ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 1, 2016

சாஸ்திரப்படி ஆலயத்தின் பண்புகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

ஒரு சாதாரண மனிதனும் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காகச் சாஸ்திரப்படி கோவில்களில் சிலைகளை உருவாக்கிக் கதைகளை எழுதினார்கள் ஞானிகள்.

உயிரின் இயக்கத்தால் நற்குணங்கள் எவ்வாறு நம்மை இயக்குகின்றது என்ற காவியங்களைப் படைத்தனர். நல்ல உணர்வுகளை எப்படிப் பெறவேண்டும் என்றும் அதில் காட்டினார்கள்.

அதே சமயத்தில் நல்ல உணர்வுகளை மகரிஷிகள் தன்னுள் எப்படி எடுத்தார்கள் என்றும் தனது வாழ்க்கையில் தீமைகளை அகற்றி எதன் வழி வாழ்ந்தார்கள் என்றும் காவியப்படைப்பிலே மூலங்கள் உண்டு.

அவர்கள் சொன்ன சாஸ்திரப்படி நாம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் என்று இந்த உணர்வினை வலுப் பெறச் செய்தல் வேண்டும்.

ஆக, நமக்குள் வரும் தீமையின் தன்மையைக் குறைக்கப்படுவதற்கே சாஸ்திரவிதிப்படி ஆலயங்களை அமைத்தனர்.

இன்று ஒரு கம்ப்யூட்டரை இயக்கப்படும் பொழுது நாம் பல தட்டெழுத்துக்களை அடித்து அதிலே மொத்தமாகக் கூட்டி (PROGRAM) மறுபடியும் அழித்துவிட்டு ஒன்று சேர்த்து அதை இணைத்து வைத்துவிட்டால் (RESTART) மீண்டும் அது தன்னுடைய நிலைகளில் ரிக்கார்டு ஆன பிற்பாடு அந்தக் கணக்கின் தன்மை எளிதில் கொடுக்கின்றது.

தட்டெழுத்துக்களின் மூலம் நாம் எதைப் பதிவு செய்து இந்தக் கம்ப்யூட்டரில் இயக்குகின்றோமோ அது உருவத்தையும் அமைக்கின்றது.

இதைப் போன்று தான் உணர்வலைகளை நமக்குள் கவர்ந்து கொண்ட பின் எது நமக்குள் பதிவாகின்றதோ அந்தப் பதிவின் நிலைகள் எவ்வாறாகிறது என்ற நிலையும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

1008 குணங்களை 1008 சக்திகளாகக் காட்டி மனிதனுக்குள் எவ்வாறு இயக்குகின்றது என்று அதைத் தெய்வ குணங்களாகப் படைத்தார்கள்.

இருளைப் பிளந்து பொருளைக் காணும் நிலை “ஆறாவது அறிவாக” நமக்குள் இருப்பினும் அதனை மெய்ப்பொருள் கண்டுணர்ந்த மெய் ஒளியான அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இதற்குள் இயக்கச் செய்ய வேண்டும்.

அவ்வாறு இயக்கப்படும் பொழுது நமது வாழ்க்கையில் வரும் தீமைகளை உயிரால் எப்படிப் பிரித்தாள்வது என்ற நிலைகள் வரும். ஆகவே, இதுதான் “மெய்ப்பொருள்”.

நாம் வெளியிடும் மெய் உணர்வின் தன்மையை ஒரு சூரியனின் காந்தச் சக்தி அதைக் கவர்ந்து கொள்கின்றது.

மெய் உணர்வக் கவர்ந்து கொண்டபின் ஒருவர் தவறு செய்யும் உணர்வை நாம் பார்த்தாலும் அந்த மெய்யை நுகரப்படும் பொழுது மெய் உணர்வாகத்தான் இயக்கும்.

அந்தத் தவறின் உணர்வு நம்மை இயக்காது.

இதைப் போல அந்த மெய்ஞானிகள் தீமையை அகற்றிய ஆற்றல் மிக்க உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து அலைகளாக வைத்துக் கொண்டுள்ளது.

மெய்ஞானிகள் உணர்வின் நினைவு கொண்டு இந்தத் தெய்வச் சிலையை உற்றுப் பார்த்து விண்ணை நோக்கி ஏகி அந்த உணர்வைத் தனக்குள் பதிவு செய்து கொண்டால் இதனின் வலுவின் தன்மை கொண்டு “விண்ணிலிருக்கும்…,” அந்த மெய்ஞானிகளின் ஆற்றலைப் பெற முடியும்.

மெய்ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் எப்படித் தீமைகளைப் பிளந்தார்களோ துன்பங்களிலிருந்து விடுபட்டு துன்பத்தை நீக்கிடும் உணர்வின் தன்மையைத் தனக்குள் விளைய வைத்தார்களோ அதையெல்லாம் நாமும் பெற முடியும்.

ஆகவே, இந்த மனித வாழ்க்கையில் அந்த மகரிஷிகளின் உணர்வை நம் நல்ல உணர்வுடன் இணைத்து அதை வளரச் செய்து கொள்ளப் பழகிக் கொள்தல் வேண்டும்.

பழகிக் கொண்டால் நம் வாழ்க்கையில் வரும் எத்தகைய நிலைகளைக் கேட்டறிந்தாலும் பார்த்தாலும் அந்தத் தீமைகள் நமக்குள் வளராது அதைப் பிரித்துத் தீமையற்ற நிலைகளாக மாற்றிக் கொள்ள முடியும்.

இருளை நீக்கிடும் உணர்வின் தன்மையை ஒவ்வொருவரும் பெற்று ஒளியின் அலையாக நமக்குள் பெருக்கும் நிலைக்காகத்தான் சாஸ்திரங்கள் ஆலயங்களை அமைத்தது.

நம் ஞானிகள் சாஸ்திரப்படி உருவாக்கிய ஆலயங்கள் அனைத்தும் அருள்ஞானப் பொக்கிஷங்கள். சாதாரண மனிதனும் ஞானத்தைப் பெறச் செய்யும் திறவுகோல் அது. 

இந்த ஆலயத்தின் பண்புகளை நாம் தெரிந்து கொண்டால் இந்த உண்மையை உங்கள் அனுபவத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.