ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 21, 2019

இன்றைய உலகில் “உதவி செய்வதிலும்… உதவி பெறுவதிலும்…” உள்ள உபத்திரவங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்


உலக நிலைகளிலேயே இன்று ஒருவரை ஒருவர் அடக்கி ஆளும் தன்மைகள் அதிகரித்துவிட்டது. அந்த உணர்வுகள் எல்லாமே அரசர்களால் உருவாக்கப்பட்டது. மனிதனான பின் அரவணைக்கும் உணர்வையே மறந்து அடக்கி ஆளும் தன்மையே  பெறுகின்றது.

1.எப்படியும் ஏதோ ஒரு வகையில் மிரட்டி வாழ்வது
2.இல்லை என்றால் ஒன்றைக் கொடுத்து தனக்குக் கீழ் அடிமையாக்குவது.

அதாவது உங்களுக்கு நான் ஒரு பொருளைக் கொடுத்து அதன் வழியில் அடிமையாக்குவது. உங்கள் நிலைகளிலிருந்து அதை நான் பெற்று என்னுடைய சுகத்திற்கு வருவது.

1.ஆனால் நான் கொடுத்து நீங்கள் பதிலுக்கு உதவவில்லை என்றால்
2.நான் எண்ணியபடி நீங்கள் வரவில்லை என்றால்
3.உடனே உனக்கு நான் இன்னதைச் செய்வேன்…! என்று
4.அந்தத் தீங்கின் நிலையே (மிரட்டும் நிலையாக) வருகின்றது.

ஆக ஒருவருக்கு உதவி செய்யப்படும் பொழுது அவன் தனக்கு இணைந்தவனாக வர வேண்டும். தனக்கு இணைந்து வரவில்லை என்றால் அடுத்து அவனைக் குற்றவாளியாக்கும் நிலையே வருகின்றது.

மனிதர்களாக இன்று வாழ்பவர்கள் அவரவருக்குத் தகுந்த மாதிரி மற்றவர்களுக்கு உதவிகள் செய்கிறார்கள். ஆனால் உதவி செய்தபடி அந்த உதவி பெற்றவர்கள் தன் வழிக்கு வரவில்லை என்றால்
1.நான் உதவி செய்தேன்… அவன் எனக்குத் தக்க நேரத்தில் உதவி செய்யவில்லை
2.ஆகவே அவன் தீங்குள்ளவனாக ஆகி விட்டான்..! என்ற
3.இப்படிப்பட்ட பகைமை உணர்வைத்தான் நாம் வளர்க்கின்றோம்.

பகைமையை ஒரு பக்கம் வளர்க்கின்றோம். அதே சமயத்தில் அன்பு கொண்டு மற்றவரைத் தனக்குள் அடிமையாக்க வேண்டும் என்ற உணர்வு வருகின்றது.

தன் வீரிய உணர்வு கொண்டு ஒருவரை அடக்கி ஆளும் உணர்வு கொண்டு செயல்படுத்துகின்றனர். அடுத்து பொருள்களைக் கொடுத்துத் தனக்குக் கீழ் அவர்களை அடிமையாக்கும் தன்மையே வருகின்றது.

1.உண்மையின் உணர்வின் தன்மை கொண்டு ஒன்றி வாழ வேண்டும்
2.இணைந்து வாழ வேண்டும்
3.பேதங்கள் நீங்க வேண்டும்
4.பேரருளைப் பெறவேண்டும் என்ற உண்மை நோக்குடன்
4.உதவிகளைச் செய்தால் அங்கே எதிர்பார்ப்பின் தன்மை இருக்காது.

உதவி செய்தேன்…! என்றால் உங்களிடம் ஒன்றை எதிர்ப்பார்க்கும் தன்மையே தான் இன்று வருகின்றது.

சில இடங்களில் பார்க்கலாம். சில உபகாரங்களைச் செய்வது போல் செய்வார்கள்.
1.ஆனால் அவர் செய்யும் தவறுக்கெல்லாம் இவர்கள் அடிமையாக வேண்டும்
2.அப்படி அடிமையாகவில்லை என்றால் அதற்கு வேண்டிய தொல்லைகளைக் கொடுப்பார்கள்
3.நான் அவனுக்கு இவ்வளவு உபகாரம் செய்தேன்… எனக்கு இவன் இவ்வாறு தீங்கு செய்கின்றான் என்று
4.குற்றவாளியாக்கும் உணர்வுகளைத்தான் பாய்ச்சுகின்றார்கள்.

தனக்கு வேண்டியதை எதிர்பார்த்துச் செயல்படும் தன்மைகள் தான் இங்கே வருகின்றது. ஒன்று… அடக்கி ஆள்வது இரண்டாவது… அரவணைத்துப் பார்ப்பது. வரவில்லை என்றால் அவனைக் குற்றவாளியாக்குவது..!

அன்றைய அரசர்கள் காலங்களில் அரசர் பண்பு கொண்ட நிலைகள் வளர்க்கின்றனர். ஒரு அரசன் அடுத்த அரசனுக்கு உதவி செய்கின்றான்.

உதவி செய்யப்படும் பொழுது அந்த அரசனிடம் உன் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடு என்கிறான்… அல்லது இந்த ஊர் எனக்கு உகந்தது அதைக் கொடு…! என்று கேட்கின்றான்.

அவன் கேட்டதை எல்லாம் உதவி பெற்ற அரசன் கொடுக்கவில்லை என்றால் இதுவரை உனக்கு அரவணைத்து உதவி செய்திருக்கிறேன். பதிலுக்கு உன்னால் இந்தச் சிறு உதவி செய்ய முடியவில்லையா…? என்று உடனே போர் முறை தொடுக்கின்றான்.

இதைப் போல் தான் மக்கள் மத்தியிலும் அன்று அரசன் எதைச் செய்தானோ அதே உணர்வுகள் இங்கே படரப்பட்டு இயக்கிக் கொண்டிருக்கிறது.

 எதிர்ப்பில்லாது இருக்கும் என்பதற்காக இந்த உதவிகளைச் செய்கின்றனர். அந்த எதிர்ப்பில்லாத நிலைகளில் இந்த உதவிகளைச் செய்தாலும் தான் எதிர்பார்க்கும் நிலைகள் ஏராளம் உண்டு.
1.தான் தவறு செய்து கொண்டு
2.அந்தத் தவறைக் காக்க
3.மற்றவருக்கு உதவி செய்யக்கூடிய பண்புகள் தான் இருக்கின்றது.

தன் தவறை மாற்ற தன் தவறின் நிலைகளை மாற்றியமைக்க மற்றவர்ககளுக்கு உதவி செய்து கடைசியில் அந்தத் தவறு செய்யும் நிலைகளே தான் அதிகரிக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளில் தான் மக்கள் மத்தியில் இன்று ஒரு அலுவலகத்திலும் சரி… வீட்டிலும் சரி… மற்ற நிலைகளிலும் சரி.. இருக்கின்றது.

இப்படி வரப்படும் பொழுது இது சுயநலத்தைக் கூட்டுகின்றது. பொது நலம் ஆகாது.

அந்தப் பொது நலத்தின் தன்மைகளை அந்த உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்துவிட்டால் அந்தக் குற்ற இயல்புகள் இருவரிடத்திலும் வராது.

1.நல்ல பண்பினைக் காக்க
2.பரிவினை ஊட்ட
3.அன்பினைக் கூட்ட அரவணைக்கும் தன்மை வந்தால்
4.அந்த அரவணைக்கும் உணர்வே நாம் செய்த பண்பின் அரவணைப்பு நமக்குள் என்றும் நிலைத்திருக்கும்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும்… இருளை அகற்றிடும் நிலை பெறவேண்டும்… அவர்கள் வாழ்வில் தெளிந்த நிலைகள் பெறவேண்டும் என்ற நிலையில் நாம் செயல்பட வேண்டிய நெறிகளைத்தான் நம் குருநாதர் தெளிவாக்கினார்.