ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 14, 2019

உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தின் மூலம் சித்தர்களுடனும் சப்தரிஷிகளுடனும் தொடர்பு கொள்ளலாம் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


உணர்வின் எண்ணத்தை நல் வழி அமிலமாக நமக்குள் வளர்க்கச் செய்து தன் ஞானத்தை மெய் ஞானிகளின் தொடர்பலையில் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால்
1.இவ்வுலகில் எந்தப் பாகத்திலும் உடல் உள்ளவர்களுடனும் சரி
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களுடனும் சரி
3.சூட்சம நிலை கொண்ட சப்தரிஷிகளின் நிலையுடனும் சரி
4.இவ்வுணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.

இது ஆண்டவனாக வந்து நமக்கு அருள் புரிவதல்ல…!

“ஆண்டவன்” என்று நாம் உணரும் சக்திகளுடன் நம் எண்ண அலைகளைச் செலுத்தினோமானால் அவர்களின் தொடர் அலையின்
1.ஒலியையும் கேட்கலாம்…
2.உருவையும் காணலாம்.

ஆனால் ஆவி நிலையில்… “பல எண்ண அலையில்” உள்ளவர்களுக்கு என்ன ஆகிறது…?

அவர்களின் எண்ண வீரிய குண நிலைக்கொப்ப அவர்களின் உணர்வுடன் ஒத்த எண்ணமும் தன் எண்ணமும் ஒன்று போல் உள்ள நிலையில் “இவ்வுலகில் வாழ்ந்த பொழுது நிறைவேறா ஆசையுடன் சென்ற ஆவிகள்” (அதன் ஆசையை நிறைவேற்ற) இவர்களின் எண்ணத்தின் ஒத்த நிலை ஈர்ப்பு உள்ளதனால் இவர்கள் உடலில் அவைகள் ஏறிச் செயல்படத் தொடங்கிவிடுகிறது.

அப்படிச் செயல்பட்டாலும் அவ்வாவிகள் வளர்ந்த நிலையும் அவ்வாவிகள் வளர்த்துக் கொண்ட சக்தி அலையும் இவர்களின் உணர்வு ஞான சக்தி அலைக்கும் உகந்த செயல் வடிவ வளர்ச்சி ஓட்டத்தில் தான் “அதுவும்” அந்த உடல் உள்ளவரை தான் செயல்புரிய முடியும்.

1.ஆக… எந்த ஒரு செயல் ஞானம் கொண்ட நிலை கொண்டுள்ளனரோ
2.அதே வட்ட உணர்வு வளர்ப்பில் வாழ்ந்து
3.தன் வாழ்க்கையில் அவர்களின் ஆசையின் மேம்பாடு என்று உணரும் ஒவ்வொரு செயலிலும்
4.அதனின் வளர்ச்சி ஓட்டத்தில் உடலுடன் உள்ளவரையிலும் (இறக்கும் வரை) அந்த ஞானம் செயல்பட்டு
5.உடலை விட்டுப் பிரிந்த பிறகு மீண்டும் இதே உணர்வலை சுற்றலைக் கொண்டு
6.எத்துறையில் உயர்ந்து உழன்று உருப்பெற்று வாழ்ந்ததோ அதே சுழற்சி ஓட்டத்தில்
7.மீண்டும் மீண்டும் அந்நிலைக்குகந்த வளர்ச்சி ஈர்ப்பிற்குத்தான் செல்கிறது.

முன்னேறிய விஞ்ஞானம்… விஷய ஞானம்… இசை ஞானம்…! எதுவாக இருந்தாலும் சரி…
1.ஓர் சுழற்சி வட்ட ஞான ஓட்ட வளர்ச்சி சுழற்றலில் தான் சுழன்று கொண்டே இருக்க முடியுமேயன்றி
2.உயர் ஞானச் செயலுக்கு ஒளி ஞானத்திற்குச் செல்ல முடியாது (இது முக்கியம்)

எனவே ஞானத்தை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையுடன்… உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு உடலின் அமிலக் கூட்டை நற்சக்தியின் உணர்வலையின் செயலாக்கி நம் எண்ணத்தை அந்த ஞானிகளின் சித்தர்களின் சப்தரிஷிகளின் உணர்வு எண்ணமுடன் மோதவிட வேண்டும்.

அவர்களின் ஈர்ப்பலையின் சுழற்சி வட்டத்திற்குள்… அவர்களின் ஒளி ஞான ஈர்ப்பின் சக்தியுடன் சுழலவிட்டுச் செயல் கொள்ளும் ஜெப முறையை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

அப்பொழுது உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் அந்தச் சுவாசத்தின் மூலம் சகல சித்தர்களின்… சப்தரிஷிகளின் ஒளி அலையுடன் நம் உணர்வலைகள் கலந்து அவர்கள் பெற்ற சக்தி அலையின் தொடரை நாமும் நிச்சயம் பெற முடியும்.