ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 28, 2019

காற்று மண்டலம் மிகவும் நச்சுத் தன்மையாகி மனிதனுடைய நல்ல குணங்கள் எல்லாம் சீர்குலைந்து கொண்டிருக்கிறது


இனி நாளைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. 2004க்கு மேல் செல்லும் பொழுது இயற்கையே நம்மை அழித்துவிடும்.

இன்றைய கால கட்டத்தில் மனிதன் தான் வாழ செயற்கைக்கு மாற்றி… கடும் விஷத் தன்மைகளைக் கொண்டு வந்ததால் மனிதனுடைய நல்ல குணங்களையே சீர்குலைக்கும் தன்மையாக இந்தப் பூமியில் பரவிக் கொண்டுள்ளது.

நம் நாட்டில் மட்டுமல்ல… உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் தான்…!
1.ஆனால் இந்த நாடு ஒன்று தப்பும்…
2.தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று
3.அந்த அகஸ்தியன் பிறந்த நாட்டில் தான் இங்கே மீண்டும் முளைக்கின்றது.

அந்த அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக ஆனான். அதனின் உணர்வைத் தான் இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்கிச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

1.விஜய தசமி… நம் உயிர் பூமிக்குள் விஜயம் செய்தது
2.தசமி பத்தாவது (ஒளியாக) நிலை அடையக் கூடிய மனித உடல்.
3.உயிர் உடல் பெற்று மனிதனாகும் பொழுது மகாசிவன் இராத்திரி என்று
4.இப்படியெல்லாம் காரணப் பெயர் வைத்து ஞானிகள் அவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.


அந்த ஞானிகள் கொடுத்ததை மதிக்கின்றோமா..? அரச வழியைப் பின்பற்றி தவறுகளைச் செய்யத் தான்… இந்த உடலுக்காகத்தான்… இச்சைப்படுகின்றோம்.

சாகாக்கலை என்ற நிலையில்… “அரசன் தான் எப்பொழுதும் வாழ முடியும்…!” என்ற நம்பிக்கையில் இருந்தான். அந்த ஆசையிலே கடும் பூதங்களாகி மற்றதை எத்தனை இம்சை செய்தானோ அத்தகைய அரசன் எவனும் இருந்ததில்லை.

அன்று ஆங்கிலேயர்கள் உலக நாடுகள் பலவற்றை அடக்கி மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தார்கள். இருந்தாலும் இன்று அவர்கள் நாட்டிலே அங்கே எத்தனையோ நரக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்…!

இதைப் போன்ற சாம்ராஜ்யங்களை ஆண்ட அரசர்கள் எல்லாம் எந்த நிலை ஆனார்கள்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அடக்கி ஆள வேண்டும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் இருப்பினும் “எதை வைத்து… எதை அடக்க வேண்டும்…?”

தீமை செய்யும் நிலைகளைத் தான் நாம் அடக்க வேண்டும்.
1.அந்த அருள் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்தோம் என்றால்
2.தீமைகளை அடக்கி ஆட்சி புரியலாம்… அனைத்தையும் ஒளியாக மாற்றலாம்.

மனிதனின் வாழ்க்கையில் எது வலிமையோ அந்த வலிமை தான் முன்னணியில் இருக்கும்.

சாந்தமும் ஞானமும் விவேகமும் இன்று இருப்பினும் ஒரு கோபக்காரனைப் பார்த்தால் அந்த வலிமை நமக்குள் பயப்படும்படிச் செய்கிறது.

வேதனைப்படுவோரைப் பார்த்தால் அந்த வேதனை நம்மை நடுங்கச் செய்கிறது… நம்மைச் சோர்வடையச் செய்கிறது. அந்த வலிமை தான் முன்னணியில் இருக்கின்றது.

இத்தகைய தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட “கார்த்திகேயா…” என்று எல்லாவற்றையும் மாற்றியமைத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1.இந்த உபதேசத்தின் வாயிலாக துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பாய்ச்சுகின்றோம்
2.கண்களால் ஏங்கிப் பெறச் செய்து உங்களுக்குள் நுகரச் செய்கின்றோம்
3.இப்படிப் பதிவாகும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நீங்கள் எளிதில் பெற்று உங்களைக் காத்திட முடியும்..
4.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிப் பிறவியில்லா நிலை அடைய முடியும்
5.அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று என்றுமே அழியாத வாழ்க்கை வாழ முடியும்.