ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 16, 2019

உள் நின்று இயக்கும் இயக்கத்தைச் சொல்லி “உங்களை நீங்கள் நம்புங்கள்…” என்று சொன்னாலும் எத்தனை பேர் தன்னை (உயிரை) நம்புகிறார்கள்…!


சாமி…! என்ற எண்ணத்தில் என்னைத் (ஞானகுரு) தேடி வருவார்கள். இரண்டு நாளைக்குப் பார்ப்பார்கள். அப்புறம் என்ன…?

இந்த மாதிரி ஒருவர் என்னைத் தேடி வந்தார். மருத்துவர் போட்ட ஊசியினால் (INJECTION - SEPTIC) செப்டிக்காகி மூன்று வருடமாக நடக்க முடியாமல் இருந்தவர்.

மற்ற யாரிடமோ கேள்விப்பட்டு இங்கே தபோவனத்திற்கு வந்தார். ஒரு வாரம் இங்கே இருந்து தியானம் மற்ற பயிற்சிகளை எடுத்துக் கொண்டவுடன் நடக்க முடியாமல் இருந்தவர் நன்றாக நடக்கக்கூடிய நிலைக்கு வந்தார்.

நடந்தவுடன் என்ன செய்தார் தெரியுமா…?

சாமி…! எங்கள் ஊரில் இருக்கும் கூட்டம் எல்லாம் இங்கே வந்து குவியப் போகிறது…! என்றார் என்னிடம்.

எதற்கப்பா…! என்றேன்.

பாருங்கள்… நான் எப்படி நடக்கிறேன்…! எங்கள் ஊரிலே இதைக் காண்பித்துச் சொன்னவுடன் எத்தனை பெரிய கூட்டம் வரும் பாருங்கள்…! என்றார்.

 எனக்குத் தொல்லை கொடுப்பதற்கா…? என்று கேட்டேன்.

இல்லை…. சாமி….! எனக்குக் கால் நன்றாக ஆனது. அது போல் எல்லோருக்கும் நன்றாக வேண்டும் என்ற நிலையில் வருவார்கள்…! என்றார்.

சரிதானப்பா..! என்றேன்.

ஊருக்குப் போய்விட்டு நான் வருகிறேன்… என்று சொல்லிப் போனார். ஆனால் அதற்குப் பின்னாடி பத்துப் பதினைந்து நாள் ஆனது. ஆளையே காணோம்…!

அதற்குப் பின்னாடி ஒரு மூன்று வருடத்தில் காய்க்கும் தென்னை மரக் கன்றையும் ஒரு சீதா மரக் கன்றையும் வாங்கிக் கொண்டு இங்கே வந்தார்.

சாமி… நான் நன்றாக நடந்தேன் அல்லவா…! திருப்பதி வெங்கிடாசலபதிக்கு நான் வேண்டியிருந்தேன். “கால் நன்றாகி நான் நடந்தேன்” என்றால் அங்கே வந்து காணிக்கை போடுகிறேன் என்று வேண்டியிருந்தேன். ஒரு ஐம்பதினாயிரம் வரை அந்தப் பணம் இருந்தது.

இங்கிருந்து நிறையப் பேரைக் கூட்டிக் கொண்டு அங்கே போனேன். அவர்களுக்காகச் செலவழித்தேன். மீதி இருந்த இருபத்தி ஐந்தாயிரம் பணத்தை உண்டியலில் காணிக்கையாகப் போட்டேன். 

உங்களுக்கு ஞாபகார்த்தமாக இந்த தென்னை மரத்தையும் சீதா மரத்தையும் கொண்டு வந்துள்ளேன். இது மூன்று வருடத்தில் காப்புக் காய்க்கும்…! என்று சொல்லி என் கையாலே இங்கே ஊன்ற வேண்டும் என்றார்.

(அவர் ஊன்றி வைத்தார்… ஆனால் அடுத்து அது சரியாக வளரக்கூட இல்லை)

கட்டாயமாக அந்த மரக் கன்றுகளை ஊன்ற வேண்டும் என்று வைத்தார். அப்புறம் போனார்… வந்தார்.

சாமி… நடக்க முடியாத காலத்தில் நான் வெங்கிடாசலபதிக்குக் கோரிக்கை வைத்திருந்தேன்.
1.பாருங்கள்… நான் கால் சரியானவுடனே மலை மீது கிடு…கிடு...கிடு.. என்று ஏறிப் போனேன்.
2.எப்படிப் போனேன்…! என்று எனக்கே ஒன்றும் தெரியவில்லை.
3.எல்லோருக்கும் தாராளமாகச் செலவழித்துக் கூட்டிக் கொண்டு போய்விட்டு என் கோரிக்கையை நிறைவேற்றி வந்தேன் என்றார்.

மிகவும் நல்லதப்பா.. வெங்கிடாசலபதி தான் இதைச் செய்தார்… நீ அவனுக்குத் தான் செய்ய வேண்டுமப்பா…! என்றேன்.

அந்த வெங்கிடாசலபதி யார் என்று தெரியுமாப்பா..? என்றேன்.

என்னங்க..! “ஏழுமலையான்…” என்றார் அவர்.

ஏழுமலையான் என்றால் யார் தெரியுமா…! என்று கேட்டேன். ஆறாவது அறிவு ஏழாவது நிலையாக “ஒளியாக இங்கே பள்ளி கொண்டான் வெங்கிடாசலபதி…” என்று காரணப் பெயரை வைத்துள்ளார்கள்.

திருவேங்கிடம்…!
1.நமக்குள் இயக்குபவன் இந்த உயிர் தானப்பா..!
2.உன் உயிர் தான் இந்த நிலைகளை எடுத்து உருவாக்குகிறதப்பா…!
3.இவனை மறந்து விட்டாயே..!
4.நீ அங்கே கொண்டு போய் அல்லவா எல்லாம் செய்திருக்கிறாய்…! எத்தனை கஷ்டப்பட்டாய்…? என்றேன்.

இப்படிச் சொன்ன பிற்பாடு.. ஹும்…! உச்…! என்னமோ நான் கோரிக்கை வைத்திருந்தேன்… அதைச் செய்யவில்லை என்றால் அது என் மனைதை உறுத்திக் கொண்டேயிருக்கும். “அவனால் ஆனது” என்ற நம்பிக்கை இருந்தது… அதனால் அப்படிச் செய்தேன்…! என்றார்.

சரியப்பா.. போறும்…! என்றேன். இந்த மாதிரி நடந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பேர் இப்படி உண்டு…!

இங்கே வந்து சௌகரியமான பின் வெங்கிடாசலபதி காப்பாற்றினார்.. காளி காப்பாற்றினாள்… என்று அங்கே மொட்டை எடுத்துக் காணிக்கை செலுத்தி விட்டு வந்தேன் என்று சொல்கிறார்கள். ஒரு ஆட்டைக் கூட வெட்டிப் பலி கொடுத்தேன்…! என்பார்கள்.

ஆட்டை வெட்டிப் பொங்கல் வைக்கிறேன் என்று நான் நேர்த்திக் கடன் வைத்திருந்தேன். அதனால் அதைச் செய்தேன்…! என்று
1.தன் பாவத்தைப் போக்க இன்னொரு பாவத்தைச் சேர்க்கும் நிலை தான் உள்ளது.
2.இந்த நிலைகளில் தான் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.

அடங்கப்பா..! நீ பாவம் செய்யாதே..! என்று இங்கே சொன்னால் பாவத்தை அல்லவா மீண்டும் சேர்த்துக் கொண்டு வருகிறீர்கள்.. என்று சொல்கிறோம்.

ஆனால் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தபோவனத்தில் நடந்து கொண்டு தான் உள்ளது. ஏனென்றால் இன்னமும் பரம்பரை வழக்கங்கள் இங்கே இருந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கின் பிரகாரம் தான் நம்முடைய உணர்வுகள் இயக்குகிறது.

இதை எல்லாம் நீங்கள் மாற்றி அமைக்க வேண்டும்.

1.உங்கள் உயிரைக் கடவுளாக மதித்துப் பழக வேண்டும்.
2.அவனால் உருவாக்கப்பட்ட இந்த உடலை நீங்கள் கோவிலாக மதித்துப் பழக வேண்டும்.
3.மனிதனாக உருவாக்கிய அந்த அரும் பெரும் சக்தியான நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்துப் பழக வேண்டும்.

வேதனையோ சலிப்போ சஞ்சலமாகவோ அந்த உணர்வுகள் இந்த உடலான கோவிலுக்குள் போகாதபடி நாம் எப்படிக் கோவிலைச் சுத்தப்படுத்துகின்றோமோ அந்த மாதிரி அருள் மகரிஷிகளின் அருள் ஒளியை நம் உடலுக்குள் செலுத்தி நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

அது தான் ஆண்டவனுக்கு நீங்கள் செய்யக்கூடிய சேவை..!

இன்றைய உலகில் பலருடன் பழகுகிறோம். எத்தனையோ விதமான உணர்வுகளை நீங்கள் பார்க்க நேர்கிறது. அந்தத் தீமையான உணர்வு உங்களுக்குள் வந்தால் அந்தத் தீமை தான் உங்களை இயக்குகிறது.

உதாரணமாக ஒருவன் உங்களைத் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்வோம். “என்னைத் திட்டினான்…திட்டினான்…!” என்று அதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தால் உங்கள் ஆண்டவனுக்குத் தீங்கு செய்கிறீர்கள்…! என்று தான் பொருள்.

1.அதற்குப் பதில் திட்டியனுக்குள் இருக்கும் அறியாத இருள் அகல வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும்
3.ஆண்டவன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று
4.மனப்பூர்வமாக எண்ணினால் நீங்கள் அங்கே தெய்வமாகின்றீர்கள்.
5.உங்கள் எண்ணம் உங்களை உயர்த்துகிறது. உங்கள் மூச்சு அவர்களுக்கும் நல்லதாகின்றது.