ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 2, 2019

தன்னைத் தாழ்த்தி மற்றவர்களை உயர்த்துவதே “அவதார புருஷர்களின் செயல்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


நம் பூமியில் சப்தரிஷிகளின் செயலினால் அந்தந்தக் கால மாற்றத்தில் அவர்களின் சக்தியை உணர்த்தப் பல உடல்களை ஏற்று “இம்மனித ஆத்மாக்களை வழி நடத்திச் சென்றனர்…!” என்று உணர்த்தி வந்தேன்.

இயேசு கிறிஸ்து காலத்தில் நடந்தவை என்ன…?

அவர் வாழ்ந்த காலத்தில் அன்றுள்ள மக்களைத் தன் ஒளி வட்டத்தில் கலக்கச் செய்ய சப்தரிஷியினால் இயேசு கிறிஸ்து அவதரித்தார்.

அவரை அன்றைய மக்கள் ஏற்றுக் கொண்டு அவர் வழி நடக்கத் தவறி…
1.அன்றைய அரசு தன் புகழ் குறையும் என்பதற்காக அந்த மகானைத் துன்புறுத்தியதைத்தான் உலகம் அறியும்.
2.ஆனால் இயேசு கிறிஸ்துவால் செயலாக்கிய நிலைகள் எவை என்பதை உணர முடிந்ததா…?
3.பரிவையும் பண்பையும் பாசத்துடன் அன்பாக்கி ஊட்டிச் சென்றார் இயேசு பிரான்.

அவர் அவதாரத்தில் வந்து அன்பையும் பண்பையும் மட்டும் தானா புகட்டிச் சென்றார்…? ஓர் மகான் தன் நிலையை உணர்த்த “உலகத்தின் ஜீவாத்மாவின் உடலில் ஏறிச் செயல்பட்டார்…” என்றால் அந்த மகானுக்கு எந்த நிலை எல்லாம் ஏற்படும்…? என்று தெரியாமலா போய்விடும்.

இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தினால் அவர் வழி ஏற்று அவர் வழி வந்து அவரின் சக்தி அலையைப் பெற்ற பல ஆத்மாக்களுக்கு அவரால் திராட்சை இரசம் அளிக்கப்பட்டது. இன்றும் கிறிஸ்துவ ஆலயங்களில் திராட்சை இரசம் தரப்படும் முறையுள்ளது.

ஆனால் இயேசுவினால் தரப்பட்ட திராட்சை இரசமுடன் அவரது சக்தியுடன் அவர் பெற்ற நல் ஒளியின் சக்தி அலையைப் போதைப்படுத்தி அந்த இரசத்துடன் கலந்து பலருக்கு அளித்து
1.அவர்களின் உடலிலேயே பல ஒளி அலைகளைப் பாய்ச்சி
2.அவரது செயலுடன் அவர்களின் எண்ணத்தையும் கலக்கச் செய்து
3.அதனால் அவரின் ஒளி வட்டத்தை இந்தப் பூமியில் என்றும் நிலைக்கும்படிச் செயலாக்கிவிட்டுத் தான் அவ் இயேசுபிரான் சென்றார்.

இன்றளவும் அவரின் பெயர் நிலைக்கபடுகிறதென்றால் எதன் அடிப்படையில்…? இயேசுவே…! என்ற ஒலி அலையை எடுக்கும் ஆத்மாக்கள் அலையுடன் அவர் பெற்ற சக்தி அலைகள் இன்றளவும் பரவிக் கொண்டுதான் உள்ளன.

இயேசு கிறிஸ்துவினால் அன்று தரப்பட்ட திராட்சை இரசம் அருந்திய ஆத்மாக்களின் உடல் வழித் தொடர் கொண்ட ஆத்மாக்கள் இன்றும் யூதர்கள் என்ற சமுதாயத்தில் உள்ளனர்.

அவர்கள் உடலின் தன்மையிலேயே பல வீரிய சக்தி நிலை குணங்களுடன் பிறந்து வாழ்கின்றனர். யூதர்களினால் இன்றும் பல நல்ல அலைகளை எடுத்து உலகிற்குப் பயன்படச் செய்ய முடிகின்றது.

1.ஒவ்வொரு உடல் தன்மைக்கும் பல மாற்றங்கள் உண்டு
2.ஒன்றை ஒத்த நிலையில் ஒன்று இல்லை
3.ஒன்று போலவே எல்லாம் இருந்தால்… எந்த வளர்ச்சிக்கும் வழியில்லை.

யூதர்களின் உடலின் சக்தி அமில குணமே உயர்ந்த நிலையில் வளர்ச்சியுற்றுச் செயல்படும் வண்ணம் வைக்கப்பட்டது இயேசு கிறிஸ்துவினால் தான்.

இயேசு கிறிஸ்துவை விஷத்தை அருந்தச் செய்தும் அவர் ஆன்மா பிரியவில்லை. சிலுவையில் வைத்து அறைந்தும் அவர் ஆத்மா பிரியவில்லை.

பல அமில குணங்களின் உணர்வின் எண்ணத்தில் வாழ்ந்திருந்தால் அவர் ஆத்மா பிரிந்து சென்றிருக்கும். ஆத்மா பிரியாத உடலைத்தான் இவர்கள் கல்லறையில் வைத்தார்கள். பூமியிலும் காற்றுள்ளது. பூமியின் உள் நிலையிலும் காற்றுள்ளது.

மகானின் உடலை இம்சித்ததாக இவர்களையே இம்சைப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்ற உணர்வினால் தான்
1.அவர்களின் ஆன்மா நிம்மதி பெறப்படும்
2.அவர்களின் ஆசையும் தன் ஆசை தான்..! என்று
3.அவர்களின் இச்சைக்குத் தான் உட்பட்டு இயேசுபிரானும் செயல்பட்டாரேயன்றி
4.”தான் உயர்ந்த மகான்…!” என்று அந்த நிலையில் தன் உயர்வைக் காட்டவில்லை
5.ஒவ்வொரு ஆத்மாவும் உயர வேண்டும் என்று உலகிற்கு வந்த அவதார புருஷர்
6.தன் உயர்வை உணர்த்திச் செல்வாரா…? அவரின் செயல் தான் இன்றளவும் தொடர்ந்திருக்குமா…?
7.என்று அந்த உடலை ஏற்றாரோ அந்த உடல் அக்கல்லறையில் அப்படியே தான் உள்ளது.

அவர் வந்து சென்று வளர்த்துச் சென்ற ஒளி அலையின் வட்டமும் வளர்ந்து கொண்டுதான் உள்ளது இன்றளவும்…!