ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 8, 2016

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு எப்படிச் சாஸ்திரம் செய்ய வேண்டும்?

நம்முடன் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிராத்மாக்களை சாங்கிய முறைப்படி செய்து மீண்டும் ஆவி நிலை ஆக்காதபடி மந்திரக்காரர்களின் கையில் சிக்கி அவன் ஆட்டிப்படைக்கும் பொம்மையாக ஆக்காதபடி அருள் ஞானிகள் காட்டியபடி நாம் விண் செலுத்தப் பழக வேண்டும்.

விநாயகரை வணங்கப்படும் பொழுது இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று பல முறை ஏங்கித் தியானியுங்கள்.

தியானித்துவிட்டு இந்த உண்மைகளைக் காட்டிய சப்தரிஷிகளை எண்ணி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பில் கலந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்திட வேண்டும் என்று உந்திச் செலுத்துங்கள்.

 அங்கே உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்தில் இணைந்து வாழ வேண்டும் இனி பிறவியில்லா நிலைகள் அடையவேண்டும் என்று உங்கள் உணர்வின் வலு கொண்டு அந்த ஆன்மாக்களைச் செலுத்துங்கள்.

ஆனால், அதற்கு மாறாக இங்கிருந்து கொண்டு சென்று உடலை எரித்துவிட்டு சாம்பலைக் கங்கையிலே கரைத்துவிட்டு மாவிளக்கை வைத்து நெய் தீபமிட்டு விநாயகருக்கு நாம் அர்ச்சனை அபிஷேகம் செய்துவிட்டால் இதற்குப் பெயர் “மோட்ச தீபம்” என்றால் இது சாங்கியம் தான் – சாஸ்திரமல்ல.

இப்படிச் செய்தால் சாங்கிய சாஸ்திரம் தான்.

உடலுடன் இருக்கும் நாம் அருள்ஞானிகளின் உணர்வை நமக்குள் செருகேற்றி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை அந்தச் சூட்சம சரீரத்தை விண்ணிலே உந்தச் செய்து சப்தரிஷி மண்டல ஒளிக் கடலில் இணைக்கப்பட்டு உடல் பெறும் உணர்வை அங்கே தான் கரைக்கவேண்டும்.

சூரியன் சுழலும் பொழுது நஞ்சைப் பிரிப்பது போல நஞ்சைப் பிரித்திடும் அருள் ஞானிகளின் வட்டத்தில் செலுத்தப்படும் பொழுது உடல் பெறும் உணர்வின் இயக்கத்தைத் தடைப்படுத்தி உணர்வின் ஒளியாக என்றும் ஒளியின் சரீரமாக ஆவார்கள்.

இவ்வாறு உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் குலங்களின் தெய்வங்களான உயிராத்மாக்களை இந்தச் சாஸ்திர விதிப்படி ஒளியின் சரீரம் ஆக்கப்பட வேண்டும்.

அவர்கள் முன் சென்றால் அவர்களின் உணர்வின் இயக்கம் நமக்குள்ளும் உண்டு. நம் எண்ணத்தால் விண்ணை நோக்கி ஏகி எளிதில் அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் இங்கே பெற முடியும்.

நமக்குள் வளரும் இந்த ஆற்றலைக் கொண்டு வீட்டில் கருவிலே வளரும் அந்தச் சிசுக்களுக்கு இந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் ஒவ்வொரு நோடியிலேயும் பேராற்றல் மிக்க அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இந்த உணர்வு கொண்டு செய்து பாருங்கள்.

உங்கள் எண்ணம் கருவின் சிசுவிற்குள் விளையப்பட்டு அந்தக் கருவே தீமையை அகற்றும் பெரும் மகானாக வந்து சேரும்.

எதிர்காலத்தில் வரும் (விஞ்ஞானத்) தீமைகளிலிருந்து விடுபட நீங்கள் செய்வீர்கள். செய்ய வேண்டும் என்பதற்குத்தான் சொல்கின்றேன்.

நான் இதைப் பேசுகின்றேன் என்று யாரும் எண்ண வேண்டாம். எனக்கு இதெல்லாம் தெரியாது. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்வின் செயலாக்கங்கள்தான் இதைப் பேசுகின்றது.

அவர் காட்டிய வழியில் நீங்கள் அனைவரும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன். எமது அருளாசிகள்.