ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 18, 2016

விஞ்ஞானிகள் கண்டுணர முடியாத நிலைகளை குருநாதர் காட்டினார், உணர்த்தினார்

குருநாதர் காட்டுப் பகுதியில் என்னை அழைத்துச் சென்று தாவர இனங்கள் எவ்வாறு விளைகின்றது? இந்த உயிரணுக்கள் எவ்வாறு விளைகின்றது?

இந்தக் கோள்கள் தனக்குள் மற்ற சத்துக்களைக் கவர்ந்து எவ்வாறு அது வளர்கின்றது? என்ற நிலைகளைச் சாப்பாடு கூட இல்லாதபடி காட்டில் அமர்த்தி இதை அறியும்படிச் செய்தார்.

விஞ்ஞானிகளோ பல நிலைகள் கொண்டு இயந்திரத்தின் துணை கொண்டு கண்டு கொண்டே இருக்கின்றார்கள். இன்று முழுமையும் காணவில்லை.

அன்று மெய்ஞானிகள் தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் ஆற்றலின் துணை கொண்டு நம் குருநாதரும் அதை அறிந்து அதை நாம் அறியும் நிலைக்கு எமக்குள் அதைப் பதியச் செய்தார்.

அந்தப் பதிந்த உணர்வின் நினைவு கொண்டு விண்ணை நோக்கும் பொழுதுதான் விண்ணிலே நடக்கும் அதிசயங்களை உணரும்படிச் செய்கின்றார். சில நேரங்களில் காட்சியாகவும் பெறும்படிச் செய்தார்.

அதையெல்லாம் கண்டேன், உணர்ந்தேன், தீமைகளை வென்றிடும் ஆற்றலை எனக்குள் வளர்த்துக் கொண்டேன்.

அப்படிக் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகளைத்தான் உங்களுக்குள் தொடர்ந்து உணர்த்திக் கொண்டே வருகின்றேன். நீங்களும் அதையெல்லாம் பெற்று தீமைகளை வென்றிடும் ஆற்றல்கள் பெறவேண்டும். உங்களால் முடியும்.

இந்த மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து உங்களுக்குள் விளைந்த உணர்வுகள் பரவி கேட்டுணர்ந்தோர் உணர்வுகளிலும் தீமைகளை வென்றிடும் ஆற்றலாகப் பரவ வேண்டும்.

தீமைகளை வென்றிடும் உணர்வின் அணுக்கள் விளைந்திட வேண்டும் என்ற ஆசையில் தான் குருநாதர் காட்டிய வழிகளில் மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்று அந்த அலைகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றேன்.

அதே போல் மகரிஷிகளின் ஆற்றலைப் பெறவேண்டும் என்று நீங்கள் தியானிக்கும் பொழுது தியானத்தில் உங்களுக்கு அந்தச் சக்தி நிச்சயம் கிடைக்கும்.

அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறும் சந்தர்ப்பத்தை உங்களுக்குள் உருவாக்கும் நிலைக்குத் தான் இந்த உபதேசம். அருள் ஞான உணர்வினை நீங்கள் மகிழ்ந்து மகிழ்ச்சியுடன் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

குருநாதர் பெற்ற சக்திகளை எமக்குக் கொடுத்த உணர்வுகள் அனைத்தும் ஆயிரத்தில் ஒரு பங்கைத்தான் உங்களுக்குள் பதிவு செய்துள்ளேன்.

அதை வளர்த்துக் கொண்டால் உங்கள் உடலில் இதற்கு முன் அறியாது சேர்ந்த இருளை நீக்கிடும் ஆற்றல் பெறுவீர்கள். அதில் மறைந்த உணர்வின் பொறிகளை நீங்கள் அறிந்து இந்த வாழ்க்கையில் தீமையற்ற உணர்வுகளாக வளர்த்துக் கொள்ள முடியும்.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் கடுமையான நிலைகளைச் சந்திக்கின்றீர்களோ அப்பொழுதெல்லாம் யாம் உபதேசித்த உணர்வின் தன்மையை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது அதிலிருந்து விடுபடும் ஆற்றல் பெறுவீர்கள்.

நம் உடலையும் நம் ஆன்மாவையும் பரிசுத்தப்படுத்த முடியும். உங்களில் விளைந்த ஆற்றல் மிக்க உணர்வுகளை இந்தப் பூமியிலே பரவச் செய்து இந்தப் பூமியையும் நாம் பரிசுத்தப்படுத்த முடியும்.

குரு காட்டிய உணர்வுகளைப் பதியச் செய்த இந்த நினைவாற்றலின் வலுக் கொண்டு துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் சக்திகளைப் பெற்று அவைகளின் துணை கொண்டு அனைவரையும் பெறச் செய்வோம்.