ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 3, 2019

குரு நமக்குக் கொடுக்கும் அருள் வாக்கைப் பேணிக் காக்கின்றோமா…?


ஒரு சமயம் குருநாதர் உனக்குத் தங்கம் செய்யத் தெரியுமாடா…? என்று என்னைக் (ஞானகுரு) கேட்டார்..?

எனக்கென்ன சாமி தெரியும்…! என்று சொன்னேன்.

ஈயக்கட்டியை வாங்கிக் கொண்டு வா… ஒரு இரும்புக் கரண்டியைக் கொண்டு வா… என்றார். வாங்கிக் கொண்டு வந்தேன்.

காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனார். அங்கே “சில மரங்களுக்கு முன்னாடி இருக்கும் குப்பைகளை எல்லாம் காண்பித்து…” இதை எல்லாம் எடுத்துக் கொண்டு வா..! என்றார்.

அதை எல்லாம் அள்ளிப் போட்டு நெருப்பை வைத்துக் கொளுத்துடா என்றார். குப்பை எரிந்த பிற்பாடு பார்த்தோம் என்றால் அதிலே இருக்கும் சத்துகள் எல்லாம் ஈயத்தில் இறங்கி அடுத்தாற்போல் பார்த்தால் “தங்கமாக” இருக்கிறது.

குருநாதர் இந்தப் பக்கம்… அந்தப் பக்கம்… என்று பல இடத்திலிருந்து எனக்குத் தெரியாமல் தான் குப்பையை அள்ளச் சொன்னார். நானும் அதை எல்லாம் குறித்து (அடையாளம்) வைத்துக் கொண்டேன்.

எல்லாம் செய்த பிற்பாடு தங்கக் கட்டியாகி விட்டது. குருநாதரிடம் சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வாத்தியார் ஆசாரியார் எல்லாம் என்னிடம் பழக்கமானவர்கள் இருந்தார்கள்.

குருநாதர் செய்த தங்கக் கட்டியை விற்கச் சென்றேன். அப்பொழுது அந்தத் தங்கக் கட்டியின் தரம் எப்படி இருக்கிறது… பாருங்கள்..! என்றேன்.

நீ பைத்தியக்காரரிடம் (ஈஸ்வரபட்டர்) ஏன் சுற்றுகிறாய்…? என்ற காரணம் இப்பொழுது தான் தெரிகிறது என்றார்கள் அவர்கள். நீ சரியான “காரியப் பைத்தியம் தான்…” என்றார்கள்.

நீ எவ்வளவு வேண்டுமானாலும் தங்கத்தைச் செய்து கொண்டு வா.. நான் வாங்கிக் கொள்கிறேன்…! என்றார் அந்த ஆசாரி.

முதலில் குருநாதர் தங்கம் செய்த மாதிரியே அவருக்குத் தெரியாமல் நானும் செய்து பார்த்தேன். தங்கம் வந்துவிட்டது…! அதைச் செய்த பிற்பாடு ஆசாரியிடம் கொடுத்த பிற்பாடு அவர் என்ன செய்தார்…?

அட அடா… எனக்குக் கொஞ்சம் வழி கொடுத்தால் நான் எத்தனையோ செய்வேன்.. அடுத்து வாத்தியார் என்ன செய்தார்…? அட.. நீ செய்யாமல் போனால் பரவாயில்லையப்பா…! என்று அந்த வாத்தியார் என்னைச் சுற்றி சுற்றி வந்தார். நான் போகும் பக்கம் எல்லாம் வந்தார்.

கொஞ்சம் போல.. ஒரு கோடி மட்டும் காட்டிவிடு…! என்றார். நீ பாவம் செய்ய வேண்டாம் நான் அதைச் செய்து கொள்கிறேன். உனக்கு வேண்டிய கட்டடம் எல்லாம் கட்டித் தருகிறேன்.

அடேயப்பா..! அவர் என்னைச் சுற்றியே வந்தார். இப்படித் தங்கம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் ரொம்பப் பேர் என்னைச் சுற்றி வந்தார்கள் சிறிது காட்டிக் கொடுங்கள் என்று…!

தங்கமே எனக்குச் செய்யத் தெரியாது என்றேன்.

இல்லை… நீங்கள் தங்கத்தை விற்று வந்திருக்கின்றீர்கள்… அது எப்படி…? மிகவும் நயமான தங்கம் என்று எல்லோரும் சொல்கிறார்களே…! என்று கேட்டு நான் எங்கே போனாலும் துரத்திக் கொண்டே வருகின்றார்கள்.

காரணம்… குருநாதர் ஒவ்வொரு தாவரத்திலும் என்ன சத்து அடங்கி இருக்கின்றது…? என்று காட்டினார்.
1.ஒவ்வொரு தாவர இனங்களின் உணர்வும் எப்படி மாறியது…?
2.அந்தத் தாவர இனச் சத்துக்களைச் சூரியன் எப்படி எடுத்து வைத்திருக்கிறது…?
3.அதை எடுத்து அலைகளாக மாற்றும் பொழுது நட்சத்திரங்கள் இரண்டு மோதும் பொழுது இந்த உணர்வுகள் எப்படி அதிலே இணைகிறது…?
4.அது இணந்த பின் அதனுடைய மாற்றங்கள் எப்படி மாறுகிறது…? என்கிற வகையிலே குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

இதை எல்லாம் உங்களுக்குச் சொல்லால் சொல்லி நிரூபிக்க வேண்டும் என்றால் உங்கள் மனதில் வைத்திருக்க முடியாது.

ஆனால் செய்து காண்பித்தோம் என்றால் சாமி சொல்லி விட்டார் அல்லவா… நாமும் செய்து பார்ப்போம் என்று
1.இந்த ஆன்மீக நிலையை எடுப்பதற்குப் பதில்
2.இந்த வாழ்க்கைக்குத் தேவை என்று “பணத்தின் மீது” ஆசை வைத்து விடுவீர்கள்.

அந்த மாதிரிப் போனவர்கள் நிறைய உண்டு… இன்றும் இருக்கின்றார்கள்.

“சாயிபாபா” லிங்கத்தை எப்படிக் கக்கி எடுத்துக் கொடுக்கின்றார்…! என்று ஒரு பையனுக்கு எடுத்துக் காண்பித்தேன். அவன் செய்தான்… அதற்குப் பின்னாடி அவன் பெரிய கடவுளாக மாறிவிட்டான்.

சிலருக்கு இந்த மாதிரி விவரங்கள் எல்லாம் சொன்னவுடனே தனித் தனிக் கடவுளாக மாறி
1.ஈஸ்வரபட்டர் தனித்து (SPECIAL) அவர்களுக்குக் கொடுத்தார் என்று
2.இந்தக் குருநாதரை மறந்து விட்டார்கள்.

உலகத்தைப் பற்றி அறிய வேண்டும் என்று சிலருக்குக் காண்பிக்கப்படும் பொழுது அதிலேயும் “எல்லாம் தெரிந்து விட்டது…!” என்று சில பேர்
1.இன்னும் கொஞம் தானே…
2.அப்புறம் பிடித்தால் போய்விட்டது என்று
3.எம்மை (ஞானகுருவை) மறந்தவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

இப்பொழுதும் அப்படி குருவை மறப்பவர்கள் உண்டு. ஏனென்றால் தனித்து இந்த உடலின் ஆசை தான் வருகிறது.

மேற்கொண்டு அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்ற நிலையோ இயற்கை எப்படி இருக்கிறது….? அதிலே நீங்கள் எப்படி வளர வேண்டும்…? என்ற உண்மையைச் சொன்னாலும் கூட இந்த உடல் இச்சையே வருகிறது.

அந்தப் பேரின்பப் பெருவாழ்வு என்ற அழியாத ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்ற ஆசை வருவதில்லை.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாக அந்த உண்மைகலை உணர வேண்டும் என்பதற்கே அனுபவமாகக் கண்டதை வெளிப்படுத்துகின்றேன்.