ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 1, 2019

சாங்கிய சாஸ்திரத்திற்கும் மெய் ஞானிகள் கொடுத்த சாஸ்திரத்திற்கும் உண்டான வித்தியாசங்களை அறிந்து கொள்ள வேண்டும்


கணவன் இறந்தால் சாங்கிய சாஸ்திரப்படி மனைவியின் மாங்கல்யத்தைப் பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள். ஏனென்றால்
1.“கணவனை இழந்தவள்…” என்று தெரிந்து கொள்ள வேண்டுமாம்.
2.அந்த மாங்கல்யத்தைக் கழட்டி விட்டால் தான் தன் குழந்தைகள் மீது பற்று வருமாம்.

இப்படிச் செய்கின்றனர்.

மாங்கல்யத்தைத் தான் தூக்கி எறிந்து விடுகின்றார்கள். வாழ்க்கையில் என்று திருமணம் ஆனதோ அவருடன் கலந்து உறவாடிய உணர்வுகள் உடலுடன் இருக்கின்றதே அதை என்றைக்குத் தூக்கி எறிவது…?

சொல்லுங்கள் பார்க்கலாம். தூக்கி எறிய முடியுமா…? அவர் சம்பாரித்த சொத்தைத் தூக்கி எறிகின்றீர்களா..?

“கணவர் தன்னுடன் இருக்கின்றார்…!” என்ற நிலைகளை எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் கணவரின் உயிரான்மா இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்ற உணர்வுகளை மனைவி எண்ணி எடுக்க வேண்டும்.

அங்கே சப்தரிஷி மண்டலங்களில் இணைத்த பின் அவரை “ரிஷி” என்ற நிலைகளில் நாம் எண்ணி அந்த அருள் பெறவேண்டும் எங்கள் குடும்பத்தில் அறியாது வந்த இருளை நீக்க வேண்டும் என்று மனைவி அதை எண்ணி வளர்த்தால் அந்த அருள் உணர்வுகள் இங்கே வரும்.

மாறாக… கணவன் மேல் பற்று கொண்டு “என்னை விட்டுப் போய்விட்டாயே…!” என்று எண்ணினால்
1.கணவனின் உயிரான்மா மனைவியின் உடலுக்குள் தான் வருகின்றது.
2.அவர் உடலில் வந்த நோய்கள் தான் இங்கே விளைகின்றது.

மீண்டும் இந்தப் பற்றின் தன்மை கொண்டு “போய்விட்டார்” என்று எண்ணி என் குழந்தைகளை நான் எப்படிக் காப்பேன்…? என்ற உணர்வுகளை எடுக்கும் பொழுது வேதனை என்ற விஷத்தைத்தான் வளர்க்க முடிகின்றது.
1.கணவனையும் பாதுகாக்க முடியவில்லை.
2.ஆக நம்முடைய உணர்வையும் நாம் காக்கும் சக்தியை இழந்து விடுகின்றோம்.

இப்படிப்பட்ட விஷத்தின் தன்மை பெற்றால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் நாம் விஷத் தன்மை கொண்ட உடலாகத்தான் மாற்றுகின்றோம்…! என்ற நிலையை எல்லோருமே மறந்து விடுகின்றனர்.

ஆனால் நம் ஞானிகள் நமக்கு உணர்த்திய பேருண்மை என்ன…?

மனிதன் பல் கோடிச் சரீரங்களில் விஷத்தை நீக்கி… நீக்கி… நீக்கி… விஷத்தை நீக்கிடும் அரும் பெரும் சக்தியாக இந்த மனித உடலை உருவாக்கியுள்ளான்..! என்பதைச் சாதாரணமாக “ஒரு கல் சிலையை வைத்து…!” நமக்குத் தெளிவாக்குகின்றனர்.

1.யானைத் தலையை வைத்து மனித உடலைப் போட்டு
2.நாம் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக
3.இந்த மனித உடலை உருவாக்கியது விநாயகா…!

“ஆதிமூலம்” - நம் பூமிக்குள் ஆதியிலே வந்த இந்த மூலமான உயிர் தன் வாழ்க்கைக்குச் சுவாசித்த உணர்வு மூஷிகவாகனா… அதாவது
1.சுவாசித்த உணர்வு கொண்டு வாழ்க்கை நடத்தி
2.தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளைச் சுவாசித்துக் கணங்களுக்கு அதிபதியாகி
3.பரிணாம வளர்ச்சியாகி நஞ்சு கொண்ட உணர்வுகளிலிருந்து விடுபட்டு
4.இப்படித் தான் நாம் மனிதனாகப் பெற்றோம் என்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.

மிருகங்கள் அனைத்துக்கும் உடல் வலிமை உண்டு. ஆனால் மனிதனுக்கு எண்ண வலிமை உண்டு என்று காட்டுவதற்காகத் தான் யானைத் தலையைப் போட்டு மனித உடலைப் போட்டு விநாயகரைக் காட்டினான் ஞானி.

ஆக… ஆதிமூலம் என்ற உயிர் பலகோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் எல்லாம் வினைக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது விநாயகா…!

இந்த வினைகளுக்கெல்லாம் நாயகா… விநாயகா என்று மனிதனாகப் பெற்ற பின்
1.இந்த உடலை மதிக்கும்படி செய்கிறான்
2.இந்த உடலை உருவாக்கிய கணங்களுக்கெல்லாம் ஈசா… கணேசா என்று
3.உயிரான ஈசனை வணங்குபடிச் சொல்கிறான்.

இந்த வாழ்க்கையில் வரும் தீய வினைகளை எல்லாம் அகற்றி விட்டு அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நல் வினைகளாகச் சேர்த்து ஒளியாக மாறி “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நீ ஆக வேண்டும்…” என்பது தான் விநாயகர் தத்துவத்தின் மூலம்…
1.ஞானிகள் காட்டிய சாஸ்திரம் இது தான்.
2.அகஸ்தியனால் காட்டப்பட்டது தான் விநாயகர் தத்துவம்.

ஆகவே நேற்றைய செயல் இன்றைய மனித உடல்… இன்றைய உடல் நாளைய ஒளி உடலாக நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும். இதை நாம் தெளிவாகத் தெரிந்து அதன் வழி கொண்டு நம் வாழ்க்கையை நடத்த வேண்டும்.