ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 19, 2019

உண்ணாமல் இருப்பது விரதமா…! தீமையானவைகளை எண்ணாமல் இருப்பது விரதமா…?


சிவன் இராத்திரி அன்று விரதம் இருப்பார்கள்.
1.ஆனால் எது விரதம்…?
2.தீமைகளை நுகராமல் இருப்பது தான் விரதம்.

சாப்பாடு சாப்பிடாமல் விரதம் இருக்கின்றேன் என்று உடலில் உள்ல நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் அது எல்லாம் சோர்வடையும்.

சோர்வடைந்த நிலையில் என்ன நடக்கும்…?

ஏதாவது ஒரு சாமானை எடுத்து வரச் சொல்லியிருந்தால்.. அல்லது பிள்ளையிடம் சொல்லிக் கடையில் போய் வாங்கிக் கொண்டு வா..! என்று சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதிலே பையன் வரச் சிறிது காலதாமதமாகிவிட்டால் என்ன ஆகும்…?

டேய்… நான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். இந்த மாதிரிச் செய்து கொண்டிருக்கின்றாயேடா…! என்று வேகமாகக் கோபம் வந்துவிடும்.

நீங்கள் விரதம் இருக்கும் பொழுது வெளியில் போய் ஒரு  சாமானை வாங்கச் சொல்லி உங்களிடம் வந்து சொன்னால் உடனே… “உனக்கு இந்த நேரம் தான் கிடைத்ததா…? போடா…!” என்று விரட்டுவோம்.

அப்பொழுது எதை விரதமாக இருக்கின்றீர்கள்…!
1.நல்லதை வளர்க்காதபடி நாம் விரதம் இருக்கின்றோம்.
2.ஆக விரதம் என்றாலே நாம் என்ன என்றே தெரியாமல் இருக்கின்றோமே…!

விரதம் என்பது எது..? தீமையான உணர்வுகள் நமக்குள் புகுந்து தீய அணுக்களாக விளையாதபடி தடுக்க வேண்டும். நல்ல அணுக்களுக்கு நாம் ஆகாரம் கொடுத்தல் வேண்டும். எதை…?

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்திலும் அந்த அருள் சக்தி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
4.உடலுக்குள் செலுத்தி நல்ல அணுக்களுக்கு இந்த உணவைக் கொடுக்க வேண்டும்.

சண்டை போட்ட குடும்பங்கள் இருக்கும். அவர்கள் உணர்வை நாமும் நுகர்ந்திருப்போம். சண்டையிட்டதை நுகர்ந்தது நமக்குள்ளும் இருக்கும். அப்பொழுது அவர்களும் நாமும் பிரிந்து இல்லை.

அதே மாதிரி ரோட்டில் போகும் பொழுது ஒரு பிச்சைக்காரன் அவஸ்தைப் பட்டிருப்பான். பரிவுடன் அதைக் கேட்டறிந்து அவனைக் காப்பாற்றியிருப்போம்.

அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நாம் நுகர்ந்த பின்னாடி ஓ…ம்… என்று ஜீவ அணுவாக மாற்றி நம் உடலில் சேர்த்து விடுகிறது. அப்பொழுது அவனும் நாமும் பிரிந்தில்லை.

அப்பொழுது அந்த உணர்வுகள் அணுவாகி விட்டால் அவன் உணர்வுகள் இங்கே வந்ததும் என்ன செய்யும்…? நம் உடலிலும் அந்த அவஸ்தைப்படும் அணுக்களைப் பெருகத் தொடங்கிவிடும்.

ஆனாம் நாம் உதவி தான் செய்தோம். அவர்கள் உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது. ஆனால் அதை நமக்குத் துடைக்கத் தெரியவில்லையே…!

நல்லது செய்யும் நிலையில் நம்மை அறியாமல் இந்த மாதிரி நமக்குள் வரும் தீமைகளைத் துடைப்பதற்குத்தான் ஞானிகள் ஆலயங்களை அமைத்துள்ளார்கள்.

1.நாம் எப்படி வாழ வேண்டும்…?
2.நம் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்…? என்பதற்காகத்தான் ஆலயங்களை அமைத்தார்கள்
3.உலகிலேயே வேறு எங்கும் இத்தகைய நிலைகள் கிடையாது,
4.இயற்கை எப்படி இயங்குகிறது… எப்படி விளைந்தது…? என்று
5.சூட்சம நிலைகள் (கண்ணுக்குத் தெரியாதது) நம்மை எப்படி இயக்குகிறது என்று
6.உருவம் அமைத்து அருவ நிலைகளை நாம் எப்படி நுகர வேண்டும் என்பதை
7.நினைவுபடுத்தும் ஆலயமாகத் தான் அன்றைய ஞானிகள் அதற்குள் உருவங்களை வைத்தார்கள்…!

ஆனால் அந்த உருவங்களை நாம் இன்று அவமதிக்கின்றோம். தெய்வங்களைப் பார்த்து ஆசைகளைத் தான் பெருக்குகின்றோமே தவிர
1.தன்னை அறியாது வந்த தீமைகளைப் போக்கும் ஆலயம் என்று எண்ணுவதில்லை.
2.தீமைகளைத்தான் சேர்த்துக் கொள்கின்றோமே தவிர தீமைகளை நீக்கும் அந்த ஞானிகள் காட்டிய நிலைகள் இல்லை.

சிவன் இராத்திரி அன்று நாம் என்ன செய்ய வேண்டும்…?

முதலில் சொன்ன மாதிரி ரோட்டில் எத்தனையோ உணர்வுகளைப் பார்த்திருப்போம்… ஒருவருக்கொருவர் சண்டையிட்டவர்களைப் பார்த்திருப்போம்… அந்த நினைவுகள் வரும்.
1.அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்.
2.அவர்களை அறியாது இயக்கும் இருளிலிருந்து விடுபட வேண்டும்.
3.மகிழ்ந்து வாழும் சக்தி அவர்கள் பெறவேண்டும்.

இப்படி இந்த நினைவுகளை எல்லாம் அன்றைய  நாள் முழுவதும் கூட்டி நல்லதாக நமக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும். தீமைகளையே நுகராதபடி… விரதம் இருப்பது என்பது இது தான்…!