ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 14, 2016

ஜாதகமே நம் விதியாக இன்று இருக்கின்றது - விதி எது...? மதி எது...?

இன்று எடுத்துக் கொண்டால் ஜோதிடம் ஜாதகத்தை நாம் பார்க்கின்றோம். ஜாதகத்தைப் பார்த்து “நேரம்.., காலம்..,” எல்லாம் பார்த்துச் சாங்கியத்தைப் பார்த்து அதற்குப் பிறகு திருப்பூட்டுகின்றார்கள்.

திருப்பூட்டி இங்கே வீட்டிற்கு வந்த பின் பத்தே நாட்களில் கணவனும் மனைவியும் பிரிந்து விடுகின்றார்கள்.

இன்று பார்க்கின்றோம்…, கல்யாணம் ஆன பின் எத்தனையோ பேர் இரண்டாவது நாளிலோ, ஒரு மாதத்திலோ மூன்று மாதத்திலோ அவர்கள் பிரிந்து விடுகின்றார்கள்.

அதே சமயத்தில் வேதனை தாளாது, “என் கணவர் இப்படிப் பேசினார்.., என் மாமியார் இப்படிப் பேசினார்.., என்ன வாழ்க்கை?” என்று தன்னை மாய்த்துக் கொள்ளவும் செய்கின்றார்கள்.

அப்பொழுது இவர்களுடைய ஜாதகமும் ஜோதிடமும் என்ன செய்தது…?

ஆகவே, இந்த ஜாதகம் “நம்மைக் காக்காது”.

நம்முடைய ஜாதகம் எதுவாக இருக்க வேண்டும்?

ஞானிகள் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் பெருக்கிக் கொண்டோம் என்றால் நம் வாழ்க்கையில் அவ்வப்பொழுது வரும் தீமைகளை அகற்றிக் கொள்ள முடியும்.

அதன் மூலம் தீமைகளை வென்றிடும் அருள் சக்திகளை நமக்குள் வளர்த்து ஒளியின் அணுக்களாக விளைய வைத்து மெய்ப்பொருளுடன் ஒன்றி என்றுமே நாம் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.

ஜாதகங்களில் பேருண்மையின் நிலை இதுதான்.

நாம் ஜாதகங்களைப் பார்த்து அதன்படி எதையெல்லாம் அவர்கள் நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோமோ இதுவே “விதி..,” ஆகிவிடுகின்றது.

இந்த “விதியின்” துணை கொண்டு அந்த மதியைத்தான் நாம் செலவழித்து அந்த மதியின் வழியில் செல்லப்படும் பொழுது விதிப்படி அந்த உணர்வு கொண்டு இந்த வாழ்க்கையில் நாம் நசிந்து விடுகின்றோம்.

ஆகவே, நாம் எதை விதியாக அமைக்க வேண்டும்?

அருள் மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்தியை நமக்குள் விதியாக அமைத்து அவர்கள் வழியில் நாம் மதி கொண்டு செயல்பட வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி தன் கணவர் பெறவேண்டும் தன் மனைவி பெறவேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி தன் தாய் தந்தையர் பெறவேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி தன் மாமன் மாமியார் பெறவேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி தன் குழந்தைகள் பெறவேண்டும்.

எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியால் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறவேண்டும். எங்களைப் பார்ப்போர் அனைவரும் நாங்கள் பார்ப்போர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும் என்று “இந்த மதி கொண்டு” நாம் செயல்பட வேண்டும்.

அப்படிச் செயல்பட்டோம் என்றால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் சென்றடையலாம். மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நமக்குப் பாதுகாப்புக் கவசமாக அமையும்.

ஆகவே, மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் பின்பற்றி மகரிஷிகளின் ஆற்றலை நாம் பெறத் தியானிப்போம். மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற தவமிருப்போம்.

நம்முடைய தியானத்தின் பலன் நாம் வெளியிடும் மூச்சலைகள் அனைத்தும் நமக்குள்ளும் சரி நாம் எடுத்துக் கொண்ட நிலைகள் இந்தப் பூமியிலே படரச் செய்வோம்.

மெய்ஞான உணர்வுகளை நமக்குள் வளர்த்து நம் பார்வையால் பேச்சால் மூச்சால் உலக மக்கள் அனைவரையும் அவர்கள் வாழ்க்கையில் அறியாது வரும் தீமைளிலிருந்து விடுபடச் செய்வோம்.