ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 28, 2016

ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி "இவ்வளவு தான்..," என்று அளவிட முடியாது

உயிருடன் ஒன்றிடும் உணர்வினை ஒளியாக மாற்றி விண்ணின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்து என்றும் அழியாத ஒளிச்சரீரமாக மாற்றும் நிலை நிலையே இப்பொழுது உபதேசிக்கும் தியானத்தின் அற வழிகள்.

ஆக, எமது உபதேசத்தைக் கேட்டுத் தியானமிருக்கும் அனைவருமே குடும்பத்திற்குள் ஒற்றுமையின் நிலையைப் பெருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இல்லை என்றால் பயனற்றது. ஆகவே, பயனுள்ள நிலையாகப் பெருக்குதல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி இவ்வளவு தான் என்று உங்களால் அளவிட முடியாது. “அவ்வளவு உயர்ந்த சக்தியை..,” குரு அருளால் உங்களுக்குள் பதியச் செய்திருக்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் துணை கொண்டு பேரண்டத்தின் இயக்கத்தையே கவர்ந்து அந்த உணர்வின் தன்மை கொண்டு அறியாது வந்த இருளை மாய்த்திடும் சக்தியாக குரு உங்களுக்குக் கொடுக்கும் உணர்வைத்தான் ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

இதை நீங்கள் அமர்ந்து எளிதாகக் கேட்கின்றீர்கள், படிக்கின்றீர்கள். நான் காடு மேடெல்லாம் அலைந்துதான் அதைப் பெற்றேன்.

பெற்ற உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்டதை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும்.

உங்களை அறியாது சேர்ந்த இருளிலிருந்து உங்களை நீங்கள் மீட்டிட வேண்டும். அந்த எண்ணத்தின் வலு கொண்டே உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும்.

எவரும் உங்களைக் காக்க முடியாது. “காத்திடுவேன்…, என்று சொல்வதெல்லாம்.., பிரமையே”.

யாரையும் புகழ் பாடும் நிலைக்கும் போற்றித் துதிக்கும் நிலைகளை நாம் மறப்போம். அவர்கள் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற ஏக்கத்தை நமக்குள் பெருக்குவோம்.

ஆகவே, இந்த மனித வாழ்க்கையில் குருநாதர் காட்டிய அருள்வழிப்படி, விண்ணின் ஆற்றல் நீங்கள் பெற்று, இந்த மண்ணின் ஆற்றலுக்குள் இருக்கும் தீமைகளை அகற்றுங்கள்.

ஆகவே, ஒவ்வொரு நாளும் இதைத் தெளிவாகத் தெளிந்து, இந்த வாழ்க்கையில் குருநாதர் காட்டிய அருள் வழியில், நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அதே உணர்வின் சக்தியாக, ஒளியாக மாறும் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் நினைவலைகள் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.