ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 8, 2019

ஒருவர் நம்மைக் குறையாகக் கூறியவுடனேயே நம் நல்ல உணர்வுகள் மாறுகிறது… அப்பொழுது அந்த நல்லதைக் காக்கின்றோமா…?

வாழ்க்கையில் நாம் பிறருடைய நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய தவறான உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்பதை நாம் அறிந்திட வேண்டும். (இது முக்கியம்)

அங்கிருந்து வந்தவுடனே… நீ மோசமான ஆள்..! இப்படிச் செய்தாய்… அப்படிச் செய்தாய்..! என்று ஒருவர் நம்மிடம் சொல்லும் பொழுது என்ன ஆகிறது…?

என்ன..? நம்மைப் பற்றி இப்படி எல்லாம் சொல்கிறான்…!
1.நான் ஒன்றுமே சொல்லவில்லை… ஆனாலும் இந்த மாதிரிச் சொல்கிறானே..! என்ற
2.இந்தக் கோப உணர்வுகள் வந்தவுடனே அவன் உணர்வுகள் நமக்குள் இயக்குகிறது.
3.இருடா… இரண்டிலே ஒன்று பார்க்கிறேன் பார்…! என்ற இந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து விடுகிறது.

ஆக… அவன் செய்யும் அல்லது சொல்லும் தவறான உணர்வை நாம் ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது
1.நமக்குள் (உடலுக்குள்) உள்ளே அது நின்று அணுவாக மாறி
2.அவன் நினைவை நமக்குள் கூட்டி
3.அந்த அணுக்கள் பெருக்கப்பட்டு
4.நம்மை எப்படிக் குற்றவாளி என்று முதலில் அவன் ஆக்கினானோ
5.அவனுடைய உணர்வுகள் நமக்குள் நின்று அதே குற்றவாளியாக ஆகிவிடுகின்றோம்.

அதாவது…
1.அவன் சொன்னபடி அவன் உணர்வை நாம் ஏங்கி எடுக்கும் பொழுது
2.நமக்குள் (தவறாக) அதுவாக மாறிவிடுகின்றது.

இதெல்லாம் எப்படி…? என்றால் இதைப் போன்ற நிலைகளை எல்லாம் இன்று கண்கூடாகப் பார்க்கலாம். இன்றைய அரசியலில் எப்படியெல்லாம் வேஷங்கள் போடுகிறார்கள் என்று…!
1..நேற்று வரையிலும் எதிரியாக வைத்துப் பேசுவார்கள்
2.ஆனால் இன்றைக்கு அதையே வித்தியாசமாக மாற்றுவார்கள்.

ஆகவே இதைப் போல உணர்வுகள் கலந்து கலந்து வாழ்க்கையிலே எத்தனையோ விதமான உணர்வுகள் அங்கே படுகின்றது.

எப்படி இருந்தாலும் அவர்கள் கலந்து கொண்ட உணர்வுகள் இந்த உடலின் இச்சைக்குத்தான்…! ஆக
1.இந்த நாட்டையும் காக்க முடியாது
2.வீட்டையும் காக்க முடியாது…
3.தன்னையும் காக்க முடியாது.

அரசியல் பேதம் கொண்டு பேருக்கும் புகழுக்கும் வேண்டும் என்றால் இவர்கள் ஆட்டம் ஆடலாம். இந்த உடலுக்குப் பின் என்ன ஆகிறது…! என்று இத்தனை நிலையும் அவருக்குப் புரியாத நிலைகளில் கடைசியில் மடிந்து விடுகின்றனர். பிறரிடத்தில் இடும் சாப அலைகளும் பாவ அலைகளும் அவருக்குள் ஊடுருவி இயக்கிவிடும்.

இன்று மனிதனாக இருப்பினும் பிறரை எளிதில் சிரமப்படச் செய்வோர் வேதனைப்படச் செய்வோர் அனைவரையுமே இந்த உடலுக்குப் பின் அசுர உணர்வு கொண்ட மிருகங்களாக இந்த உயிர் உருவாக்கிவிடும்…! என்ற நிலைகளை யாரும் மறந்திட வேண்டாம்.

ஒவ்வொரு நொடியிலேயும் பிறருக்குத் தீங்கு செய்யும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள்
2.நம் உடலுக்குள் நல்லவைகளைக் கொன்று குவிக்கும் தீய அணுக்களாக உருவாகி
3.மீண்டும் நம்மை நரகலோகத்தைச் சந்திக்கும் நிலைகளுக்கு அனுப்பி விடுகின்றது.

இதை எல்லாம் மாற்றிடத் தான் அந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகளை “அது எப்படி வளர்ந்தது…? எப்படி இயக்குகிறது…?” என்ற நிலைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மெய் ஞானிகளின் உணர்வுகளை ஊழ்வினை என்ற ஞான வித்தாக உங்களுக்குள் மீண்டு மீண்டும் பதிவு செய்து கொண்டே வருகின்றோம் (ஞானகுரு).

1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் இடையூறு வருகின்றதோ
2.அப்பொழுதெல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞானத்தின் வழித் தொடர் கொண்டு நீங்கள் செயல்பட்டு
3.இருளை வென்று ஒளியாக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலக்கப்படும் பொழுது
4.உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.. தீமைகள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்றும் தெளிவாக உணர முடியும்.

உணர்ந்த நிலையில் தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் அந்தத் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளி என்ற உணர்வுகளை எடுத்து ஒளியான அணுக்களாக உங்களுக்குள் உருவாக்க வேண்டும்.