ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 5, 2016

மூன்றாவது வகுப்புப் படித்த என்னால் மெய்ஞானத்தை எப்படிப் பெற முடிந்தது?

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று நாம் எல்லோரும் பாடிக் கொண்டிருக்கின்றோம்.

தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன்தான் அணுவின் இயக்க ஆற்றலை அறிந்தவன். அணுவிற்குள் மறைந்துள்ள நிலைகளை உயிரின் இயக்கத்தால் உணர்ந்து இந்த உணர்வால் உணர்வின் தன்மை எப்படி இயக்குகின்றது என்று கண்டறிந்தவன் அகஸ்தியன்.

ஆகவே, அவன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை உலகெங்கிலும் பரவிப் படர்ந்துள்ளது. எவரொருவர் அவரைப் பின்பற்றுகின்றனரோ அதே ஒளியின் சிகரமாக அந்த சிவமாக முடியும்.

அதைத்தான் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி.

தென்னாட்டிலே தோன்றியவன் மனித உடலின் இச்சையை மறைத்து உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மை அவனுக்குள் எடுத்து அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் இரையாக்கி இன்றும் அவன் ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நாம் நுகர்ந்தால் அவன் அடைந்த நிலைகளை நமக்குள் இரையாக்கி அந்த இரையின் உணர்வின் செயலாக உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நாமும் நிலைத்திருக்க முடியும்.

என் தாய் பல கொடுமைகளில் சிக்கியிருக்கும் பொழுது அதன் கருவிலே நான் இருக்கப்படும் பொழுது தவித்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து எப்படியும் தான் காக்கப்படவேண்டும் என்ற நிலையில் பல தத்துவ ஞானிகளை எண்ணி ஏங்கியது.

என் தாயின் ஏக்கத்தில் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் பதிவானது. அந்தப் பதிவின் நிலைகள் கொண்டு தான் இந்த மெய் ஞானத்தை இன்று நான் வெளிப்படுத்த முடிந்தது.

மூன்றாவது வகுப்பே நான் படித்தாலும் இந்தத் தத்துவத்தைப் பேசுகின்றேன் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் விளைந்து அதன் வழிகளிலே தான் நானும் அருள் ஞானத்தைப் பெறமுடிந்தது.

நீங்கள் எல்லோரும் பெறும் நிலைகளுக்கு அந்த அருள்ஞானத்தை உபதேசிக்கும் பொழுது என்னுள்ளும் அது வளர்கின்றது.

இதைப் போலத்தான் எதிர்காலத்தில் நாம் நமது நாட்டையும் நம்மையும் நம் ஊரையும் காக்கப்படவேண்டும் என்றால் அந்த ஞானிகள் காட்டிய சாஸ்திர வழிகளில் திருமணம் ஆகும் தம்பதிகளுக்கும், அவர்கள் கருவில் உருவாகும் குழந்தைகளுக்கும் அந்த அகஸ்தியனின் ஆற்றலைப் பெறச் செய்ய வேண்டும்.

 அகஸ்தியனைப் பிண்பற்றியவர்கள் வசிஷ்டரும் அருந்ததி போல இன்று அந்தச் சப்தரிஷி மண்டலங்களில் இணைந்தே வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

ஏனென்றால், இன்றைய நிலைகள் தாவர இனங்களாக இருந்தாலும் ஆண் மரம் பெண் மரம் என்று இருக்கும்.

ஆண் மரம் உமிழ்த்தும் உணர்வின் தன்மையைப் பெண் மரம் கவர்ந்தால் அதன் உணர்வின் தன்மை பலன் தருகின்றது.

இதைப் போன்று பெண் மரங்கள் உமிழ்த்தும் நிலைகளை ஆண் மரங்களும் கவர்ந்தால் அதனுடைய பலன்களும் அதனுடைய தன்மைக்குத்தக்க மாறுகின்றது.

நெகடிவ், பாசிடிவ் என்ற உணர்வின் தன்மை மோதும் பொழுது தான் பூமியின் சுழற்சியின் தன்மையும் இருக்கின்றது.

ஒரு உணர்வின் தன்மை நல்ல குணம் கொண்டு இருப்பினும் இன்னொருவர் தீமையின் நிலைகளில் வரப்படும் பொழுதுதான் எதிர் மோதலில் தீமை என்ற நிலையை அறிய முடிகின்றது.

தீமைகளிலிருந்து விடுபடும் நிலைகளும் உருவாகின்றது.

எதிர்நிலை இல்லை என்றால் உலக சுழற்சியும் இல்லை. விஷத்தின் தன்மை தாக்குதல் இல்லை என்றால் சூரியனின் சுழற்சியின் தன்மையும் இல்லை.

சூரியனின் சுழற்சியின் தன்மை வேகம் அடையவில்லை என்றால் நஞ்சின் தன்மையைப் பிரிக்கும் தன்மை இல்லை. ஆகவே, உணர்வின் வேகத்தை நமக்குள் கூட்டி நமக்குள் வரும் நஞ்சினை நீக்க அருள் மகரிஷிகளின் உணர்வைச் சேர்க்க வேண்டும்.

இல்லை என்றால் நாம் நஞ்சுக்குள் சிக்கி அதனின் தன்மை நமக்குள் கூடி கோள்களைப் போன்று இருள் சூழும் நிலையே வரும்.

கோள்களின் சுழற்சி வேகம் கூடும் பொழுதுதான் வரும் நஞ்சினை அது பிரித்துவிட்டு ஒளியின் சிகரமாக மாறுகின்றது.

நஞ்சால் இயக்கப்படும் உணர்வுகள் ஆக நஞ்சின் சுழற்சியின் வேகம் கூட அந்த வெப்பத்தின் தன்மை கொண்டு நஞ்சினைப் பிரித்து உலகைச் சிருஷ்டிக்கின்றது.

இது இயற்கையின் நியதி.

இதைப் போல நம்மை அறியாது உட் புகுந்த நஞ்சினை நீக்க அந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை நமக்குள் சேர்க்க வேண்டும். அந்த அகஸ்தியன் சென்ற பாதையில் ஒலி ஒளி என்ற நிலையில் அழியா ஒளியின் சரீரம் நாம் எல்லோரும் பெறவேண்டும்.

இந்தத் தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியனின் ஆற்றலை எந்நாட்டவரையும் பெறச் செய்வோம்.