
4.இந்த உணர்வை எண்ணி எடுத்துக் கவர்ந்து அதை இங்கே பரப்பினால் போதும்.

ஆனால்...
1.நச்சுத் தன்மை... நச்சுத் தன்மை... என்ற அந்த உணர்வையே நுகர்ந்து கொண்டிருந்தால்
2.அதை இழுக்கின்றது... நம் ஆன்மாவாக மாற்றுகின்றது... நம்மையும் நஞ்சாக மாற்றத் தொடங்குகிறது.

இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு மெய்ப் பொருளைக் காணும் நிலைகளுக்கு நாம் வர வேண்டும். நம்மைக் காத்து மற்றவரையும் காக்கும் சக்தியாக அந்த ஞானத்தின் வழித் தொடரில் நாம் செயல்படுத்த வேண்டும்.

அதற்காக வேண்டித் தான் நமது குரு அருளைத் திரு அருளாக உங்களுக்குள் மாற்றும் நிலைகளுக்கு இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).